கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, April 26, 2011

தமிழக அரசு பற்றி அவதூறு பரப்பும் அதிமுக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க மனு


தமிழக அரசு மீது அவதூறு குற்றச்சாட்டு கூறும் அதிமுக மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் திமுக வலியுறுத்தியுள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷிக்கு திமுக அமைப்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்பதோடு தற்போது இம்மாநிலத்தை ஆளும் கட்சியாகும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் (2011 மார்ச் 1) எங்களுக்கு எதிராக தவறான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை அதிமுக ஒரு வழக்கமாகவே கொண்டு இருக்கிறது. நாங்களும் அது பற்றி திரும்ப திரும்ப தங்களுக்கு தெரியப்படுத்தி வருகிறோம்.
இன்று காலை (25&4&2011 ) அதிமுக சார்பில் அதன் நிர்வாகிகளில் 4 பேர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருப்பதாக செய்தித்தாள்கள் மூலம் எங்களுக்கு தெரிய வந்துள்ளது. நேற்று தேர்தல் ஆணையத்திற்கு நிச்சயம் விடுமுறை விடப்பட்டு இருக்கும். ஆனாலும் அதிமுகவினர் அந்த புகார் குறித்த கடிதத்தை தேர்தல் ஆணையம் பெறுவதற்கு முன்பாக செய்தித்தாள்களுக்கு அளித்துள்ளனர். அதன் மூலம் என்ன தெரிகிறது என்றால், அவர்கள் வேண்டுமென்றே ஒரு விளம்பரத்திற்காகத் தான் இவ்வாறு செயல்பட்டுள்ளனர். எங்கள் அரசை பற்றி பொது மக்கள் அவதூறாக எண்ண வேண்டும் என்பதற்காக அவ்வாறு செயல்பட்டுள்ளனர் என்பது நன்றாக தெரிகிறது.
ஊடகங்களின் மூலம் வெளியான அந்த புகாரில் உள்ளதைப் பற்றி எங்களுக்கு தெரியவந்துள்ளது. என்னவென்றால், அதில் எங்கள் அரசு ‘காபந்து அரசு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, தலைமைச் செயலகத்தை புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து, புதியதாக அண்ணா சாலையில் அனைத்து வசதிகளுடன் கூடிய தலைமை செயலகத்துக்கு மாற்றி விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அவ்வாறு தலைமைச் செயலகம் இடமாற்றம் செய்யப்படும் போது, முக்கியப் கோப்புகள் பலவும் அழிக்கப்படுவதாகவும், எனவே தலைமைச் செயலகத்தை பாதுகாக்க மத்திய போலீஸ் படையின் துணையை நாடியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான அவர்களின் புகார்கள் மிகவும் அபத்தமானது என்பதுடன் தவறானதாகும். அத்துடன் ஒரு தீய நோக்கத்துடன் அந்தப் புகார்கள் அமைந்துள்ளன.
அதிமுகவினர் ஒரு முறை ஆட்சியில் இருந்துள்ள போதும், தற்போதைய அரசாங்கத்தை ‘காபந்து சர்க்கார்’ என்று குறிப்பிட்டிருப்பது அவர்களுக்கு அரசியல் சட்டம் மற்றும் நிர்வாக சட்டங்களில் அவ்வளவாக அனுபவம் இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. காபந்து சர்க்கார் என்றால், ஆளுனரின் வேண்டுகோளுக்கு இணங்க ஆட்சிக்காலம் முடிந்த பின்னரும் நீடிப்பது அல்லது பெருவாரியான ஆதரவை நிரூபிக்க தவறும்பட்சத்தில் அல்லது அதிக ஆதரவை நிரூபிக்க காத்திருக்கும் நிலையில் தற்காலிகமாக தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க ஆளுனர் கேட்டுக் கொள்ளும் நிலையில் செயல்படுவது தான்.
ஆனால் நாங்கள் அவ்வாறில்லை. எங்களது அரசானது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று என்பதுடன் இந்த ஆட்சிக் காலம் 2011 மே 14ம் தேதிதான் முடிவடைகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை பொறுத்தவரையில் நாங்கள் தெரிவித்துக் கொள்வது இதுதான். புதிய தலைமை செயலகத்தின் கட்டுமானப் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டது. அந்த புதிய தலைமை செயலக வளாகத்தை கடந்த ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் திறந்து வைக்கப்பட்டதாகும்.
அப்போதிருந்தே, பல்வேறு கட்டங்களாக அரசின் பல்வேறு துறைகள் புதிய தலைமை செயலகத்திற்கு இடம் மாறி வருகின்றன. அந்த நிலை தொடர்ந்து நீடிக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்னரே கூட பொதுத்துறை, உள்துறை, பொதுப்பணித் துறை, தொழில் துறை, சட்டமன்ற பேரவை அலுவலகம், ஊரக வளர்ச்சி துறை ஆகிய துறைகள் புதிய தலைமை செயலகத்தில் செயல்பட்டு வந்து கொண்டிருக்கின்றன.
அதுமட்டுமின்றி, புதிய தலைமை செயலகத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதும், ஆளுனர் உரை நிகழ்த்தியதும் நடைபெற்றுள்ளது. அமைச்சரவை கூட்டமும் ஏழு முறை நடைபெற்றுள்ளது. எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகளை எந்த வகையிலும் மீறாமல் மேற்கொள்ளப்படும் தொடர் நடவடிக்கைகள்தான் இவைகள்.
அத்துடன், முக்கிய கோப்புகளை இடமாற்றம் செய்யும் போது, அவைகள் அழிக்கப்படுவதாக தெரிவித்திருப்பது, மிகவும் அவதூறான ஒன்றாகும் என்பதோடு, அவைகள் தவறானதும் விஷமத்தனமானதுமாகும். இது ஆளும் கட்சியை மட்டுமின்றி ஒட்டுமொத்த அரசாங்கத்தையே குற்றம் சாட்டுவதாகும். இதுபோன்ற ஆதாரமற்ற நிலையில் தவறான புகார் அறிக்கை தருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும்.
மாநில தலைமைச் செயலகத்தை பாதுகாக்க மத்திய ரிசர்வ் காவல்படை அல்லது மத்திய பாதுகாப்புப் படையை கோருவது என்பது சரியானதாக இருக்காது. எனவே, நாங்கள் இத்தைகய புகார்களை கடுமையாக கண்டிக்கிறோம். அந்தப் புகார் கடிதத்தில் கையெழுத்திட்ட நால்வர் மீதும், அவர்கள் சார்ந்த கட்சி மீதும் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வாறு இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையர்கள் வி.எஸ். சம்பத், எச்.எஸ்.பிரம்மா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் ஆகியோருக்கும் இந்த மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment