கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, May 31, 2011

ஆட்சி மாறும்போது, பாடப் புத்தகமும் மாறுமா? - சமச்சீர் கல்விக்கு வந்த சோதனை!



ட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் அதிரடிகளை ஆரம்பித்துவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. புதிய சட்டசபையைப் புறக்கணித்துவிட்டு, பழைய கோட்டைக்கு இடம் மாறினார். அடுத்த தடம் மாறுதல்... தமிழகக் கல்வித் துறை விஷயத்தில் நடந்து இருக்கிறது. கடந்த தி.மு.க. அரசால் கொண்டுவரப்பட்ட உருப்படியான திட்டங்களில் சமச்சீர் கல்வி முறையும் ஒன்று என்பது பெரும்பாலான கல்வியாளர்கள் கருத்து.

'பல்வேறு விதமான பாடத் திட்டங்களை வைத்துக்கொண்டு அனைவருக்கும் பொதுவான கல்வியை எப்படித் தர முடியும்? அனைத்து விதமான பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பாடத் திட்டங்கள் தேவை’ என்று கல்வியாளர்கள் பல ஆண்டுகளாகச் சொல்லி வந்தார்கள். பெரிய அளவில் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி, இந்த முறையை அமல்படுத்தினார் கருணாநிதி. அந்த பாடத் திட்டத்திலும் பல குறைகள் இருந்தன... பிழைகள் இருந்தன. அனைத்தும் சரிசெய்யப்பட வேண்டியவைதான். ஆனால் அந்த பாடத் திட்டத்தையே அப்படியே தூக்கிக் குப்பையில் போடுங்கள் என்று ஜெயலலிதா உத்தரவிட்டு இருப்பதன் பின்னணி, கல்வித் துறையின் மீதான கரிசனத்தைவிட கருணாநிதி மீதான கோபம்தான் காரணமாக இருக்க முடியும்!

''சமச்சீர்க் கல்விப் புத்தகங்களை வழங்காமல் நிறுத்திவைக்க வேண்டும். பழைய முறைப்படியான புத்தகங்களை புதிதாக அச்சிட்டு வழங்குவதற்கு ஏற்ப, பள்ளிகளை ஜூன் 15-ம் தேதி திறக்க வேண்டும்!'' என்ற அமைச்சரவையின் இந்தத் திடீர் அறிவிப்பால், தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களிடம் பெரும் குழப்பம் ஏற்பட்டது. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கால்வாசிப் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. பல குடும்பங்கள் சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களை வாங்கி​விட்டார்கள். இந்த நிலையில் அரசாங்கம் அறிவிப்பைச் வெளியிட்டுள்ளது.

சமச்சீர்க் கல்வியை ஆதரிக்கும் கல்வியாளர்​கள் அரசின் முடிவுக்கு எதிராக வெகுண்டு எழுகிறார்கள். பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ''நீண்ட காலப் போராட்டத்துக்குப் பிறகு, கடந்த ஆண்டுதான் சமச்சீர் கல்வியை தி.மு.க. அரசு அறிமுகப்படுத்தியது. ஆசிரியர்கள், கல்வியாளர்கள் துறை சார் வல்லுநர்கள் அடங்கிய குழு முடிவு செய்த பின்னர்தான், இந்தப் பாடத் திட்டம் கொண்டுவரப்பட்டது. புதிதாகப் பதவி ஏற்றுள்ள இந்த அரசு, வல்லுநர் குழுவின் பரிந்துரை எதுவும் இல்லாமல், சமச்சீர் கல்வி முறையை நிறுத்திவைப்பது நியாயம் அல்ல!'' என்றார் ஆவேசமாக.

சமச்சீர் கல்வி பற்றி ஆராய்ந்து தி.மு.க. அரசுக்குப் பரிந்துரை செய்த பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரனிடம் பேசினோம். ''ஆட்சி மாறுவதற்கும் பள்ளிப் புத்தகத்துக்கும் சம்பந்தம் இருக்கக் கூடாது. சமச்சீர் கல்விக்காகப் பொதுக் கல்வி வாரியம் ஒன்று ஏற்கெனவே அமைக்கப்பட்டு உள்ளது. தேவையானால், அந்தக் குழுவில் மாற்றம் செய்துகொள்ளலாம். ஆனால், அந்தக் குழுவுக்குத் தலைவராக பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அல்லது இயக்குநரை நியமிக்கக் கூடாது. கல்வியாளர்களின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஓர் அமைப்பாக அது இயங்க வேண்டும். சமச்சீர் கல்வி முறையைக் கொண்டுவருவதற்கு, அரசுப் பள்ளிகளில் போதுமான வசதிகளை முழுமையாகச் செய்து தர வேண்டும். இவை இல்லாமல், சமச்சீர் கல்வி என்று சொல்வது பொருத்தம் ஆகாது. எனவே, இதை முழுமையாகச் செய்தால்தான், சமச்சீர் கல்வியை உண்மையிலேயே நடைமுறைப்படுத்த முடியும்!'' என்றார்.


மக்கள் கல்வி இயக்க அமைப்பாளர் பேராசிரியர் கல்யாணி, ''கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 1-வது, 6-வது வகுப்புப் புத்தகங்களுக்கு மாணவர்​களிடமும் ஆசிரியர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இதை, 'குழந்தைகளைக் கொண்டாடுவோம்’ என்ற அமைப்பின் மூலம் நடத்திய ஆய்வில், புள்ளிவிவர அடிப்படையில், எங்களால் சொல்ல முடியும். இந்தப் பொதுப் பாடத்திட்ட முறை, ஒரு குறிப்பிட்ட கட்சிக்குத்தான் சொந்தமானது என்று சொல்வது அபத்தம். கல்வியாளர்கள் சமூக ஆய்வாளர்கள், மாணவர் அமைப்​புகள் உள்பட பல தரப்பினரின் தொடர் முயற்சிகளுக்குப் பிறகே, சமச்சீர் கல்வி முறை கொண்டுவரப்பட்டது. இவ்வளவு பெரிய உழைப்பை ஒன்றுமே இல்லை என மறைக்க முயற்சிக்கின்றனர்.

சமச்சீர் பாடத் திட்டமானது தரம் குறை​வானது. ஆறு மாதங்களில் இதைக் கற்பித்துவிடுவோம் என தனியார் கல்விக் கொள்ளையர் சொல்கின்றனர். கல்விச் சரக்கைப்பற்றிப் பேசுவதற்கு இவர்களுக்கு தகுதியே இல்லை. ஏராளமான தனியார் பள்ளிகளில் 9, 11-ம் வகுப்புப் பாடங்களை நடத்தாமல், 10, 12-ம் வகுப்புப் பாடங்களை இரண்டு ஆண்டுகளுக்கு நடத்திவிட்டு அதிக மதிப்பெண் பெறவைக்கிறார்கள். இதுதான் இவர்களுடைய தரத்தின் லட்சணம். கொள்ளை லாபம்தான் இவர்களின் குறிக்கோள். அதற்காகத்தான் சமச்சீர் கல்வியின் முதற் பயணத்துக்கே முட்டுக்கட்டை போடுகின்றனர். இதை, அரசு மட்டும் அல்ல... மாணவர்​களும் பெற்றோர்களும் சேர்ந்து முறியடிக்கவேண்டும்!'' என்றார் ஆவேசமாக.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ''கல்வித் தரம் பாதிக்கப்படும் என்ற காரணத்துக்காகத்தான் இந்தப் புதிய பாடத் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வல்லுநர் குழு அமைத்து, இதைச் சீராக்கும் பணிகள் விரைவில் தொடங்கும். உடனடியாக மாணவர்களுக்குப் புத்தகங்கள் வழங்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது'' என்றார்.

பாவம் மாணவர்கள்!

நன்றி : ஜூனியர் விகடன் 29-மே -2011


கனிமொழி - நடிகை குஷ்பு சந்திப்பு


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் கனிமொழி 30.05.2011 அன்று காலை 10.30 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டார். அவருடன் ஆ.ராசா மற்றும் சரத்குமாரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

திகார் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட கனிமொழி, காலை 9.30 மணியிலிருந்து நீதிமன்ற லாக் அப் அறையில் காத்திருந்தார். அதன் பிறகு 10.30 மணிக்கு நீதிமன்ற அறைக்கு அழைத்து வரப்பட்டார். இருக்கையில் அமர்ந்த அவர், தனது கணவர் அரவிந்தனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.


