கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, May 30, 2010

திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு - 30.05.2010


திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு இன்று மாலை அண்ணா அறிவாலயம் முரசொலி வளாகத்தல் உள்ள கூட்ட அரங்கில் தமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கூடியது.

இந்தக் கூட்டத்தில் 2 மணி நேரம் விவாதம் நடைப்பெற்று, 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த 26.04.2010 மற்றும் 15.04.2010 ஆகிய தேதிகளில் இரண்டு கடிதங்களை திமுக தலைவர் கருணாநிதிக்கு அனுப்பினார். இந்த கடிதங்கள் திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் பார்வைக்கு வைக்கப்பட்டன. ராமதாஸ் கடிதத்தில் கூறியிருப்பதாவது,

கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாமக நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது. அன்று முதல் இன்று வரை திமுகவுக்கு ஆதரவு என்கிற நிலைமையில் மாற்றமில்லை.


தோழமை கட்சிகள் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி ஆதரவை விலக்கிக்கொண்டாலும், பாமக உறுதியாக இருந்தது.


இடையே நடைப்பெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்கள் நாங்கள் மறந்து விட்டோம். அதேபோல் நீங்களும் மறந்து விட்டீர்கள் என நம்புகிறோம்.


முன்பு அதிமுக ஆட்சியில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கலைக்கப்பட்ட சட்ட மேலவை கொண்டுவரப்படுவதற்கு, பாமக ஆதரவு தெரிவித்து வாக்களிப்பில் கலந்து கொண்டது. இந்த இணக்கம் தொடர பாமக விரும்புகிறது.


2011 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக தலைமையிலான ஆட்சி அமைய பாமக விரும்புகிறது. அதனால் திமுக கூட்டணியில் பாமக போட்டியிட விரும்புகிறது.


2006ல் 6 எம்எல்ஏக்களைக் கொண்ட சிபிஐக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது. 2008ல் 9 எம்எல்ஏக்களைக் கொண்ட மா.கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது.


அதேபோல் 2010ல் நடக்க உள்ள மாநிலங்களைத் தேர்தலில் பாமகவுக்கு ஒரு இடம் கொடுக்க வேண்டும் என விரும்புகிறோம் என்று கூறியிருந்தார்.


இதை பரீசிலித்த திமுக, தோழமை கட்சிகளோடு எப்போதும் நல்லுறவோடு செல்வதுதான் வழக்கம். 2011ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பாமகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று கூறியுள்ளது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் கே.பி. ராமலிங்கம், டி.எம்.செல்வகணபதி, சங்கரன் கோவில் தங்கவேல் ஆகிய 3 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று தெரிவித்தார்.

பாமகவுடன் மீண்டும் நல்லுறவு ஏற்பட்டிருப்பதாகவும், 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மாநிலங்களவைத் தேர்தலில் பாமகவுக்கு ஒரு இடம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பாமகவுடனான கூட்டணியை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, காங்கிரஸ் தலைவர்களை ஒப்புக்கொள்ள வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் முத்துசாமி, திமுகவில் இணைவது குறித்து இதுவரை பேசவில்லை என்றும், சிறுதாவூர் நிலம் மீட்பு தொடர்பாக திமுக போராட்டம் நடத்த இருப்பதாகவும், விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


இலங்கை தமிழர்களுக்கு உரிய நிவாரணம் போய் சேர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தப்போவதாக தெரிவித்தார்.


தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மக்களவையில் மகளிர் மசோதா நிறைவேற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.


விலைவாசியைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.





ஆர்ப்பாட்டம் நடத்த ஜெ.வுக்கு தகுதி உண்டா? கலைஞர்


ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரி அதிமுக சார்பில் சென்னையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதுதொடர்பாக, முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்,

மத்திய அமைச்சர் ராசா மீது குற்றச்சாட்டு இருப்பதாகக் கூறி, அவர் தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் பதவியை ஏன் ராஜினாமா செய்யவில்லை என்று கேட்டு அதிமுக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.

ஆனால், கடந்த காலத்தில் ஊழல் புகார்கள் கூறப்பட்டு, நீதிபதிகளால் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டபோது, இவர் தார்மிகப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தாரா?


கடந்த 2001 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தார். டான்சி நில பேர வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


ஜெயலலிதாவுக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாலும், அவர் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்ததாலும் அவரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.


இந்த நிலையில், தேர்தல் முடிவு வெளியானதற்குப் பிறகு, ஜெயலலிதாவுக்கு தமிழக முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட தகுதியிழந்த ஒருவருக்கு முதல்வராகப் பதவி பிரமாணம் செய்துவைக்கலாமா என்ற கேள்வி அப்போது எழுந்தது.


ஊழல் வழக்கில் தண்டனை அடைந்த ஒருவர் மேல் நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும் வரை, அரசுப் பதவியில் நீடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


எம்.எல்.ஏ.வாக இல்லாத ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றிருந்தார். அவர் ஆறுமாத காலத்துக்குள் எம்.எல்.ஏ.வாக ஏதாவதொரு தொகுதியில் நின்று வெற்றி பெற வேண்டும். டான்சி மேல்முறையீடு வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த நிலையில்,அவர் எந்தவொரு தொகுதியிலும் போட்டியிட முடியாது. எனவே, அவர் 2001, நவம்பர் 13 ம் தேதி முதல்வர் பதவியை விட்டு விலக வேண்டிய நெருக்கடிக்கு ஆளானார்.


அவருக்குப் பதிலாக அந்தக் கட்சியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்றார்.


இப்படிப்பட்ட ஒருவருக்கு (ஜெயலலிதா) மற்றவர்கள் மீது குறை கூறி ஆர்ப்பாட்டம் நடத்த தகுதி உண்டா என்பதை தமிழ்நாட்டு மக்கள் யோசிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.



Friday, May 28, 2010

எல்லோரும் ஒரே குலமாக இருக்க வேண்டும் - முதல்வர் கருணாநிதி



கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த மாதம் (ஜுன்) 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு மைய நோக்குப் பாடலுக்காக முதல்வர் கருணாநிதி எழுதி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ஒலி-ஒளி குறுந்தகடு (சி.டி.) தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த குறுந்தகட்டின் வெளியீட்டு விழாவும், 2 ஆஸ்கார் விருதுகள் மற்றும் கிராமி விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாராட்டு விழாவும் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் 15.05.2010 மாலை நடைபெற்றது. விழாவுக்கு, முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி, ஒலி-ஒளி சி.டி.யை வெளியிட்டார். அவரிடம் இருந்து வயலின் இசை கலைஞர் எல்.சுப்பிரமணியம் முதல் சி.டி.யை பெற்றுக்கொண்டார். விழாவில் முதல்வர் பேசியதாவது: நேற்று (14-ந் தேதி) இரவெல்லாம் நான் தூங்கவில்லை. காரணம், நீங்கள் இங்கு கேட்டுக்களித்தீர்களே, அந்த தமிழ்ப் பாடல் படத்தை ஒரு முறைக்கு இரு முறை அல்ல; இரு முறைக்கு மூன்று முறை அல்ல; பலமுறை அதைப் போடச் சொல்லிப் பார்த்துப் பார்த்து, அதே நினைவோடு நான் துயில் கொள்ளாமலேயே விடியற்காலை வரையில் விழித்திருந்து இப்போது இங்கே இந்த நிகழ்ச்சியிலே உங்களையெல்லாம் காணுகின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கின்றேன். நான் இந்த பாடலை எழுதியபோது கனிமொழியிடத்திலே ஒரு உறுதி பெற்றுக்கொண்டேன். அந்த உறுதியைப் பெறும்போது, பக்கத்திலே மு.க.ஸ்டாலின், கலாநிதி மாறன், தயாநிதி மாறன் - இவர்களெல்லாம் இருந்தார்கள். அந்த உறுதி என்னவென்றால், "நம்முடைய தம்பி ரஹ்மான் இந்த பாடலுக்கு இசை அமைப்பதற்காக ஒத்துக்கொண்டால், அதைப் பெற்றுத்தருகின்ற வரையில், நீ ஒத்துழைப்புத் தர வேண்டும்'' என்பதுதான். அந்த ஒத்துழைப்பு தரப்பட்ட காரணத்தால், இன்றைக்கு இந்த மாமன்றத்தில் ரஹ்மானுடைய இசையை - நான் எழுதிய வார்த்தைகளோடு குழைத்து - நீங்களெல்லாம் பருகக் கூடிய ஒரு சூழ்நிலை, அரிய வாய்ப்பு உங்களுக்கும் கிடைத்தது; எனக்கும் கிடைத்தது. நான் எழுதிய பாடல்தான். ஆனால், தமிழகத்தினுடைய புலவர் பெருமக்கள், சங்க காலத்து பெருமக்கள், சங்க காலத்திற்கு பின்னர் வந்த கடைச்சங்க காலம், இடைச்சங்க காலம் என்றெல்லாம் சொல்லப்படுகின்ற அந்த பல்வேறு காலக் கட்டங்களிலே வந்த பெருமக்கள், கம்பர் காலம் வரையிலே, காளமேகம் காலம் வரையிலே எழுதப்பட்ட கவிதைகளை, அறிவுரைகளை, கொள்கைகளை, பண்பாட்டினை, தமிழர்களுடைய பழக்கவழக்கங்களை - இவைகளையெல்லாம், ஒரு பாட்டிலே அமைத்து, அதை எழுதுவது எவ்வளவு பெரிய இடர்ப்பாடு கொண்டது என்பதை நான் நன்றாக அறிவேன். அதை நான் எழுதுகின்ற நேரத்தில் என்னருகிலே இருந்த புலவர் பெருமக்கள், பாவலர் பெருமக்கள், தமிழ்ப் பெருமக்கள் எல்லாம், "இது வெற்றிகரமான ஒரு பாடலாக வரவேண்டும்'' என்கின்ற பெரும் ஆவலுடன் பெரிதும் எதிர்பார்த்தார்கள். அதை நான் எழுதும்போது ஏற்பட்ட உணர்வு எத்தகையது என்பதை நான் ஒருவன்தான் அறியமுடியும். ஏனென்றால், அந்த உணர்வோடு ஒன்றிக்கலந்து ஏறத்தாழ 70 ஆண்டுகளாக இருந்த - இன்றைக்கு 87-வது ஆண்டு வருகிற ஜுன் திங்கள் 3-ம் நாள் தொடங்குகிறது என்றாலும், இந்த 87 ஆண்டுகளிலே சின்னஞ்சிறு வயதில் கிட்டத்தட்ட ஒரு 10, 12 ஆண்டுகள் போக, மிச்சமுள்ள ஆண்டுகளெல்லாம் "தமிழ், தமிழ்'' என்றுதான் என் உதடுகள் உச்சரித்திருக்கின்றன. அதனால்தான், யார் ஒருவர் "தமிழ்'' என்று சொன்னாலும் திரும்பிப் பார்ப்பேன். அவர்களோடு ஒன்றிக் கலந்திடுவேன். உணர்வுகளை மதிப்பேன். அதனை மதிக்கின்றவர்கள் எங்கிருந்தாலும், அவர்களை வாழ்த்துவேன். ரஹ்மானை போன்ற இளைஞர்கள், எப்படி முன்னேறினார்கள் என்பதை எண்ணிப்பார்த்தாலே அவருடைய இந்த வரலாற்றை, வாழ்க்கையை சிந்தித்துப் பார்த்தாலே, ஒவ்வொரு இளைஞனும் தான் முயற்சித்தால், எண்ணினால், சிந்தித்தால், உழைத்தால் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையை பெற முடியும். அவருடைய நம்பிக்கை, அவரது இடைவிடாத முயற்சி - இதுதான் காரணம். இது யாரோ ஒரு சிலருக்கு மாத்திரமல்ல, சமுதாயத்தில் உள்ள எல்லா இளைஞர்களுக்கும் ஒரு உந்து சக்தியை ஏற்படுத்தக் கூடிய வரலாற்று நிகழ்ச்சிதான் ரகுமானுடைய வரலாற்று நிகழ்ச்சி என்று சொன்னால் அது மிகையாகாது. ரகுமானுக்கும், எனக்கும் அதிகம் பழக்கமில்லை. பழக்கம் இல்லாவிட்டால் என்ன? எனக்கும், அவருக்கும் உள்ள ஒரே தொடர்பு. அவரும் தமிழன், நானும் தமிழன் என்ற அந்த தொடர்புதான். நான் வியந்தேன், இந்த பாடலைக் கேட்டபோது. முதலிலே இந்த பாடலில் வருகின்ற வரிகளை நீங்கள் மறந்திருக்க முடியாது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று தொடங்குகிறது. எல்லா உயிரும் பிறப்பால் ஒன்றுதான். பிறப்பு எல்லா உயிர்களுக்கும் ஒன்றேதான் என்பதுதான் அதற்கு பொருள். அது பிறந்த பின் என்ன என்பதுதான் இன்றைக்குள்ள பிரச்சினை. பிறந்த பின் எல்லோரும் ஒரே குலம், ஒரே இனம் என்ற உணர்வைப் பெற வேண்டும். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்றாலும் கூட, பிறந்த பிறகு ஒரு இனமாக, ஓர் இனத்தின் சின்னமாக வாழ வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகின்ற வகையிலேதான் இந்த பாடல் அமைந்திருக்கின்றது. அந்த பாடலை இசையோடு, படக்காட்சிகளோடு நீங்கள் இங்கே பார்த்ததைப் போல், தொடர்ந்து இந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவையிலே நடக்கின்ற வரையில் விளம்பரத்திற்காக பயன்படுத்தப்படும். இன்னும் சொல்லப்போனால், கோவை மாநாடே இந்த பாடலோடுதான் ஆரம்பமாகப் போகிறது..." என்றார்.

கருணாநிதி பிறந்தநாள்... அன்பழகன் ஆசை!