இதையடுத்து காலை 10.45 மணியளவில் நடிகை குஷ்பு நீதிமன்ற அறைக்கு வந்தார். நேராக கனிமொழியின் இருக்கைக்குச் சென்று அவரிடம் கை குலுக்கி பேசினார். இருவரும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.


பிறகு சரத்குமார், அவரது மனைவி ஆகியோரிடமும் குஷ்பு நலம் விசாரித்தார். சுமார் ஒரு மணி நேரம் நீதிமன்றத்தில் இருந்துவிட்டு, காலை 11.45 மணிக்கு கனிமொழியிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து குஷ்பு புறப்பட்டுச் சென்றார்.

திருச்சி மாவட்ட திமுக துணை செயலாளர் கைது


திருச்சி மாவட்ட திமுக துணைச் செயலாளரும், ஸ்ரீரங்கம் கோயிலின் முன்னாள் அறங்காவலருமான குடமுருட்டி சேகர், 30.05.2011 அன்று இரவு காரில் சென்றுகொண்டிருந்தபோது, காவல்துறையினர் அவரது காரை மடக்கி விசாரணை செய்தனர். அவரின் காரையும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று காவல்துறையினர் கூறியதாகவும், அதற்கு சேகர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் கஞ்சா இருந்ததாகவும், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் இரண்டு பிரிவின் கீழ் சேகர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் போலீசார் சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்ட திமுக துணை செயலாளர் கைது செய்யப்பட்டிருப்பது அந்த மாவட்ட திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து 12வது முறையாக வெற்றி எம்எல்ஏவாக கருணாநிதி பதவியேற்றார்



தொடர்ந்து 12ம் முறையாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் கருணாநிதி, 30.05.2011 அன்று எம்எல்ஏவாக பதவியேற்றார். அவருக்கும் துரைமுருகனுக்கும் சபாநாயகர் ஜெயக்குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து 11 முறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளார். 12ம் முறையாக திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். கடந்த 23ம் தேதி சட்டசபையில் புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்றனர். கருணாநிதியும் காட்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற துரைமுருகனும் அன்றைய தினம் டெல்லியில் இருந்ததால் பதவி ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து, இருவரும் 30.05.2011 அன்று எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டனர்.
இதற்காக 30.05.2011 அன்று காலை 11 மணிக்கு கோட்டைக்கு வந்த கருணாநிதியை திமுக எம்எல்ஏக்கள், கட்சி பிரமுகர்கள் வரவேற்றனர். பின்னர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சபாநாயகரிடம் வழங்கினார். கருணாநிதிக்கு சபாநாயகர் ஜெயக்குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சபாநாயகர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்று, படிவத்தில் கையெழுத்திட்டார் கருணாநிதி. பதிவேட்டிலும் கையெழுத்திட்டார். பதவியேற்றதும் கருணாநிதிக்கு ஜெயக்குமார் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். துரைமுருகனும் எம்எல்ஏவாக பதவி ஏற்றார்.
கருணாநிதிக்கு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின், வெளியே வந்த கருணாநிதியிடம், சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் செயல்பாடு எப்படி இருக்கும் என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், கூர்ந்து கவனியுங்கள் என்றார்.
முன்னதாக கருணாநிதியை வரவேற்க மேயர் மா.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.சற்குணபாண்டியன், பொன்முடி, எ.வ.வேலு, ஜெ.அன்பழகன், ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், சக்ரபாணி, கோவி செழியன் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் வி.எஸ்.பாபு, ப.ரங்கநாதன், எஸ்ஏஎம் உசேன், மதிவாணன், முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி, துறைமுகம் காஜா, சுரேஷ்குமார், மதன், ராஜ்குமார், உள்பட பலர் வந்திருந்தனர்.

அதிமுக எம்எல்ஏ குறித்த தகவலை நகல் எடுத்து விநியோகிக்க முயற்சி: போலீஸ் தடை


அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வைகைச்செல்வம். இவர் தேர்தல் நேரத்தில் அறிவித்த ஒன்றை நிறைவேற்றவில்லை என்று ஒரு வார இதழில் செய்தி வெளியாகி இருந்தது.

இந்த செய்தியை ஜெராக்ஸ் பிரதி எடுத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய திமுகவினர் சிலர் ஏற்பாடுகளைச் செய்தனர்.

அருப்புக்கோட்டை திமுக நகர செயலாளர் மணி இந்த வார இதழில் வந்த செய்தியை பந்தல்குடி ரோட்டில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸ் கடையில் ஜெராக்ஸ் பிரதிகள் எடுத்தார்.

இந்த ஜெராக்ஸ் பிரதிகள் பண்டல்களாக கட்டப்பட்டன. இதுகுறித்த தகவல் டவுன் எஸ்ஐ பத்மாவதிக்கு தெரிய வந்தது. விரைந்து வந்த அவர் ஜெராக்ஸ் பண்டல்களை பறிமுதல் செய்தார்.

மேலும் விசாரணைக்கு வரும்படி நகர திமுக செயலாளர் மணியை போலீஸ் ஸ்டேஷனுக்கு எஸ்ஐ அழைத்தார். தன் மீது எந்த புகாரும் இல்லாத போது தான் ஸ்டேஷனுக்கு வர முடியாது என்று மணி தெரிவித்தார்.

இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியது. இது குறித்து தகவல் அறிந்த முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார், நகராட்சித் தலைவர் சிவபிரகாசம், துணைதலைவர் பழனிச்சாமி, கவுன்சிலர் சிக்கந்தர், மீனவரணி செயலாளர் சோலையப்பன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் திரண்டனர். போலீசாருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் மேலும் முற்றியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

தகவல் அறிந்த அருப்புக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி விரைந்து வந்து, திமுகவினரை சமாதானப்படுத்தினார்.

இந்த ஜெராக்ஸ் பிரதிகளை விநியோகம் செய்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றார். இதையடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

சுயமரியாதை சிந்தனைகளுடன் வாழ்ந்து பலருக்கு வழிகாட்டியவர் சின்னக்குத்தூசி: மு.க.ஸ்டாலின்


மறைந்த எழுத்தாளர் சின்னக்குத்தூசி, சுயமரியாதை சிந்தனைகளுடன் சமுதாய சீர்திருத்தவாதியாக வாழ்ந்து பலருக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மூத்த பத்திரிகையாளரும், திராவிட இயக்க சிந்தனையாளருமான சின்னக்குத்தூசியார் நிறைவேந்தல் கூட்டம் 29.05.2011 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சின்னக்குத்தூசியின் நினைவு மலரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அப்போது பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்,
சின்னக்குத்தூசி மிகப்பெரிய எழுத்தாளர். சுயமரியாதை சிந்தனைகளுடன் சமுதாய சீர்திருத்தவாதியாக வாழ்ந்து பலருக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர். முரசொலி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட விருதை அவர் ஏற்க மறுத்தார். திமுக தலைவர் கலைஞர் அவர்கள் அறிவுறுத்தியதன் பேரில் பின்னர் விருதை பெற்றுக்கொண்டார். அந்த விருதுக்கான தொகையை அறக்கட்டளைக்கே அவர் திரும்பி வழங்கினார். எதற்கும் ஆசைப்படாமல், எதற்கும் தன்னை அடிமைப்படுத்திக்கொள்ளாமல், ஒரு சுயமரியாதை சுடரொலியாக வாழ்தவர். அப்படி வாழ்ந்த அந்த தன்மானச் சிங்கம் இன்றைக்கு நம்மிடத்தில் இல்லை. அவர் இல்லை என்று சொன்னாலும், அவர் விட்டுச்சென்றிருக்கூடிய அளப்பரிய அந்த உணர்வுகள் எல்லாம் இன்றைக்கும் நம்முடைய உள்ளத்திலே தேங்கி இருக்கிறது என்றார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசுகையில், மறைந்த சின்னக்குத்தூசி பெரியார் சிந்தனைகளை மிகுந்த ஈடுபாட்டுடன் மக்களிடம் பரப்பியவர். திராவிட இயக்க சிறப்பான எழுத்தாளர்களுக்கு சின்னக்குத்தூசி அவர்கள் பெயராலே, ஒவ்வொரு ஆண்டும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பாக பரிசு வழங்கப்படும் என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில், அக்ரஹாரத்தில் பிறந்த பெரியவருக்கு, அய்யா பெரியாரின் நினைவிடத்திலே நினைவேந்தல் எடுக்கக்கூடிய அளவுக்கு அவரது கொள்கை ஈடுபாடு இருந்திருக்கிறது என்பதுதான் பெரிய செய்தி என்றார்.