தமிழை செம்மொழியென அறிவிக்க செய்த, தமிழ்த் தாயின் தலைமகனாம் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை (ஜூன்-3), செம்மொழி அன்னையின் சீர்பாடும் திருநாளாக எண்ணி கொண்டாட வேண்டும் என நிதியமைச்சர் க.அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட கவிதை போன்ற அறிவிக்கையில், வாழ்வில் ஓர் திருநாள் வரும் ஜுன் 3-ம் நாள் தமிழர்தம் வாழ்வில் ஓர் திருநாள்; வாழ்வினில் நலம் பெறாதார்க்கெல்லாம் நலஞ்செய் திட்டத்தால் வாழ்வினில் ஒளிபெறச் செய்த நாள் கலைஞரின் பிறந்தநாள். திராவிட இன எழுச்சிக்கும், தன்மான நல்லுணர்வுக்கும், பகுத்தறிவு வழிச் சிந்தனைக்கும், சமுதாய மறுமலர்ச்சிக்கும் வழிவகுத்து, புதியதோர் தமிழகம் படைக்கவும், அல்லும் பகலும், நாளும் கிழமையும், அயராது சிந்தித்துச் சிறப்பான முடிவெடுத்து, அரசின் நலத் திட்டங்கள் பலவும் வடித்துத் தந்து, பலகோடி மக்களுக்கும் பயன் கிடைக்கச் செய்திட, அமைச்சர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், காலந்தவறாது கடமையாற்றிடக் கட்டளையிட்டு, கழக அரசு தருவதல்லவோ நல்லாட்சி என்றும், பொற்காலம் படைத்த புனிதரன்றோ முதல்வரென்றும், முத்தமிழ் அறிஞர் கலைஞரை வாழ்த்திடும் நாளன்றோ இது! சிற்றூரில் பிறந்து பேரூரை எல்லாம் ஆள்பவரும், சிறுகுடிச் சேயாகிப் பெருங்குடித் தாயானவரும், நான்காம் தரச் சமுதாயம் தானென்றறிவித்தே, நாட்டினிலே முதல் குடிமகனாக உயர்ந்தவரும், தந்தை பெரியார் தம் குறிக்கோளை நிலைநிறுத்த, அய்யன் அண்ணாவின் நெறிதன்னில் நடந்திடவே, அண்ணாவின் இதயத்தையே கடன் வாங்கிக் கொண்ட கண்ணான கலைஞரின் பிறந்த நாளன்றோ இது! அறிவுச் சூடேற்றிய தந்தை பெரியாரும், தமிழ்த் தென்றல் தவழவிட்ட அறிஞர் அண்ணாவும், எந்த நாளிலும் எய்திடாத இறும்பூதினை எய்துமாறு எழுச்சிïட்டிய திருநாளன்றோ இந்நாள்! யான்வாழும் நாளும் பண்ணன் வாழியவென்றே, அந்த நாள் புலவன் நெஞ்சுகந்து வாழ்த்தியவா இந்த நாள் தமிழர் குதூகலிக்கும் நாளன்றோ இது! தனியொரு தலைவன் பிறந்தநாள்தானே அதுவெனிலோ கலைஞர் என்னும் தனிமனிதன் ஒருவன் பிறந்ததாலே, வாழ்வு பெற்ற இனத்தாரும், வளம்பெற்ற நாட்டாரும், இழிவகற்றி ஏற்றம் பெற்ற, ஒடுக்கப்பட்ட பிற்பட்ட மக்களும், உடமைக்கும், கல்விக்கும் உரிமை கொண்டிட்ட மகளிரும் தென்னகத்தில் படர்ந்த பல்லவர் ஆட்சி நாள் முதலாய், தமிழர்தம் தாய்மொழியாம் தண்டமிழ் தாழ்ந்திட, வந்தாரின் வைதிக ஆதிக்கம் நாளும் வளர்ந்திட, பிறமொழி கொலுவிருக்க நீசமொழியெனப்பட்ட தமிழ் இழந்த உரிமையை மீட்டிடும் நெடுநாள் போரில் ஆங்கில மொழிவழி வாய்த்திட்ட ஆய்வறிவால் உயர்தனிச் செம்மொழியே தமிழென உலகு உணர்ந்திட்ட, உண்மைத் தகுதியை நடுவண் அரசும் முறையுடன் ஏற்று தமிழ்மொழி ஒரு செம்மொழியென அறிவித்திடச் செய்த தமிழ்த்தாயின் தலைமகனாம் கலைஞரின் பிறந்தநாள்! செம்மொழித் தமிழ் அன்னையின் சீர்பாடும் திருநாளன்றோ! கருணாநிதியின் 87-ம் ஆண்டு பிறந்த நாள் விழா, ஜுன் 3-ல் தொடங்கியே ஜுன் 23 முதல் 27 நாட்களில் கொண்டாடப்படும் கோவை, உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பொங்குமாங் கடலாய் ஆர்ப்பரிக்கும் மக்கள் வெள்ளத்தின் வானளாவும் வாழ்த்து முழக்கங்களுடன் நிறைவடையவிருக்கிறது. "அந்த வாழ்வுதான் எந்த நாள் வரும், இந்த மாநிலம் முழுதாண்டிருந்தார்?'' என்னும் புரட்சிக் கவிஞரின் வினாவிற்கு விடை அளிக்கும் வகையில், பதினெட்டு ஆண்டுகள் தமிழ்த் திருநாட்டின் முதல்வராய் விளங்கி, முதல்வர்களுக்கெல்லாம் ஒரு முதல்வராகத் தகுதியினால் உயர்ந்து, முத்து முத்தான சாதனைகள் பல படைத்து, சமத்துவச் சமுதாயம் காண அடுக்கடுக்காகச் சமூகநலத் திட்டங்கள் வழங்கிய வித்தகர் கலைஞரின் பிறந்தநாளை, இந்த திருநாட்டில் பிறந்தவரெல்லோரும் பெருமையுடன் போற்றிக் கொண்டாடுவர் என்பதில் ஐயமில்லை. ஆம்! அந்த நாளைக் கொண்டாடும் கழகத் தோழர்கள், ஊரெங்கும் கழகக் கொடி உயர்த்தி, ஒலிபெருக்கி மூலம் வாழ்த்துப் பண் எழுப்பி, சிறார்க்கு எல்லாம் இனிப்பு வழங்கி, வறியவர்க்கும், வாட்டமுற்றோர்க்கும், முதியோர்க்கும், மாற்றுத் திறனாளிகட்கும், சுவையான உணவளித்துக் கொண்டாடக் கேட்டுக்கொள்கிறேன். கொண்டாடும் நிகழ்ச்சி ஒவ்வொன்றிலும், கோவை உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு செய்தியை ஒலிபரப்பி அனைவரையும் மாநாட்டிற்கு அழைத்திடத் தவறாதீர் என வேண்டுகிறேன்!' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

செம்மொழி மாநாடு கட்சி சார்பற்ற முறையில் நடத்தப்பட வேண்டும்: கலைஞர் அறிக்கை


கோவையில் அடுத்த மாதம் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இதுதொடர்பாக முதல் அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகரில் ஜுன் மாதம் 23 ந் தேதி முதல் 27 ந் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசனை செய்திடவும், நேரடியாக ஆய்வு செய்திடவும், கோவை மாநகரில் 2 நாட்கள் தங்கியிருந்தேன்.

மாநாடு தொடர்பான பல்வேறு ஏற்பாடுகளை வகைப்படுத்தியும், முறைப்படுத்தியும் நேர்த்தியான முறையில் செய்வதற்காக அமைச்சர்களின் தலைமையில் 21 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்களுடன் நான் நடத்திய கலந்தாலோசனை கூட்டத்தில், இதுவரை மாநாட்டிற்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், இனி செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் பற்றியெல்லாம் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களும், அதிகாரிகளும் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் எந்த அளவிற்கு விரைவாகவும், தரத்தோடும் நடைபெறுகின்றன என்பதை எடுத்துக்காட்டின. அமைச்சர்களும், அதிகாரிகளும் மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்குத் தம்மை முழு அளவில் ஈடுபடுத்திக் கொண்டு, முனைப்போடு பணியாற்றிக் கொண்டிருப்பது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக இருந்தது.

மாநாடு தொடர்பாக பொது அரங்க நிகழ்ச்சிகள், ஆய்வரங்க நிகழ்ச்சிகள், கண்காட்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் கொடிசியா அரங்கத்தையும் பார்வையிட்டேன். பொது அரங்க நிகழ்ச்சிக்கான பிரம்மாண்டமான பந்தல் மிக அழகாக உருப்பெற்று வருகிறது. பழம்பெரும் புலவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ள 28 ஆய்வரங்கங்களும் பல்வேறு நாடுகளிலிருந்தும் கலந்து கொள்ளவிருக்கும் தமிழறிஞர்கள் வியந்து பாராட்டும் வண்ணம் அமைக்கப்பட்டு வருகின்றன.

கண்காட்சிக்கான ஏற்பாடுகள் வெறும் கண்காட்சியாக மட்டுமில்லாமல், கருத்துக் காட்சியாகவும், காலமெல்லாம் நினைவுகளிலிருந்து விட்டு அகலாத வகையிலும் உருப்பெற்று வருகிறது. பழந்தமிழர் பண்பாடு, நாகரிகம், தமிழிலக்கிய காட்சிகள் போன்றவை இந்தக் கண்காட்சியில் இடம்பெற உள்ளன. பழந்தமிழர் வாழ்க்கை முறையை இன்றைய தமிழ் இளைஞர்கள் அறிந்து, உணர்ச்சியும், எழுச்சியும் கொள்ளும்வண்ணம், அவை அமைந்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

அதைப்போலவே, ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் ஊர்வலத்திலே ஊர்ந்து செல்லவிருக்கின்ற ரதங்கள் போன்றவை காண்போரைக் கவரும் வண்ணம் உருவாகி வருகின்றன. இவ்வளவு மகிழ்ச்சிக்கும், உற்சாகத்திற்கும் இடையே என் மனதுக்குக் கிலேசம் தருகிற ஒரு காட்சியையும் கோவையிலே காண நேர்ந்தது.

கோவை விமான நிலையம் தொடங்கி, வ.உ.சி. மைதானம் வரை இன்னும் மாநகரின் பல்வேறு இடங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடிகள், பதாகைகள், கழகத்தின் அனைத்து நிலைகளிலும் பொறுப்பேற்றுச் செயல்பட்டுக் கொண்டிருப்போரின் உருவங்கள் தாங்கிய "பேனர்கள்'', திகட்டிப் போகும் அளவுக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருந்தன.

இதே காட்சியை முதல் நாளே, கோவை மாநகருக்குச் துணை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினும் கவனித்துக் கண்டித்திருக்கிறார் என்று கேள்வியுற்றேன்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கட்சி சார்பற்ற முறையில் தமிழ் மொழிக்காகவும், தமிழர்களுக்காகவும், தமிழக அரசால் நடத்தப்படவிருக்கிற மாநாடே தவிர, அது எள்ளின் முனையளவும் கூட கட்சி மாநாடாக காட்சியளித்து விடக் கூடாது என்பதிலே நான் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறேன் என்பதை ஏனோ கோவை மாவட்ட கழக உடன்பிறப்புகள் இன்னும் அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதுதான் எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.

கழகக் கொடிகள், பதாகைகளுக்குப் பதிலாக, பொதுமக்களுக்கு எவ்வித சங்கடமும் ஏற்படாத வகையில் சங்க இலக்கியக் காட்சிகள் அடங்கிய பேனர்கள், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் இலச்சினை தாங்கிய பதாகைகள், பழங்கால மன்னர்களின் திருவுருவங்கள், புலவர்களின் ஓவியங்கள் அழகாக அமைக்கப்படுமானால், அதுவே எனக்கு மட்டுமல்லாமல், மாநாட்டுக்கு வருகிற பல லட்சக்கணக்கான மக்களுக்கும், வெளிநாட்டினருக்கும் நிறைவளிக்கக்கூடிய ஒன்றாகவும், தமிழ் மொழியின் பெருமை, வரலாறு, பண்பாடு இவற்றை விளக்குவதாகவும் இருக்குமென்பதை அனைவரும் அறிந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டுமென்று விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.


என்னிடம் கள்ளக் காதல் கொண்டவர் ஆர் எம் வீரப்பன்! – முதல்வர் கருணாநிதி பேச்சு


எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனின் மகன் தங்கராஜ்- தாரிணி திருமணம் சென்னையில் நடந்தது. திருமணத்தை முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்துப் பேசியதாவது:

அருளாளர் என்று அனைவராலும் அழைக்கப்படுகின்ற அருமைச் சகோதரர் ஆர்.எம்.வீ. இல்லத்தில் நடைபெறுகின்ற இந்த மணவிழா, நம்முடைய இல்லத்தில் நடைபெறுகின்ற ஒரு நிகழ்ச்சி என்கிற உணர்வோடுதான், நாமெல்லாம் இங்கே கலந்து கொண்டிருக்கிறோம்.

ஆர்.எம்.வீ. அவர்களுக்கும், எனக்கும் உள்ள தொடர்பு நீண்டகாலத் தொடர்பு. சுருக்கமாகச் செல்ல வேண்டுமேயானால், மறைந்தும், மறையாத என்னுடைய ஆருயிர் நண்பர் எம்.ஜி.ஆரின் அணுக்கத் தொண்டர்களிலே ஒருவராக, அவசியப்பட்ட ஆலோசகர்களிலே ஒருவராக விளங்கியவர் நம்முடைய ஆர்.எம்.வீ. அவர்கள் என்னோடு கொண்டிருந்த நட்பை, இன்று வரையிலே என்னிடத்திலே அவர் கொண்டிருக்கின்ற அன்பைப் போற்றிப் புகழ்ந்து இங்கே வாழ்த்தியவர்கள் எல்லாம் பாராட்டியிருக்கிறார்கள்.

1945ல் குடியரசு அலுவலகத்தில் நான் தந்தைப் பெரியார் அவர்களிடத்திலே குடியரசு பத்திரிகையினுடைய துணை ஆசிரியராகப் பொறுப்பேற்று, பணியாற்றச் சென்ற அந்தக் காலந்தொட்டு, எனக்கும் ஆர்.எம்.வீ.க்கும் நெருக்கமான நட்பு அரும்பி, மலர்ந்து, இன்றைக்கு மணம் வீசுகின்ற வகையில், மண விழாவினை நான் நடத்தி வைக்கவும், அவர் வரவேற்கவுமான சூழல் உருவாகியிருக்கிறது.

எனக்கும், ஆர்.எம்.வீ-க்கும் என்றைக்குமே பிணக்கு ஏற்பட்டதில்லை என்று இங்கே சொன்னார்கள். நம்முடைய திருமாவளவன் அவர்கள் பேசும்போது, கலைஞரும், ஆர்.எம்.வீ. எதிர்ப்பது என்றாலும் அதில் உறுதியாக இருப்பார்கள்; நட்பு பாராட்டுவது என்றாலும், அதிலும் உறுதியாக இருப்பார்கள் என்று சொன்னார். அதிலே ஒரு ரகசியம் ஒளிந்து கொண்டிருக்கிறது.

அவர் என்னை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்ட அந்தக் காலத்திலேகூட, என்னிடத்திலே கள்ளக்காதல் கொண்டவர்.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், எம்.ஜி.ஆர். தலைமையிலே இயங்கிய அதிமுகவிற்கும் இடையில் சில பிரச்சனைகள் தோன்றும்போதெல்லாம், எனக்கு ஒரு ரகசியக் கடிதம் வரும்.

இன்னும் சொல்லப்போனால், எங்களிடையே ஒரு பிரிவு ஏற்படக்கூடிய ஒரு சூழல்- 1971ம் ஆண்டில் ஏற்பட்டபோது, என்னுடைய இல்லத்திற்கு வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக- அந்தச் சூழ்நிலை உருவாகக்கூடாது; நீங்கள் இருவரும் பிரிந்து இயங்கக்கூடாது; ஒன்றாக இருந்து தான் இயங்க வேண்டும்- பிரிக்கின்றவர்கள் சில பேர் யார் என்பது எங்களுக்குத் தெரியும். ஆகவே, நீங்கள் ஒன்றுபட்டு, தமிழகத்திற்காகப் பணியாற்றுங்கள் என்று கண்ணீர் கலந்து தன்னுடைய கவலையைத் தெரிவித்தவர்களிலே மிக முக்கியமானவர் என்னுடைய அன்பிற்குரிய ஆர்.எம்.வீ. என்று சொன்னால், இது வரலாற்றுப் புத்தகத்திலே பதிய வைக்க வேண்டிய ஒரு பேருண்மையாகும்.