அதிமுக அரசின் சா(சோ)தனைகள் என்ற பெயரில் மதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்


தமிழகத்தில் அதிமுக அரசு பொறுப்பேற்று இரண்டுவார காலம் ஆன நிலையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அதிமுக அரசின் சா(சோ)தனைகள் என்ற பெயரில் மதிமுகவினர் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். இந்த சுவரொட்டி விவகாரம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அந்த சுவரொட்டியில்,

சட்டசபை இடமாற்றம் ரூபாய் 1100 கோடி நஷ்டம்
சமச்சீர் கல்வி திட்டம் ரத்து ரூபாய் 500 கோடி இழப்பு
ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் கொள்ளை சட்டம், ஒழுங்கு-சந்தி சிரிப்பு
சட்ட, மேல்-சபை முடக்கம் சர்வாதிகார ஆட்சியின் துவக்கம்

இவ்வாறு வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக மாவட்ட செயலாளர் ஜோயல், மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், அதிமுகவின் சர்வாதிகார போக்கு தொடங்கியுள்ளது. ஆட்சி பொறுப்பேற்று ஒரு வார காலத்திற்குள்ளாகவே, ஒரு சர்வாதிகார ஆட்சிதான் கொடுப்பேன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு சட்டசபை இடமாற்றம், சமச்சீர் கல்வி ரத்து என்று ஆயிரக்கோடி ரூபாயான மக்களின் வரிப்பணத்தை இன்றைக்கு பாழாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளோம் என்றார்.

கருணாநிதியின் 88வது பிறந்தநாள் விழா : ஜூன் 4ல் அறிவாலயத்தில் நடக்கிறது


திமுக தலைவர் கருணாநிதியின் 88வது பிறந்த நாள் விழா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் ஜூன் 4ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து, திமுக தலைமை இலக்கிய அணி தலைவர் கா.வேழவேந்தன், செயலாளர்கள் கவிதைப்பித்தன், தஞ்சை கூத்தரசன் ஆகியோர் 29.05.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
திமுக தலைமை இலக்கிய அணி மற்றும் தென்சென்னை மாவட்ட இலக்கிய அணி சார்பில், திமுக தலைவர் கருணாநிதியின் 88வது பிறந்த நாள் விழா, ஜூன் 4ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடக்கிறது. மாலை 5 மணிக்கு நாதசுர மங்கல இசையோடு விழா தொடங்குகிறது. 5.30 மணிக்கு இசையரங்கமும், இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு தலைமை இலக்கிய அணி சார்பில், தமிழவேள் கலைஞர் இலக்கியப் பொற்கிழி வழங்கல் நிகழ்ச்சி நடக்கிறது.
வடசென்னை மாவட்ட கழக செயலாளர் வி.எஸ்.பாபு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார்.
மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் பொற்கிழியை வழங்குகிறார். இரவு 7.30 மணிக்கு தென்சென்னை மாவட்ட இலக்கிய அணி சார்பில், ‘தலைவர் கலைஞரின் நிலைத்த புகழுக்குப் பெரிதும் காரணம் அரசியல் ஆற்றலா? இலக்கிய திறனா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. இதை ஜெ.அன்பழகன் எம்எல்ஏ தொடங்கி வைக்கிறார். மேயர் மா.சுப்பிரமணியன், டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். திமுக துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் பட்டிமன்ற நடுவராக பங்கேற்கிறார். இதில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, செழியன் எம்எல்ஏ, புலவர் இந்திரகுமாரி உள்ளிட்டோர் பேசுகின்றனர். பூச்சி முருகன் நன்றி கூறுகிறார்.

Sunday, May 29, 2011

அரசுக்கு பிடிக்கவில்லை என்றால் நான் எழுதிய பாடலை நீக்கிவிட்டு புத்தகத்தை வெளியிடலாமே?


கல்வியிலும் சமத்துவம் நிலைநாட்டவேண்டும் என்பதற்காகத்தான் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் விளக்கம் அளித்துள்ளார்.


தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான கலைஞர் 27.05.2011 அன்று வெளியிட்டள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,


2006 ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி முறையை தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கிட வழி அமைப்போம் என்று தி.மு.க. அறிவித்திருந்தது. சமச்சீர் பள்ளிக்கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறை சட்டம் 2010 ம் ஆண்டு இயற்றப்பட்டு; சமச்சீர் கல்வி முறை 2010 11 ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 மற்றும் 6 ம் வகுப்புகளில் நடைமுறை படுத்தப்பட்டதுடன் புதிய பாட நூல்களும் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.


அன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் 1.3.2010 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கல்வியாளர்களின் அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு சமச்சீர் கல்வி சட்டத்தின்படி 2010 2011 கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி முறை நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள் விரிவாக ஆராயப்பட்டன.


சமச்சீர் கல்விமுறையை இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தலாம் என்றும், முதற்கட்டமாக 2010 2011 கல்வி ஆண்டில் 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கும், அதனைத் தொடர்ந்து 2011 12 கல்வியாண்டில் பிற எஞ்சிய அனைத்து வகுப்புகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது.


முதற்கட்டமாக 2010 2011 ம் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு மற்றும் 6 ம் வகுப்புகளுக்கு பாடத் திட்டங்கள் வரையறுக்கப்பட்டு, பாடப்புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் முதலாம் வகுப்புக்கு தேவையான 61 லட்சம் பாடப்புத்தகங்களும் ஆறாம் வகுப்புக்கு தேவையான 84 லட்சம் பாடப் புத்தகங்களும் அச்சிடப்பட்டு அவைகள் முறையே மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்களும் கடந்த ஆண்டு அந்த புத்தகங்களை படித்து முடித்துள்ளார்கள்.

அரசின் கொள்கை முடிவின்படி 2011 2012 ம் ஆண்டு கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறையை மேலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக எஞ்சிய 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10 ம் வகுப்புகளுக்கான பாடபுத்தகங்கள் 200 கோடி ரூபாய் செலவில் அச்சிடப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும் விட்டன.


இந்த வகுப்புகளுக்கான பாட திட்டம் கல்வி வல்லுநர்களால் தயார் செய்யப்பட்டு பொது மக்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை வலை தளத்தில் வெளியிடப்பட்டது.


எல்லாவற்றிலும் சமமாக இருக்க வேண்டும் அனைவருக்கும் சம உரிமை தரப்பட வேண்டும் என்றெல்லாம் பேசப்படுகின்ற இந்த காலக்கட்டத்தில் கல்வியிலும் சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டுமென்பது தான் தி.மு.கழகத்தின், ஏன் தமிழகத்திலே உள்ள பெரும்பாலான கல்வியாளர்களின் நிலை. அதனை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டுமென்பதற்காகத்தான், எடுத்த எடுப்பிலேயே தான்தோன்றித் தனமாக அதனை அறிவித்து விடாமல், அதற்காக வல்லுநர்கள் குழு, கல்வியாளர்கள் குழு, அதிகாரிகள் குழு என்றெல்லாம் நியமித்து, அந்த குழுக்களை கொண்டு வெளிமாநிலங்களுக்கெல்லாம் சுற்றுப்பயணம் செய்ய செய்து, அதன் பிறகு தான் படிப்படியாக சமச்சீர் கல்வி முறை நடைமுறைக்கு தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, அது அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் திடீரென்று அந்த திட்டத்தை கிடப்பில் போடப்போவதாக அறிவிப்பதும், 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து தயார் செய்யப்பட்ட புத்தம் புதிய புத்தகங்களையெல்லாம் வீணடிப்பதும், மேலும் 200 கோடி ரூபாய் செலவழித்து புதிய புத்தகங்களை இனிமேல் அவசர அவசரமாக தயாரித்து, அதன்பிறகு அச்சடித்து அவற்றை விநியோகிப்போம் என்பதும் சரியான நடைமுறை தானா என்பதை அரசினர் எண்ணி பார்க்க வேண்டும்.