பல நேரங்களில் எம்.ஜி.ஆருக்கும், எனக்கும் அல்லது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையிலே பிணக்கு விளைந்தபோதெல்லாம், அதை சரி செய்யப் பாடுபட்டவர் நம்முடைய ஆர்.எம்.வீ. அவர்கள் என்று சொன்னால், அது மிகையாகாது.

ஏன் அவருக்கு அந்தக் கவலை இருந்தது என்றால், நான் குறிப்பிட்டேனே 1945ம் ஆண்டு- அந்த 1945ம் ஆண்டிலே நாங்கள் இருவரும், இணைந்திருந்து உழைத்த இடம், எங்களுடைய ஆரம்பப் பள்ளிக் கூடம் தொடங்கிய இடம் ஈரோடு.

அந்த ஈரோடு, தந்தைப் பெரியாருடைய குருகுலம். அது உருவாவதற்குக் காரணம், அங்கிருந்து கிளம்பிய உணர்வுகள், நாடெங்கும் பரவியதற்குக் காரணம், திராவிட இயக்கத்தைச் செழிப்படையச் செய்ய வேண்டும்; வலுவடையச் செய்யவேண்டும்- அப்போது தான் திராவிட மக்களுக்கு உண்மையான விடுதலை- உண்மையான சுதந்திரம் கிடைக்கும்- பகுத்தறிவு பெறவேண்டும் மக்கள்- அவர்கள் யாருக்கும் அடிமைகளாக வாழக் கூடாது; சுதந்திரத்தோடு, சுயமரியாதையோடு வாழவேண்டுமென்ற அந்த உணர்வை ஊட்டிய இடம்- எங்களுக்கு ஈரோடு குடியரசு அலுவலகம் என்ற காரணத்தால், அந்தத் தாய்ப்பாலை அருந்திய எங்களுக்கு எவ்வளவுதான் அரசியலிலே மாறுபாடுகள், வேறுபாடுகள் ஏற்பட்டாலும் கூட, அந்த அடிப்படை உணர்விலேயிருந்து பதவிகளுக்காக எங்களை நாங்கள் என்றைக்கும் மாற்றிக் கொண்டதில்லை.

இங்கே தம்பி திருநாவுக்கரசு அவர்கள்கூட, ஆர்.எம்.வீக்கு பதவி கொடுங்கள் என்று சொன்னார். பதவிகளைப் பல பேருக்குக் கொடுக்கின்ற இடத்திலே இருந்தவர் ஆர்.எம்.வீ. அவருக்கு நான் பதவி கொடுப்பது என்பது, ஏதோ தட்டிக் கழிப்பதற்காகச் சொல்லுகின்ற வாசகம் அல்ல; அவர் பதவிகளைப் பகிர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டியவரே தவிர, கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டியவர் அல்ல.

அந்தளவிற்கு இந்த இயக்கத்தினுடைய ஆணி வேராக, அடிவேராக இந்த இயக்கத்தை வளர்க்கின்ற வலுவான விழுதுகளிலே ஒருவராக அன்றைக்கும் இருந்தார்- இன்றைக்கும் இருப்பவர் ஆர்.எம்.வீ. என்பதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன் என்றார் கருணாநிதி.

Sunday, May 16, 2010

ஜெ.,வுக்கு கலைஞர் சவால்


முதலமைச்சர் கருணாநிதி கேள்வி-பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நீங்கள் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து சிறுதாவூர் என்கிற இடத்தில் ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை ஜெயலலிதா அபகரித்து வீடு கட்டிக்கொண்டுவிட்டதாக நீங்கள் பொய்யான தகவலை பரப்பி வந்ததாக ஜெயலலிதாவும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும் கூறியிருக்கிறார்களே?

பேரவையிலேயே இதற்கு நான் பதில் சொல்லியிருக்கிறேன். சிறுதாவூர் கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை அபகரித்தது பற்றி 2006-ம் ஆண்டிலேயே ஊர்வலமாக கோட்டைக்கு வந்து என்னிடம் புகார் மனுவினைகொடுத்தவர், தற்போது அ.தி.மு.க.விற்காக அழைக்காமலேயே இடைத்தேர்தலில் மேடை ஏறி பிரசாரம் செய்த தோழர் என்.வரதராசன் தான். அவர் கொடுத்த புகார் மனுவிலே,

"1967-ம் ஆண்டு அன்றைய தமிழக முதல்-அமைச்சரான சி.என்.அண்ணாதுரையால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய தலித் மக்கள் விவசாயம் செய்து வாழ்வதற்காக 20 குடும்பங்களுக்கு விவசாய நிலம் தலா 2.50 ஏக்கர், குடிமனைக்காக 10 சென்ட் மற்றும் பொது பயன்பாட்டிற்காக ஒரு ஏக்கர் என மொத்தம் 53 ஏக்கர் நிலம், பட்டா வழங்கப்பட்டது.நிர்ப்பந்தமாக வெளியேற்றம்

1992-ம் ஆண்டு வாக்கில் சிறுதாவூரில் அமைந்துள்ள சொகுசு பங்களாவில் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் வந்து தங்க ஆரம்பித்த பின்னர் மேற்படி நிலங்களில் இருந்து தலித் மக்கள் நிர்ப்பந்தமாகவெளியேற்றப்பட்டுள்ளனர்.

பலர் பெயரில் போலி கிரய பத்திரப்பதிவுகளும் நடைபெற்று, முறையான விசாரணை நடைபெறாமல் பட்டா மாற்றங்களும் செய்யப்பட்டு சிறுதாவூர் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட மேற்படி நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. கிடைத்துள்ள வருவாய்த்துறை ஆவணங்கள் அடிப்படையில் சசிகலா குடும்பத்தை சேர்ந்த பலர் பெயரில் பட்டாக்கள் மாற்றப்பட்டுள்ளன.

எனவே, சிறுதாவூர் தலித் மக்களுக்கு மீண்டும் விவசாய நிலம் கிடைத்திடவும்; போலியான பத்திரப்பதிவு மற்றும் பட்டாக்களை ரத்து செய்து சிறுதாவூர் தலித் மக்களுக்கு வழங்கிடவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து உதவிடுமாறுகேட்டுக்கொள்கிறோம். போலி பத்திரப்பதிவு பட்டா மாற்றம் செய்து தலித் மக்களின் நிலங்களை மோசடி செய்தவர்கள் மீது உரிய விசாரணையும், நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டுகிறோம்.

மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தங்கியிருந்த சிறுதாவூர் பங்களா அமைந்துள்ள இடம் அவரது தோழி சசிகலாவின் நெருங்கிய உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் பெயரில் பதிவு மற்றும் பட்டா உள்ளதாகஆவணங்கள் தெரிவிக்கின்றன.

அந்த பங்களாவை சுற்றியுள்ள காம்பவுண்டுக்குள் அரசு புறம்போக்கு நிலம் சுமார் 200 ஏக்கர் வளைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே ஜெயலலிதா மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையால் பதிவுசெய்யப்பட்டுள்ள வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் சிறுதாவூர் பங்களாவும் குற்றப்பத்திரிகையில் சொத்தாக சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்படி நிலங்கள் சம்பந்தமாகவும் தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்தி புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்களை கையகப்படுத்தி சிறுதாவூர் கிராமத்தில் வசிக்கும் நிலமற்ற இதர விவசாய குடும்பங்களுக்கு வழங்கிட வேண்டுமாய்கேட்டுக்கொள்கிறோம்.''