சமச்சீர் கல்வித்திட்டம் என்பது பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவருக்கும் ஒரே சீரான கல்வியை வழங்கிட உருவாக்கப்பட்ட திட்டமாகும். மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் கல்வித் திட்டம், ஓ.எஸ்.எல்.சி., போன்ற பாடத்திட்டங்களில் பயிலும் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களோடு ஒப்பிடும்போது, ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் போட்டியிட முடியாமல் பெரிதும் பாதிக்கப்படும் நிலைமை இருந்ததை போக்குவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன.


சமச்சீர் கல்வித்திட்டம் குறித்து அ.தி.மு.க.வின் தற்போதைய முக்கிய கூட்டணி கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்ழூனிஸ்டு கட்சி 24 5 2011 அன்று விடுத்துள்ள அறிக்கையில், "சமச்சீர் கல்வி முறையை இந்த ஆண்டு நிறுத்தி வைத்திருப்பதும், ரூ.200 கோடிக்கு மேல் செலவிட்டு அச்சிடப்பட்டுள்ள பாடப் புத்தகங்கள் முழுமையாக கை விடப்படுவதும் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும், ஆசிரியர்கள் கல்வியாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது'' என்று தெரிவித்திருப்பதையும், அ.தி.மு.க.வின் மற்றொரு தோழமைக் கட்சியான இந்திய கம்ழூனிஸ்டு கட்சி இன்று விடுத்துள்ள அறிக்கையில் "சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக கல்வித் துறையில் சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழக அரசு அதனை தள்ளி வைப்பதாக அறிவித்திருப்பது விவாதத்தை கிளப்பியுள்ளது'' என்று குறிப்பிட்டிருப்பதையும், அ.தி.மு.க.வின் மற்றொரு தோழமை கட்சியான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி "தரமான கல்வியுடன் கூடிய சமச்சீர் கல்வி திட்டத்தை தொடர்ந்து வலியுறுத்து வோம்'' என்று கூறியிருப்பதையும் இந்த நேரத்தில் நினைவு கூர்வது பொருத்தமானதாகும்.


சமச்சீர் கல்வி திட்டம் குறித்து அ.தி.மு.க. அரசின் முடிவை எதிர்த்து வழக்கறிஞர் கே.சியாம்சுந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவின் மீது நீதியரசர்கள் எஸ்.ராஜேஸ்வரன், கே.பி.கே.வாசுகி ஆகியோர் நேற்றையதினம் கூறும்போது, "சமச்சீர் கல்வி சட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது. சிறந்த வல்லுநர்களைக் கொண்ட ஆய்வுக்குழு விரிவாக ஆராய்ந்து சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த பரிந்துரை செய்துள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை எளிதாகப் புறக்கணித்து விட முடியாது. இது தவிர, ஏற்கனவே பெரும் தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், மேலும் பெரும் தொகையை செலவிடுவது அவசியம் தானா? இவை பற்றியெல்லாம் அட்வகேட் ஜெனரல் அரசுக்கு தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும். மேலும் ஏற்கனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை இந்த நீதி மன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டத்தை அமைச்சரவை கூட்டத்தின் கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்ற கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசின் சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்'' என்று தெரிவித்து, அது இன்றைய ஏடுகளில் எல்லாம் பெரிதாக வெளிவந்துள்ளது.


இந்த நிலையில் நேற்றையதினம் இந்த துறையின் அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்த மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் அ.சவுந்தரராசன் மற்றும் அந்த கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் போன்றவர்களிடம் சமச்சீர் கல்வி திட்டம் கைவிடப்பட மாட்டாது என்று கூறியதாக "தீக்கதிர்'' நாளேட்டில் கூறப்பட்டுள்ளது.


இந்த நிலையில், தி.மு.க. அரசினால் கொண்டு வந்ததை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தான் இந்த அரசின் அறிவிப்புக்கான காரணம் என்றால் அதைப் புரிந்து கொள்ள முடியும். தமிழகத்திலே அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் ஒன்றை பாடுவதற்காக மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்'' என்று தொடங்கும் பாடலில் "ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன்'' என்ற வரியை நீக்கி விட்டுத்தான் தமிழக அரசின் சார்பில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழகத்திலே அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஒலிக்கச் செய்தேன்.

அந்தப்பாடல் தற்போது சமச்சீர் கல்வி பாடத்திட்ட புத்தகங்களிலே இருப்பதால் இன்றைய அரசு சமச்சீர் கல்வி திட்டத்தையே எதிர்த்திட முனையுமா? மேலும் கோவையில் நடைபெற்ற உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக நான் தொகுத்து எழுதிய வாழ்த்துப் பாடல் அந்த புத்தகத்திலே இடம் பெற்றுள்ளது. அந்தப்பாடலில் தொல்காப்பியம், சிலம்பு, மணிமேகலை, சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, கம்பர், அவ்வை என்றெல்லாம் அனைத்து இலக்கியங்களையும் இலக்கிய கர்த்தாக்களையும் பாகுபாடு பாராமல், இணைத்து எழுதிய பாடல் சமச்சீர் கல்விப்பாட புத்தகங்களிலே இடம் பெற்றுள்ளது தான் அரசின் இந்த முடிவுக்கு காரணமா? ஆம் என்றால் அந்தப்பாடல் நான் தொகுத்து எழுதியது என்பதையே எடுத்து விட்டு அல்லது அந்த பாடலையே முழுமையாக எடுத்து விட்டு சமச்சீர் கல்விக்கான புத்தகத்தை வெளியிடுவதில் தவறு ஒன்றுமில்லையே?


இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஜனநாயகம் என்ற தேரை இழுக்க எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு நிச்சயம் இருக்கும் - தி.மு.க. சட்டமன்றக் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உதாரணத்துடன் பேச்சு


சபாநாயகருக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என்று சட்டப் பேரவையில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
27.05.2011 அன்று பேரவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயகுமார், துணை சபாநாயகர் தனபால் ஆகியோருக்கு பேரவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அப்போது மு.க.ஸ்டாலின் (திமுக) பேசியதாவது:
சட்டப் பேரவை சபாநாயகராகவும், துணை சபாநாயகராகவும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு திமுக சார்பில் வாழ்த்து தெரிவிக்கிறேன். சபாநாயகர் ஆளும் வரிசையிலும் எதிர்க்கட்சி வரிசையிலும் இருந்து பணியாற்றியவர். 2 முறை அமைச்சராகவும் கடமையாற்றியவர். இதன் மூலம் சிறந்த அனுபவம் பெற்றிருக்கிறீர்கள். சட்ட நுணுக்கம் அறிந்தவர். ஆளும் கட்சியின் நோக்கத்தையும், எதிர்க் கட்சிகளின் உணர்வையும் புரிந்து சபையை நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிரம்ப உண்டு. சட்டமன்ற ஜனநாயகம் பற்றி அண்ணா கூறும் போது நம் கை விரல்கள் போல பல கட்சிகள் உள்ளன. விரல்கள் 5 ஆக பிரிந்து இருந்தாலும் அவை ஒன்று சேரும் போது உருப்படியான காரியம் செய்ய முடிகிறது என்றார்.
பெரிய தேர் ஓடுவதற்கு காரணமாக இருப்பது சிறிய அச்சாணி தான். எனவே எண்ணிக்கையை பார்க்காமல் உணர்வுக்கு மதிப்பளித்து அவையை நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
இந்த மன்றம் வரலாற்று சிறப்பும், பாரம்பரியமும் கொண்டது. எத்தனையோ தலைவர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். கிருஷ்ணா ராவ், புலவர் கோவிந்தன், சி.பா. ஆதித்தனார், பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் போன்ற பலர் இந்த இருக்கையை அலங்கரித்துள்ளனர். அந்த வகையில் நீங்கள் இடம் பெறுவதை பாராட்டுகிறோம். ஊர் கூடி தேர் இழுக்கும் என்பார்கள். ஜனநாயக தேரை இழுக்க எதிர்க்கட்சி வரிசையில் உள்ள எங்கள் ஒத்துழைப்பு நிச்சயம் இருக்கும். எல்லா வகையிலும் ஒத்துழைப்பு தர நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