இந்த மனுவின் அடிப்படையிலேதான் உண்மையை அறிய விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இதில் புகார் கொடுத்தவர்கள் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியினர். உண்மையை அறிய விசாரணை கமிஷன் அமைத்ததுதான் அரசின் பணி. இதிலே நான்பொய்யான தகவலை பரப்பினேன் என்று சொல்வது என்ன நியாயம்?

சிறுதாவூர் நிலத்தில் ஜெயலலிதாவுக்கு பங்கு இல்லை என்று நீதிபதி சிவசுப்பிரமணியம் கமிஷன் அறிக்கையில் சொல்லப்பட்டுவிட்டது என்பதை போல சில பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. அந்த சிறுதாவூர் நிலம் தன்பெயரில் இல்லைஎன்று ஜெயலலிதாவும் அறிக்கை விடுத்துள்ளாரே?

பதில்:- சிவசுப்பிரமணியம் கமிஷன் விசாரணையே சிறுதாவூர் நிலத்தில் ஜெயலலிதாவுக்கு பங்கு உண்டா என்பதை பற்றியோ, அந்த நிலம் அவர் பெயரில் உள்ளதா என்பதை பற்றியோ அல்ல. சிறுதாவூர் பங்களா உள்ள நிலம் அவர் பெயரில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

அவரே முன்பு விடுத்த அறிக்கையில் அந்த வீட்டிற்கு வாடகை கொடுத்துவிட்டு தங்குவதாக சொல்லியிருக்கிறாரே? சிவசுப்பிரமணியம் கமிஷன் விசாரணைக்காக அந்த அம்மையாரையே அழைக்கவே இல்லையே! இந்த நிலையில் அவருக்கு பங்கு இருக்கிறதா? இல்லையா? என்ற பிரச்சினை இப்போது எங்கே வந்தது? ஆனால் அவர் அடிக்கடி சென்று தங்குகின்ற சிறுதாவூர் பங்களா யாருடையது,

அவர் யாருக்கு வாடகை கொடுக்கிறார், அந்த பங்களாவின் சுற்றுச்சுவர் மற்றும் வேலிக்குள் அமைந்துள்ள மொத்த நிலப்பரப்பு 115 ஏக்கர்; அதில் 35 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் என்று சொல்லப்படுகிறதே அது உண்மையா? இல்லையா?.

அரசுக்கு சொந்தமான அந்த புறம்போக்கு நிலங்களை அபகரித்து வளைத்துப்போட்டு கொண்டது யார்? சிவசுப்பிரமணியம் கமிஷன் அறிக்கையிலே அந்த பங்களாவிற்கு பக்கத்தில் தலித் மக்களுக்காக அரசினால் வழங்கப்பட்ட 53 ஏக்கர் நிலத்தை வாங்கியவர்கள் `பரணி ரிசார்ட்ஸ்' என்றும், அதன் உரிமைதாரர்கள் வி.என்.சுதாகரன், இளவரசி, சித்ரா என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் எல்லாம் யார்? ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலாவுக்கு மிக நெருக்கமான உறவினர்களா, இல்லையா? 2005-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்திலே அந்த பகுதியிலே உள்ள இடங்களுக்கெல்லாம் ஒரே நாள் இடைவெளியில் பட்டா மாற்றம் மிகவும் அவசர அவசரமாக செய்யப்பட்டதாகவும்,

அந்த பட்டா மாற்றங்கள் செய்வதற்காகவே பத்து நாட்களில்
ஓய்வு பெறுகின்ற நிலையிலே இருந்த தியாகராஜன் என்ற தாசில்தாரரை பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு மாறுதல் செய்து -அவர் முறைகேடாக அந்த பட்டா மாற்றங்களையெல்லாம் செய்து கொடுத்தார் என்றும் சிவசுப்பிரமணியம் கமிஷன் சொல்லியிருக்கிறதே,

அந்த முறைகேடுகளுக்கெல்லாம் பொறுப்பானவர்கள் யார், எந்த ஆட்சியில் அது நடைபெற்றது என்பதை பற்றியெல்லாம்
அறிக்கை விடும் ஜெயலலிதா பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.

சிவசுப்பிரமணியம் கமிஷன் அறிக்கை தங்களுக்கு சாதகமான அறிக்கை என்பதைப்போல ஜெயலலிதாவும், அ.தி.மு.க.வினரும் சொல்லிக்கொள்கிறார்களே?

பதில்:- சிறுதாவூரில் தலித்களுக்காக வழங்கப்பட்ட நிலத்தை சட்ட விதிகளுக்கு புறம்பாக சில பேர் வாங்கிக்கொண்டார்கள்.

அதனை திரும்பப்பெற்று நிலமற்ற தலித்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கோரிக்கையை ஏற்றுத்தான் சிவசுப்பிரமணியம் விசாரணை கமிஷன் நியமிக்கப்பட்டது.

தற்போது அந்த கமிஷன் கொடுத்துள்ள அறிக்கையில், தலித்களுக்காக ஏற்கனவே வழங்கப்பட்ட அந்த நிலம் தற்போது யாருடைய பொறுப்பிலே இருந்தாலும், அந்த பட்டாவையெல்லாம் ரத்து செய்துவிட்டு மீண்டும் நிலமற்ற தலித் மக்களுக்குவழங்கவேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

மேலும் விசாரணை கமிஷன் அறிக்கையில்-தலித்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலம் தற்போது இளவரசி, சுதாகரன், சித்ரா ஆகியோரை பங்குதாரர்களாக கொண்ட `பரணி ரிசார்ட்ஸ்'க்கு சொந்தமாக உள்ளது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வினர் பிரச்சினைக்குரிய அந்த இடம் ஜெயலலிதாவிற்கு சொந்தமல்ல, இளவரசி, சுதாகரன், சித்ரா ஆகியோருக்குத்தான் சொந்தம் என்று சொல்கிறார்கள்.

ஜெயலலிதாவோ விசாரணை அறிக்கையில் அந்த இடத்திற்கும், தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிட்டது; அதுவே நியாயத்திற்கும், தர்மத்திற்கும் கிடைத்த வெற்றி என்று சொல்லி கொள்கிறார். சிவசுப்பிரமணியம் கமிஷன் அறிக்கையை முழுவதுமாக படித்தால் உண்மை புரியும்.

நம்மை பொறுத்தவரையில் சிறுதாவூரில் தலித் மக்களுக்காக வழங்கப்பட்ட நிலத்தையோ, அரசுக்கு சொந்தமான நிலத்தையோ ஜெயலலிதா தன் பெயருக்கு வாங்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் அந்த இடத்தை வாங்கியவர்கள் ஜெயலலிதா குடும்பத்திலே உள்ளவர்களா? இல்லையா? அந்த இடத்தில் கட்டப்பட்ட பங்களாவில் இன்றளவும் ஜெயலலிதா அடிக்கடி சென்று தங்குகிறாரா? இல்லையா? இதிலே என்ன தர்மம்? நியாயம்?

சிவசுப்பிரமணியம் கமிஷன் அறிக்கையில் கூறப்பட்ட சில பகுதிகளை குறிப்பிடுவீர்களா?

நிலம் ஒப்படைக்கப்படும்போது அந்த நிலத்தை வேறு யாருக்கும் விற்கக்கூடாது என்ற நிபந்தனையோடு ஒப்படை செய்யப்பட்டதால் நிலத்தை விற்றிருப்பது-விற்பனை சட்டத்திற்கு புறம்பானது. எனவே அரசு அப்படி விற்கப்பட்ட நிலத்தை திரும்பஎடுத்துக்கொள்ள உரிமை உண்டு.