சமச்சீர் கல்வி திட்டம் உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பிறகு நிறுத்தி வைக்க அரசுக்கு அதிகாரம் உண்டா? - உயர் நீதிமன்ற நீதிபதி சரமாரி கேள்வி


சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது உயர் நீதிமன்ற நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார். சமச்சீர் கல்வி திட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து கூறிய பிறகு அதை மீறி செயல்பட அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
சமச்சீர் கல்வி நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை மதுரவாயலை சேர்ந்த ஷியாம் சுந்தர் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ராஜேஸ்வரன், வாசுகி முன்பு 26.05.2011 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் நடந்த வாதம் வருமாறு:
மனுதாரர் வக்கீல் கே.பாலு:
சமச்சீர் கல்வி திட்டம், தமிழகத்தில் உள்ள மாணவர்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட நல்ல திட்டம். அனைத்து மாணவர்களும் இதில் சமமான கல்வியை பெற முடியும். புதிய அரசு ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக இதை ரத்து செய்திருப்பது சட்டவிரோதமானது.
நீதிபதிகள்:
சமச்சீர் கல்வியை ரத்து செய்து அரசு ஏதேனும் உத்தரவு பிறப்பித்துள்ளதா?
கே.பாலு:
அதிகாரப்பூர்வ உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து பத்திரிகைகளுக்கு செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வில்சன்:
ஓய்வு பெற்ற ஆசிரியர் மனோன்மணியன் சார்பாக சமச்சீர் கல்வி ரத்து எதிர்த்து தனியாக மனு தாக்கல் செய்துள்ளோம். எனது தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும். கடந்த ஆட்சியில் மாணவர் நலன் கருதி சமச்சீர் கல்வி கொண்டு வர உயர்நிலை கமிட்டி அமைக்கப்பட்டது. அது பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து இந்த திட்டத்தை கொண்டு வந்தது. இதற்காக தனி சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளன. இந்நிலையில், சட்டத்தை மீறி அரசு செயல்பட முடியுமா? சமச்சீர் கல்வி சரியில்லை என அரசு கூறுவது தவறானது. 10ம் வகுப்பு மாணவர்கள் ஏற்கனவே இந்த பாட புத்தகங்களை படிக்க தொடங்கிவிட்டனர். ரூ.200 கோடிக்கு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கும்போது இந்த திட்டத்தை கைவிட்டால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படும். எனவே, சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்க அரசுக்கு தடை விதிக்க வேண்டும்.
அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன்:
இந்த வழக்கில் எந்த தடையும் விதிக்கக் கூடாது. ரூ.200 கோடி வீணாகிறது என கூறுவதை ஏற்கக் கூடாது. மாணவர்களின் நலன்தான் இதில் முக்கியம். சமச்சீர் கல்வி திட்டம் மாணவர்கள் நலனுக்கு எதிரானது. சமச்சீர் கல்வி திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் இதர மாநில மாணவர்களுடன் போட்டி போடுவது கஷ்டம். இதனால்தான் தமிழக அரசு இந்த திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.
இதில் புதிய கொள்கை முடிவு எடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சமச்சீர் கல்வி திட்டத்தை அனைத்து மாணவர்களும் படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்த அரசு விரும்பவில்லை. மாணவர்கள், பெற்றோர் விருப்பப்படி தரமான கல்வி பெற அவர்கள் விரும்பிய பள்ளி மற்றும் பாடதிட்டததை தேர்வு செய்து கொள்ளலாம். அவர்களை கட்டாயப்படுத்துவது அடிப்படை உரிமையை பறிப்பதாகி விடும். மேலும் சமச்சீர் கல்வியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச கோர்ட்டில் வாபஸ்தான் பெறப்பட்டது. சிபிஎஸ்இ மாணவர்கள் தனிப் பாட திட்டததை படிக்கிறார்கள்.
மாணவர்கள் நலன் கருதி புதிய கொள்கை முடிவு எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அரசு சட்டப்படியான நடைமுறைகளை பின்பற்றி தான் புதிய கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தும். இந்த வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்த அவகாசம் வேண்டும்.
கே.பாலு:
புதிய புத்தகங்களை அச்சடிக்க டெண்டர் விட தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே ரூ.200 கோடிக்கு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அது வீணாகிவிடும்.
பி.வில்சன்:
ஒரு சட்டத்தை மீறி புதிய கொள்கை முடிவு மூலம் செயல்பட அரசுக்கு அதிகாரம் இல்லை. உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படவும் அரசுக்கு அதிகாரம் இல்லை.
நீதிபதிகள்:
சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பான சட்டத்தை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்த பிறகு அரசு புதிய கொள்கை முடிவு எடுக்க முடியுமா? ஒரு சட்டம் இருக்கும்போது அதை மீறி அமைச்சரவை கூட்டத்தின் மூலமாக நடவடிக்கை எடுக்க முடியுமா? பொதுமக்கள் மற்றும் மாணவர் நலன் கருதி நல்ல முடிவை எடுக்க அரசுக்கு அறிவுரை கூறுகிறோம்.
இந்த சட்டத்தின் நோக்கம் சரியாக உள்ளது. தலைசிறந்த கல்வியாளர்கள் கொடுத்த அறிக்கையை ஒதுக்கித் தள்ள முடியாது. பதில் மனுவில் சரியான காரணத்தை கூற வேண்டும். ஏற்கனவே ரூ.200 கோடி செலவிடப்பட்டு புத்தகங்கள் தயாரித்துள்ள நிலையில் அரசு கொள்கை முடிவு எடுத்து புதிதாக புத்தகங்கள் அச்சடிக்க வேண்டுமா என்பதை விளக்க வேண்டும்.
எங்களின் 3 கேள்விகளுக்கு அரசு விரிவான பதில் கூற வேண்டும். 1. சமச்சீர் கல்வி தொடர்பான சட்டம் இருக்கும்போது அதற்கு எதிராக அரசு கொள்கை முடிவு எடுக்க முடியுமா? 2. சமச்சீர் கல்வி திட்டம் குறித்து ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறிய பிறகு அதை மீறி அரசு செயல்பட அதிகாரம் இருக்கிறதா? 3. ரூ.200 கோடி செலவிடப்பட்டு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்ட பிறகு மீண்டும் செலவழிப்பது சரியாகுமா? இந்த வழக்கில் வரும் 8ம் தேதி அரசு விரிவான பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரம் பரபரப்பாக விசாரணை நடந்தது.
அப்போது அரசுக்கு ஆதரவாக மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வக்கீல் கிருஷ்ணமூர்த்தி நீதிபதிகளிடம் தெரிவித்தார். இதற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

சமச்சீர் கல்வி ரத்து - திமுக மாணவர் அணி கண்டனம்


திமுக மாணவர் அணி மாநில துணை செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் 26.05.2011 அன்று நடந்தது. மாணவர் அணி செயலாளர் இள புகழேந்தி தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் கோவி செழியன், குத்தாலம் அன்பழகன், செங்குட்டுவன், க.மகிழன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியை கலைஞர் நாளாக மாணவர் அணி கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு புதிய மாணவர்களை சேர்ப்பது என்றும் மாணவர்கள் பங்கேற்கும் திராவிட விழிப்புணர்வு கருத்தரங்கம், பட்டிமன்றம் நாடு முழுவதும் நடத்த கூட்டம் முடிவு செய்கிறது.
கல்லூரிகளில் திமுக மாணவர் அணி அமைப்புகளை புதுப்பிப்பதுடன் அமைப்புகள் இல்லாத கல்லூரிகளில் புதிய அமைப்புகள் உருவாக்க கூட்டம் முடிவு செய்கிறது.
சமச்சீர் கல்விக்காக நூல்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு சென்று கொண்டு இருந்த நேரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நூல்களை குப்பையில் போட்டு விட்டு ஏற்றத்தாழ்வை விரும்பும் பழைய முறையே போதும் என்று அறிவித்து அவசரக் கோலத்தில் மக்கள் பணம் விரயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜெயலலிதாவின் சுயரூபம் தெரியவந்துள்ளது. சமூக நீதிக்கு எதிரான இந்த போக்கை கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

மரியம்பிச்சை மறைவுக்கு அனுதாபம்: குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க தி.மு.க. செயற்குழு தீர்மானம்


மரியம்பிச்சை விபத்தில் மரணம் அடைந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க அரசு முயற்சிக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


திருச்சி மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. மாவட்ட தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலை வகித்து கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் திமுக மீது பரப்பப்பட்ட பொய் யான ஊழல் பிரசாரங்களு க்கு இடையே திமுகவுக்கு வாக்களித்த ஒரு கோடியே 45 லட்சம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வது.


கார் மீது லாரி மோதி மரணம் அடைந்த மரியம்பிச்சை மறைவுக்கு தலைவர் கருணாநிதி நேரில் சென்று மாவட்ட கழகம் சார்பில் அஞ்சலி செலுத்திட ஆணையிட்ட நிலையில் சில தீயசக்திகளின் தவறான பிரசாரத்தினால் ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதால் அஞ்சலி செலுத்திட இயலவில்லை என்றாலும் அவர் மாற்று கட்சியில் இருந்தாலும் கட்சி மாச்சரியம் இல்லாமல் இன, மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் அன்பு பாராட்டி செயல்பட்டதை மனதில் கொண்டு அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு திருச்சி மாவட்ட தி.மு.க சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வது.


மரியம்பிச்சை மரணம் அடைந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க இந்த அரசு முழு முயற்சி எடுக்கவேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.


மரியம்பிச்சை மறைவின்போது திருச்சி மாநகரில் உள்ள தி.மு.க. கொடி கம்பங்கள் வெட்டப்பட்டு, கல்வெட்டுக்கள் உடைக்கப்பட்ட போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் துறை கைகட்டி வேடிக்கை பார்த்ததை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.


திருச்சி மாவட்டத்தில் தலைவர் கருணாநிதியின் 88 வது பிறந்த நாள் விழாவை எந்த ஆண்டும் இல்லாத அளவிக்கு இந்த ஆண்டு மிகச்சிறப்பாக ஒவ்வொரு கிளைக்கழகம் தோறும் கழகத்தின் இரு வண்ணக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி, விளையாட்டு போட்டிகள் நடத்தி, மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி கொண்டாடுவது.
மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நேரு பேசியதாவது:

அமைச்சர் மரியம்பிச்சை விபத்தில் இறந்ததற்கும், திமுகவினருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மரியம்பிச்சை இறந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் திமுக தலைவர் கருணாநிதி என் னை தொடர்பு கொண்டு, மரியம்பிச்சையின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த சொன்னார். நான் மாநகர திமுக செய லாளர் அன்பழகனை அழைத்து பேசியபோது அங்கு நிலைமை சரியில்லை, பதட்டமாக உள்ளது. எனவே அங்கு சென்றால் பிரச்னை ஏற்படும் என கூறியதால் அஞ்சலி செலுத்த செல்லவில்லை. எந்த வகையிலா வது திமுகவினரை பழிவாங்க ஆட்சியாளர்கள் துடிக்கின்றனர். இந்த விவகாரத்தில் அதிமுகவினரை விட தமுமுகவினர் தான் அதிக அளவில் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Saturday, May 28, 2011

கனிமொழியுடன் செல்வி, துர்க்கா ஸ்டாலின் சந்திப்பு


ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் கனிமொழி, டில்லி பாட்டியாலா கோர்ட்டில் 25.05.2011 அன்று விசாரணைக்காக ஆஜர் படுத்தப்பட்டார்.

கோர்ட் வளாகத்தில் கனிமொழியை சகோதரர் தமிழரசு, சகோதரி செல்வி தமிழரசு மற்றும் ஸ்டாலினின் மனைவி துர்கா ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்த‌ிப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.

சட்டமன்ற திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு



திமுக தலைவர் கலைஞர் தலைமையில், திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் 25.05.2011 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை திமுக தலைவர், துணைத் தலைவர், கொறடா நியமனம் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் சட்டமன்ற திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். கொறடாவாக சக்கரபாணி தேர்வு செய்யப்பட்டார் என்று நிருபர்களிடம் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்

சமச்சீர் கல்வியை நிறுத்தினால் எதிர்கால தலைமுறை பாதிக்கும் : கலைஞர் கருத்து


சமச்சீர் கல்வி திட்டம் இப்போது நிறுத்தப்பட்டு விட்டால், எதிர்கால தலைமுறைக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்� என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம், கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் 25.05.2011 அன்று நடந்தது. பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்துச் செய்யப்போவதாக ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். அதனை அவர்கள் கூட்டணி கட்சிகளே எதிர்த்திருக்கிறார்களே?
சமச்சீர் கல்வி என்பது பெயரளவில் மாத்திரம் அல்லாமல், எல்லோருக்கும், எல்லா மாணவர்களுக்கும் சம நிலையில் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் உட்பட சிலர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தார்கள். அவர்களுடைய குரலுக்கு, கருத்துக்கு மதிப்பளித்து திமுக ஆட்சியில் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு, எதிர்கால நன்மையைக் கருதி, தலைசிறந்த கல்வியாளர்களின் ஒப்புதலோடும், அரசியல் கட்சிகளின் தலைவர்களோடும் கலந்து பேசுகின்ற வாய்ப்பைப் பெற்று சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அந்த திட்டம் இப்போது நிறுத்தப்படுகிறது என்றால் எதிர்கால தலைமுறைக்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
சட்டமேலவை வருவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
எதிர்பார்த்ததுதான் நடக்கிறது.
மாணவர்களின் கல்விக் கட்டண பிரச்சினையில் அரசாங்கத்திற்கு சம்மந்தம் இல்லை என்றும், பள்ளிக்கும் அந்தக் குழுவிற்கும் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றும், அதிலே அரசு தலையிடாது என்றும் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
பத்திரிகையாளர்களாகிய நீங்களாவது தலையிடுங்கள்.
திமுக ஆட்சிக் காலத்தில் பறிக்கப்பட்ட சொத்துக்கள் உரிய முறைப்படி மீட்கப்படும் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
அப்படி ஏதாவது இருந்தால், அதைத் திரும்பப் பெற்று உரியவர்களிடமோ அல்லது உரிய அமைப்புகளிடமோ ஒப்படைப்பதில், எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.
ராஜிவ்காந்தி கொலையோடு திராவிட இயக்கத்தை முடிச்சுப் போட்டு யாரோ ஒருவர், தற்போது திடீரென்று எதையோ சொல்லுகிறாரே?
அவர் யார் என்றோ, என்ன சொன்னார் என்றோ எங்களுக்குத் தெரியாது.
திமுகவின் ஒவ்வொரு திட்டமாகப் பார்த்து குறிப்பாக தலைமைச் செயலகம், சமச்சீர் கல்வி, மேலவை என்று படிப்படியாக அதிமுக ஆட்சியினர் ரத்து செய்து வருகிறார்களே?
வருந்த வேண்டியவர்கள், வாக்களித்தவர்கள்.
டெல்லிப் பயணம்?
திகார் சிறையிலே இருக்கின்ற முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, என்னுடைய மகள் கனிமொழி, சரத்குமார் ஆகியோரை கண்டு வருவதற்காக நான் மேற்கொண்ட பயணமாகும். டெல்லியில் தங்கியிருந்த ஓட்டலில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், புதுவை நாராயணசாமி, ஷேக் அப்துல்லாவின் மகன் பரூக் அப்துல்லா, ஜெயந்தி நடராசன் ஆகியோர் என்னை சந்தித்துப் பேசிச் சென்றார்கள்.
சோனியா காந்தியை சந்திக்க வாய்ப்பிருந்தும் நீங்கள் சந்திக்கவில்லையே?
வாய்ப்பு இருந்தது. சோனியாகாந்தியை சந்திக்க நேரம் இருந்தும், நான் என் மகள் கனிமொழி சிறையில் இருந்ததால், இந்த நேரத்தில் சோனியாவைச் சந்திப்பது முறையாக இருக்காது என்பதற்காகவே சந்திக்கவில்லை. அப்படிச் சந்திப்பதைத் தவிர்த்துக் கொண்டேன்.
சட்டப்பேரவை உறுப்பினராக எப்போது பதவியேற்கப் போகிறீர்கள்?
பேரவைத் தலைவர் குறிப்பிடும் நாளில்.
இந்த முறை ஆட்சியை இழந்த நிலையில் திமுக தொண்டர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அதைப் பற்றி தொண்டர்களுக்கு �முரசொலி”யில் எழுதியிருக்கிறேன். தொடர்ந்து பேராசிரியரும் அறிக்கையாக வெளியிட்டிக்கிறார். இதைத் தவிர, அரசு செய்கின்ற நல்ல காரியங்களுக்கெல்லாம் திமுக தொண்டர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். செய்தியாளர்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். புதிய அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொள்ளவிருந்த இஸ்லாமிய தோழர் மரியம்பிச்சையின் அகால மரணத்திற்காக திமுக சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதைக்கூட விபத்து இல்லை, சதி என்று சொல்லியிருக்கிறார்களே?
போலீசாரைக் கொண்டு விசாரிக்கும்படி அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. அவர்கள் விசாரித்து முடிவை அறிவிப்பார்கள் என்று நம்புகிறேன்.
கனிமொழியின் ஜாமீன் மனுவை 30ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்களே?
கனிமொழி துணிச்சலோடும், உறுதியோடும் இந்த நிலையைச் சமாளிப்ப தாக கூறியிருக்கிறார். அத்துடன் சட்ட ரீதியாகவும், நீதி கிடைக்கும் என்று கனிமொழியும், நானும் நம்புகிறோம்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