சிறுதாவூரில் உள்ள பங்களாவை பொறுத்தவரையில் 35 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து அது கட்டப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

இதுவும் கமிஷனின் விசாரணைக்கு உட்பட்டது என்ற போதிலும்-சித்ரா என்பவர் நிலஆக்கிரமிப்பு சட்டத்தின்கீழ் எடுக்கப்படும் நடவடிக்கையை தான் சந்திக்க தயாராக இருப்பதாக சொன்னதாலும், அரசு தரப்பிலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாலும்-நிலம்இல்லாத ஏழைகளுக்கு வழங்கப்பட்ட 53 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டதாக சொல்லப்படும் பிரச்சினை குறித்து மட்டும் விசாரணை செய்ய கமிஷன் முடிவு எடுத்தது.

`பரணி ரிசார்ட்ஸ்' என்ற நிறுவனம் அந்த நிலத்திற்கான பட்டா மாறுதலை சட்டத்திற்கு முரணாக தவறான முறையில் விசாரணை எதுவுமின்றி பெறுவதற்காக அதிகார துஷ்பிரயோகம் நடைபெற்றிருக்கிறது. பட்டாவை இவ்வாறு வழங்குவதற்கென்றே தூத்துக்குடியில் பணியாற்றி கொண்டிருந்த எம்.தியாகராஜன் என்ற வட்டாட்சியர் ஒருவரை - அவருக்கு என்றே ஒரு பணி இடத்தை உருவாக்கி -காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு திடீரென்று பணி மாற்றம் செய்து -அவர் மூலமாக அதிகாரதுஷ்பிரயோகம் செய்து பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

பட்டா மாறுதலுக்கான விண்ணப்பம் 27-10-2005 அன்று தாக்கல் செய்யப்பட்டு-வட்டாட்சியர் தியாகராஜன் 31-10-2005 அன்று ஓய்வு பெற இருந்ததால்-எந்தவிதமான விசாரணையும் இன்றி-ஒரே நாளில்-அதாவது 28-10-2005 அன்றே பட்டா மாறுதல்செய்யப்பட்டது.

பட்டா மாறுதலுக்கான விண்ணப்பம் யாரோ ஒருவரால் கொடுக்கப்பட்டுள்ளது. `பரணி ரிசார்ட்ஸ்' நிறுவனத்தை சார்ந்தவர்களாலோ, அல்லது அந்த நிறுவனத்தை சேர்ந்த பங்குதாரர்களோ விண்ணப்பம் தரப்படவில்லை.

சசிகலாவிற்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. இந்த பிரச்சினையில் தான் சம்பந்தப்படவில்லை என்று அவர் பதில் தாக்கல் செய்திருந்தபோதிலும்-கமிஷன் முன் ஒரு சாட்சியாக விசாரணைக்கு வரவோ-அவரது குடும்ப உறுப்பினர்கள் இதில்சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை மறுக்கவோ இல்லை.

`பரணி ரிசார்ட்ஸ்' நிறுவனத்தின் பிரதிநிதியான டி.சித்ரா என்பவர் பொய் வாக்குமூலங்களை கொடுத்துள்ளார். நிலத்தை 2005-ம் ஆண்டில்தான் வாங்கியதாக அவர் சொல்லியிருக்கிறார். ஆனால் 1994-ம் ஆண்டிலிருந்தே நிலத்தின் பெரும் பகுதி `பரணி ரிசார்ட்ஸ்' நிறுவனத்தின் கைவசம்தான் இருந்து வந்திருக்கிறது. இது சட்டத்திற்கு புறம்பான-எந்தவிதமான உரிமையும் இல்லாமல்-முறைகேடான முறையில்-வரம்பு மீறி கைவசம் வைத்திருந்த செயலுமாகும். (இத்தகைய இடத்திலே கட்டப்பட்டுள்ள மாளிகையில் தான் ஜெயலலிதா சென்று தங்குகிறார்).

உங்கள் மீது ஜெயலலிதா மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்று சொல்லியிருக்கிறாரே?


சந்திக்க தயாராக இருக்கிறேன். அப்போதுதான் விரிவான முறையில்-இன்னும் பல விவரங்களையும், விளக்கங்களையும்
சொல்ல முடியும். தொடக்கத்திலிருந்து பிரச்சினைக்குரிய இடங்கள் எப்படியெப்படி யார், யார் பெயர்களில் மாற்றப்பட்டன, அதற்கு அ.தி.மு.க. ஆட்சியில் அரசு இயந்திரம் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டது.

அரசு அதிகாரி ஒருவர் சட்டவிதிகளையெல்லாம் காற்றிலே பறக்கவிட்டு விட்டு, எப்படியெல்லாம் செயல்பட்டார், அதற்கு மேல் அதிகாரிகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்தும் அதை மீறி எப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, சிவசுப்பிரமணியம் கமிஷன் அறிக்கையிலே இன்னும் என்னென்ன சொல்லப்பட்டிருக்கின்றன, பங்களாவிற்குள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கும் அரசு புறம்போக்கு நிலத்தின் கதி என்ன, என்பன போன்ற விளக்கங்கள் எல்லாம் வெளிவர அவர் என் மீது தொடுக்கின்ற வழக்கு உதவியாக இருக்கும்.

Friday, May 14, 2010

திமுகவில் இணைந்தார் நடிகை குஷ்பு




திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி முன்னணியில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணி அளவில் நடிகை குஷ்பு திமுகவில் இணைந்தார்.

நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, பரிதி இளம்வழுதி உள்ளிட்டவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், மகளிர் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அப்போது கலைஞர், பேராசிரியர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர்களுக்கு சால்வை அணிவித்தார் குஷ்பு. இதையடுத்து திமுகவின் அடிப்படை உறுப்பினர் அட்டையை குஷ்புவிடம் கலைஞர் வழங்கினார்.

திமுகவில் இணைவது மிகவும் பெருமையாக இருக்கிறது. திமுக தலைவர் முன்னணியில் கட்சியில் இணைய வேண்டும் என்று நீண்ட நாள் கனவு. அது இன்று நிறைவேறி இருக்கிறது. அரசியலில் ஈடுபட்டு மக்கள் பணியாற்றவே திமுகவில் இணைகிறேன் என்று குஷ்பு கூறினார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த கலைஞர்,

கேள்வி: திமுகவில் இணைவதால் குஷ்புவின் பங்களிப்பு என்னவாக இருக்கும்.

பதில்: குஷ்பு முற்போக்கான கருத்துக்களை கொண்டவர். பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர். திமுகவில் மகளிர் அணியில் இணைந்து திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபடுவார்.

கேள்வி: திமுகவில் குஷ்புக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும்?

பதில்: நானே திமுகவில் இணைந்தபோது எந்த பொறுப்பும் இல்லாமல்தான் இருந்தேன். பேராசிரியர் அன்பழகன், ஸ்டாலின் ஆகியோர் கட்சியில் சேர்ந்தபோது பொறுப்புகள் இல்லாமல்தான் இருந்தார்கள். கட்சியில் ஆர்வம், உழைப்பு, நேர்மை போன்றவைகளால் பொறுப்பு வழங்கப்படுகிறது. அதேபோல் குஷ்புக்கு பொறுப்பு வழங்கப்படும்.

கேள்வி: காங்கிரஸ் கட்சியில் குஷ்பு இணைவதாக செய்திகள் வெளியானதே?

பதில்: காங்கிரஸ் கட்சியுடன்தானே கூட்டணி வைத்திருக்கிறோம்.

கேள்வி: திமுகவில் திடீரென குஷ்வு இணைந்திருக்கிறாரே?

பதில்: உங்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு இணைகிறார் என்று தெரியும். திடீரென இணைகிறார் என்று நினைக்கக் கூடாது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக திமுவில் இணையப்போவதாக அவர் முடிவெடுத்துவிட்டார்.