கருணாநிதி 88வது பிறந்த நாள் : கல்வியாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் பங்கேற்கும் விழா



திமுக தலைவர் கருணாநிதியின் 88வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வியாளர்கள், கவிஞர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்கும் விழா, சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் ஜூன் 2ம் தேதி நடக்கிறது.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 88வது பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, முத்தமிழறிஞரை கவிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் கலைஞர்கள் பாடிப் பாராட்டிப் போற்றும் விழா என்ற பெயரில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் ஜூன் 2ம் தேதி மாலை 5 மணிக்கு விழா நடக்கிறது.
விழாவுக்கு, முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் தலைமை தாங்குகிறார். சென்னை மேயரும், திமுக இளைஞர் அணி மாநில துணைச் செயலாளருமான மா.சுப்பிரமணியன் வரவேற்கிறார். திரைப்பட பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பங்கேற்று கலைஞர் வாழ்த்து பாடுகிறார். ‘கலைஞர் ஒரு அண்ணா நூலகம்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து, ‘கலைஞர் ஒரு வள்ளுவர் கோட்டம்’ என்ற தலைப்பில் சுப.வீரபாண்டியன், ‘கலைஞர் ஒரு அறிவாலயம்’ என்ற தலைப்பில் திண்டுக்கல் ஐ.லியோனி, ‘கலைஞர் ஒரு திரைக்காவியம்’ என்ற தலைப்பில் நடிகை குஷ்பு, ‘கலைஞர் ஒரு தொல்காப்பிய பூங்கா’ என்ற தலைப்பில் கவிஞர் அப்துல் காதர் ஆகியோர் பேசுகிறார்கள்.
தென்சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன், வடசென்னை மாவட்ட செயலாளர் வி.எஸ்.பாபு, திமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் இ.ஜி.சுகவனம் எம்.பி., ஆர்.ராஜேந்திரன், சுப.த.சம்பத், சுபா.சந்திரசேகர், அசன் முகம்மது ஜின்னா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

கலைஞரின் பிறந்த நாளை கொண்டாடுவது நமது கடமை: பேராசிரியர் க.அன்பழகன்


தி.மு.கழக பணி என்றும் தொடர தி.மு.க. தலைவர் கலைஞரின் பிறந்தநாளை கொண்டாடுவது நமது கடமை என்று பொதுச்செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.


தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முத்தமிழ் அறிஞருமான கலைஞர் அவர்களின் 88வது பிறந்த நாள் வருகிற ஜுன் 3 அன்று வருவதை நாம் அறிவோம். அந்த நாளை, தமிழும் தமிழ் இனமும் பெற்ற, பெறவேண்டிய பெருவாழ்விற்கு வழிகண்ட நாளாக நாம் பல ஆண்டுகளாகக் கொண்டாடி வருகிறோம்.


கலைஞரின் வாழ்வு வாழ்க்கை இலட்சியம் ஆர்வம், உழைப்பு, முயற்சி, அறப்போராட்டம், தியாகம், கலைத்துறைப் பணி, சட்டமன்றப் பணி, முதலமைச்சராக ஆற்றிய அருந்தொண்டு, நிறைவேற்றியுள்ள சாதனைகள் எல்லாம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் குறிக்கோளை அடைவதற்காகவே, அறிவாற்றல் மிகுந்த கருணாநிதியால் மேற்கொள்ளப் பட்டவையாகும்.


தமிழ் இனத்துக்காகவே தம்மை ஒப்படைத்துக்கொண்டு எழுத்துப் பணி, இதழ்ப் பணி, இலக்கியப் பணி, கலைப் பணி என்று துறைதோறும் தமது இலட்சியப் பதாகையைப் பட்டொளி வீசிப் பறக்கவிட்டு, செய்வதறியாது உறக்கத்தில் வீழ்ந்து கிடந்த மக்களை விழிப்படையச் செய்யும் திராவிட இயக்கத்தை வளர்ப்பதையே தமது மூச்செனக் கொண்டு, எவரேயாயினும் அவர்தம் நெஞ்சுக்கான நீதியை நாள்தோறும் உணர்த்தி வந்தவரும், அறப்போருக்கு என்றும் தயங்காத துடிப்பான இதயம் கொண்டவருமான கருணாநிதியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதையே கடந்த பல ஆண்டுகளாகத் தமது கடமையாகக் கொண்டுள்ளவர்களே நம் கழகத் தோழர்கள்!


அரசியல் பயணத்தில், தேர்தல் என்று வந்துவிட்டால் வெற்றியை மட்டுமே எதிர்பார்த்திட முடியாது. வெற்றியும், தோல்வியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களே!


திராவிட முன்னேற்றக் கழகம், பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அரசியல் கட்சியாகச் செயற்பட்டு, தமிழகத்தின் ஆளுங்கட்சியாக மட்டுமன்றி, நடுவண் அரசின் கூட்டணி ஆட்சிகளிலும் பங்குபெற்று, மத்தியில் நிலையான அரசு அமைந்திடவும், மாநிலத்தின் நலனுக்கான பல திட்டங்களை மைய அரசு ஏற்று நிறைவேற்றிடச் செய்யவும், நமது தாய்மொழியாம் தமிழ்மொழி ஓர் செம்மொழியே என்பதை ஒப்புக்கொண்டு அறிவித்திடச் செய்யவும் வாய்ப்பு பெற்றதை நாம் எக்காலத்திலும் மறக்க முடியாது!


ஆயினும் தி.மு.கழகத்தின் குறிக்கோள் இந்தச் சாதனைகள் மட்டுமே அல்ல. மாநிலத்தை அரசாளும் உரிமை பெறுவதோ, அதிகாரமுள்ள பதவிகளை அடைவதோ மட்டுமே நம் இலட்சியம் அன்று, கழகத்தின் இலட்சியம் தமிழ் இனவாழ்வை ஒளிரச் செய்ய வேண்டும் என்பதே ஆகும்.


கழகத்தின் உயிர்மூச்சு, சமுதாயச் சமத்துவச் சுதந்திர ஜனநாயக வாழ்வுக்கு வழிகோலுவதில்தான் இருக்கிறது. அந்த நோக்கத்தை மறக்காமலேதான், ஆட்சியில் அமரும் ஒவ்வொரு காலகட்டத்திலும், பல்வேறு பிரிவுகளாக வேறுபட்டுக் கிடக்கும் மக்களிடையே, சமூகநீதி நிலைநாட்டப்படவும், அதன் பயன் பெருகிடவும், ஏற்ற விதிமுறைகளைத் திட்டமிட்டு இயற்றி வந்துள்ளவர் கருணாநிதி.


அவரது பிறந்தநாளை கொண்டாடுவது அவருக்காகவும் அல்ல. அவரது புகழ் பாடுவதற்காகவும் அல்ல. தமிழ் மண்ணில் கருணாநிதி அறியாதவரும் இல்லை. அவரது சாதனைகளை உணராதவரும் இல்லை. நமது கழகப்பணி எந்நாளும் தொடரும், எங்கெங்கும் கழக லட்சிய முழக்கம் ஒலிக்கும் என்பதனை எடுத்துகாட்டவுமோ கழகத்தலைவர் கருணாநிதியின் 88 வது பிறந்தநாளை கொண்டாடுவது நமது கடமையாகிறது.

புடம் போட்ட பத்தரை மாற்று தங்கமாக, தமிழின வாழ்வுக்கும், தமிழக முன்னேற்றத்திற்கும் தன்னை ஒப்படைத்து கொண்ட தலைவரின் பிறந்தநாளினை நாடெங்கும் மாவட்ட தலைநகர், வட்ட தலைநகர், ஒன்றிய தலைநகர், பேரூர் முதலான அனைத்து மையங்களிலும் கொண்டாட வேண்டுமென நம் தோழர்களையெலாம் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.


மாவட்ட கழகங்களும், மாநகர கழகங்களும் அந்தந்த நிர்வாக அமைப்பை கூட்டி தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை பல்வேறு வகையில் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து வருவதை அறிந்து மகிழ்கிறேன். அங்கு இங்கு என்று பிரிந்து காட்ட இயலாதவாறு எங்கெங்கும் யாண்டும் கருணாநிதி பிறந்தநாள் விழா எடுப்பேன், கழக லட்சியம் காத்து வளர்ப்பீர்.


இவ்வாறு அன்பழகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கலைஞரை சந்தித்தார் குலாம்நபி ஆஸாத்


திமுக தலைவர் கலைஞரை காங்கிரஸ் மூத்த தலைவர் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான குலாம் நபி ஆஸாத் 23.05.2011 அன்று காலை டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

காங்கிரஸ் கட்சியின் தமிழக விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் ஆஸாத், கலைஞரை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குச் சென்று சந்தித்தார்.

அதன்பின், ஆசாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைகளால், காங்கிரஸ் & திமுக உறவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எதிர்காலத்திலும் இந்த கூட்டணி நீடித்திருக்கும். கனிமொழி ஒரு பெண் என்ற வகையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதில், சோனியா கவலை கொண்டுள்ளார். ஆனாலும், இவ்விஷயத்தில் காங்கிரஸ் எதுவும் செய்ய இயலாது.
ஸ்பெக்ட்ரம் வழக்கை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணித்து வருகிறது. கல்மாடி வழக்கு உள்பட எந்த வழக்கு விசாரணையிலும் மத்திய அரசு குறுக்கிட விரும்பவில்லை என்பதையும், தற்போதுள்ள சூழ்நிலைகளையும் கருணாநிதி உணர்ந்துள்ளார். வழக்கை சட்டரீதியாக சந்திப்பதாக திமுகவும் கூறியுள்ளது. எனினும் தற்போதைய நிகழ்வுகள் திமுக காங்கிரஸ் உறவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எதிர்காலத்தில் இந்த உறவில் எந்த பாதிப்பும் இல்லை
இவ்வாறு ஆசாத் கூறினார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனும், கருணாநிதியை சந்தித்து பேசினார்.

கலைஞரை 23.05.2011 அன்று இரவு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் வி.நாராயணசாமி ஆகியோரும் சந்தித்தனர்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி, ஆ.ராசா, சரத்குமார் ஆகியோரை சந்திப்பதற்காக கலைஞர் நேற்று டெல்லி சென்றார் என்பது குறிப்பிடத்தகக்து.

சென்னை திரும்பினார் கலைஞர்

இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றிருந்த திமுக தலைவர் கலைஞர் 24.05.2011 அன்று மாலை சென்னை திரும்பினார். அவருடன் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் வந்தனர். முன்னதாக மாலை முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.

கனிமொழி - மு.க.ஸ்டாலின் சந்திப்பு


ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி எம்.பி. சி.பி.ஐ.போலீசாரால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.


இந்த நிலையில் கனிமொழியை பார்ப்பதற்காக முன்னாள் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
23.05.2011 அன்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார் .

டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ தனி நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கு 24.05.2011 அன்று விசாரணைக்கு வந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி உள்ளிட்டோரை போலீசார் அழைத்து வந்தனர். கனிமொழி, ராசா ஆகிய இருவரையும் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசினார். அவர்கள் 50 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
வழக்கு நிலவரம் பற்றி ஸ்டாலினிடம் வக்கீல் சண்முகசுந்தரம் விளக்கினார். நீதிமன்றத்துக்கு வந்திருந்த திமுக முக்கியப் பிரமுகர்களும், கனிமொழியை சந்தித்து பேசினர். மாலை முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.

கனிமொழி ஜாமீன் மனு - விசாரணை ஒத்திவைப்பு :

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி, 23.05.2011 அன்று டெல்லி ஐகோர்ட்டில் கனிமொழி மனுதாக்கல் செய்தார்.

இதேபோல் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் மனுதாக்கல் செய்தார். இந்த மனு 24.05.2011 அன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி வழக்கை வருகிற 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும் இது குறித்து விளக்கம் கேட்டு சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டது.

Friday, May 27, 2011

திகாரில் கனிமொழியுடன் கருணாநிதி சந்திப்பு


திமுக தலைவர் கலைஞர் 23.05.2011 அன்று காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் சென்றார். சென்னை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பரிதி இளம்வழுதி, ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் வழியனுப்பு வைத்தனர்.

கலைஞருடன் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் உடன் சென்றனர்.

மாலையில் கருணாநிதி, அவரது மனைவி ராஜாத்தி அம்மாள், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி.யின் கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா மற்றும் திமுக எம்.பி.க்கள் திகார் சிறைக்கு சென்றனர். கனிமொழியை கருணாநிதி மற்றும் குடும்பத்தினர் சந்தித்து பேசினர். சிறையின் துணை கண்காணிப்பாளர் அறையில் இந்த சந்திப்பு நடந்தது. அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பு பற்றி திகார் சிறை டைரக்டர் ஜெனரல் நீரஜ் குமார், நிருபர்களிடம் கூறுகையில், ‘கனிமொழியுடன் கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும் 30 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தனர். இந்த சந்திப்பை நாங்கள் கண்காணிக்கவில்லை’ என்றார்.
பின்னர், அங்கிருந்து கருணாநிதி, தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றார். அங்கு அவரை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து பேசினார்.
முன்னதாக, டெல்லியில் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக விசாரிக்கும் தனி நீதிமன்றத்தில் கனிமொழியை போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்துக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மனைவி காந்தி அழகிரி, மகன் துரை தயாநிதி ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் கனிமொழியை சந்தித்து பேசினர்.

காந்தி நீதிமன்ற அறையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தவுடன் கனிமொழி நேராக அவரிடம் சென்றார். இருவரும் தங்கள் உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டனர். ஆனால் சிறிதுநேரத்தில் காந்தி அழ ஆரம்பித்துவிட்டார்.

எனினும் கனிமொழி உணர்வுகளை கட்டுப்படுத்தியவராக காந்தியிடம் பேசினார்.

இருவரும் நீதிமன்ற பார்வையாளர் பகுதிக்கு சென்றனர். அங்கு கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள் அவரது பேரன் ஆதித்யாவுடன் அமர்ந்திருந்தார்.

பின்னர் கனிமொழிக்கும், ராசாத்தி அம்மாளுக்கும் இடையே காந்தி அமர்ந்தார். சிறிதுநேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையே, ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் கனிமொழி சார்பில் 23.05.2011 அன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

திமுக உறவில் பாதிப்பு இல்லை - காங். :

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி 23.05.2011 அன்று செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில்,

‘’காங்கிரசுக்கும், தி.மு.கழகத்துக்கும் இருந்து வரும் உறவில் பாதிப்பு ஏதும் இல்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதால்,

அவர் சோனியா காந்தியை சந்திக்க வில்லை, காங்கிரஸ் தலைவர் சோனியாவை, கருணாநிதி சந்திக்க வில்லை என்பதை பெரிது படுத்த தேவை இல்லை. இதனால் தி.மு.க-காங்கிரஸ் உறவு பாதிக்கபடும் என்று கூறுவதும் தவறு’’ என்று கூறினார்.