கேள்வி: வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக குஷ்புவை வேட்பாளராக நிறுத்தும் யோசனை உள்ளதா?

பதில்: அந்த மாதிரியான யோசனைகள் எல்லாம் இல்லை.

கேள்வி: திமுகவில் இணையும்படி குஷ்பு மிரட்டப்பட்டாரா?

பதில்: அதுபோன்ற கேவளமான நடைமுறைகள் எங்களுக்கு இருந்ததில்லை. குஷ்புவும் அப்படித்தான்.

கேள்வி: திமுகவில் சற்குணப்பாண்டியன் போன்ற மூத்த அனுபவம் மிக்கவர்கள் மகளிர் அணியில் இருக்கிறார்களே? அவர்களுக்கும் தற்போது வந்திருக்கும் குஷ்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படாதா?

பதில்: ஏன் கலகத்தை மூட்டுகிறீர்கள் (சிரித்தபடியே)






Thursday, May 13, 2010

முதல்வர் கருணாநிதி ஆங்கில பத்திரிக்கை டெக்கான் கிரானிக்கல் பேட்டி


கேள்வி: உங்கள் ஆட்சியில் அதிகார மையங்கள் நிறைய உள்ளதாகவும், நிர்வாகத்திலும் ஆட்சி அதிகாரத்திலும் அவற்றின் தலையீடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே?

பதில்:
குற்றம் சாட்டாவிட்டால், பின்னர் எப்படி அவை எதிர்க்கட்சிகளாக இருக்க முடியும்? அதிகார மையங்கள் என்பதில் அர்த்தமும் இல்லை; அடிப்படையும் இல்லை. கேள்வி: சினிமா துறையினருக்கு நீங்கள் அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் தருவதாகவும் ஒரு விமர்சனம் முன் வைக்கப்படுகிறது. தமிழ் மக்களிடத்தில் சினிமா நடிகர்களுக்கு உள்ள செல்வாக்கை உங்களுக்கான ஆதரவாக மாற்றும் முயற்சியா இது?

பதில்:
அரசியல் துறையிலே இருப்பதைப் போலவே, இலக்கியத் துறையிலே இருப்பதைப் போலவே சினிமா துறையிலும் எனக்கு ஏராளமான நண்பர்கள் அந்தக் காலத்திலிருந்தே உண்டு. அந்தத் துறையைச் சேர்ந்த நண்பர்கள் அடிக்கடி என்னைச் சந்திப்பார்கள். அது தானே தவிர அந்தத் துறைக்கென்று அபரிமிதமான முக்கியத் துவம் எதையும் நான் தர வில்லை. அந்தத் துறையிலே உள்ள தொழிலாளர்கள் மீது அந்தக் காலத்திலிருந்தே எனக்கு தனிப்பட்ட அன்பு உண்டு. அதன் காரணமாக அவர்களுக்கென்று சில பல சலுகைளை நான் ஆட்சிப் பொறுப்பிலே இருக்கின்ற காரணத்தால், செய்கின்ற காரணத்தினால், அந்தத் துறைக்கு நான் அதிக முக்கியத்துவம் தருகிறேன் என்று உங்களைப் போன்ற சிலர் கருதுகிறார்கள் போலும். கேள்வி: முன்பெல்லாம் தேர்தல் களம் என்பது கொள்கைப் பிரச்சாரம் வாதம் எதிர்வாதம் என அமர்க்களப்படும். ஆனால் இப்போது ஏராளமாக பணம் புழங்குவதும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிற காரணியாக பண பலம் மாறி விட்டதற்கான சூழல் தென்படுகிறது. வாக்காளர்களே பணம் கேட்கும் நிலை ஏற்படுவதாக தேர்தல் அதிகாரிகளே வருந்துகிறார்கள். சாமானியர்கள் தேர்தலைப் பற்றி சிந்திக்க முடியாமல் செய்து விடும் இந்தச்சூழல் ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதா?

பதில்:
காலக்கணக்கெடுத்திட நீங்கள் நண்பர் சோ அந்தக் காலத்தில் நடத்திய சம்பவாமி யுகே யுகே நாடகத்தைப் பார்த்திருக்க வேண்டும். கேள்வி: நீங்கள் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர். சென்னையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது நேரில் சென்று கண்டு ரசிக்கவும் நீங்கள் தவறுவதில்லை. ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டியில் மாறுபட்டுள்ள டி.20 போட்டி உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? அண்மைக் காலத்தில் உங்களைக் கவர்ந்த வீரர்கள் யார்?

பதில்:
டி.20 போட்டிகள் விளையாட்டு வீரர்களின் திறமையைப் பொறுத்து முடிவுகள் அமைய வேண்டுமே தவிர சூதாட்டக்காரர்களின் முடிவுகளாக அமைந்து விடக்கூடாது என்று நினைக்கிறேன். தொடர்ந்து டெண்டுல்கர் பொறுப்புணர்வோடு விளையாடுவது என்னைக் கவர்ந்த ஒன்றாகும். அண்மைக் கால வீரர்களைச் சொல்ல வேண்டுமானால் சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் டோனி, ஷேர்ன் வாட்சன், ஜாகஸ் காலீஸ் போன்றவர்கள் என்னைக் கவர்ந்தவர்களாவர். கேள்வி: தமிழ்நாட்டில் பொதுவாக தொழில் வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், கிராமப் புறங்களில் வறட்சியும் வறுமையும் தொடர் கின்றனவே? வேலையில்லாத் திண்டாட்டமும், வேலை தேடி நகரங்களுக்குப் படையெடுக்கும் சூழலும் நீடிக்கின்றனவே?

பதில்:
தமிழ்நாட்டில் பொதுவாக தொழில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டதற்காக நன்றி. கிராமப்புறங்களிலே வறட்சியும் வறுமையும் தொடர்வதாகக் கேட்டிருக்கி றீர்கள். தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் கிராமப்புறங்களில் நடைமுறைப்படுத்துவதாலும்; ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டத்தினாலும் கிராமப்புறங்களில் பெருமளவுக்கு வறுமையும் வறட்சியும் குறைந்து வருகிற தென்பதைக் கண்கூடாகக் காணலாம். கிராமப்புறங்களிலும் வளமையைக் கொண்டுவர வேண்டுமென்பதற்காகத் தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.


அதற்காகத் தான் புதிதாக தொழில் தொடங்க வரும் முதலீட்டாளர்களை யெல்லாம் கிராமப் புறங்களிலே தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டுமென்றும், அந்தத் தொழிற்சாலை அமைகின்ற பகுதிகளிலே உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம். கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு அத்தகைய தொழிற் சாலைகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கு மேயானால, நகரங்களுக்கு படையெடுக்கும் சூழல் தானாகவே குறைந்து விடும்.

கேள்வி: நான்காண்டு கால ஆட்சியில் ஒரு ரூபாய்க்கு அரிசி, இலவச டி.வி., கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை, சட்ட மன்றக் கட்டடம், வீட்டு வசதித் திட்டம் என சாதனைப்பட்டியல் நீளமானது. இவற்றில் உங்களைக் கவர்ந்தது எது?

பதில்:
ரோஜா தோட்டத்தில் உங்களைக் கவர்ந்த ரோஜா எது எனக் கேட்பதைப் போல இருக்கிறது.

கேள்வி: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகி, அழகிரி மாநில அரசியலுக்கு வருவார் என்றும், கனிமொழி மத்திய அமைச்சராக பதவி உயர்வு பெறுவார் என்றும் ஊடகங்களில் செய்திகள் அடிபடுகின்றனவே?

பதில்:
நீங்கள் தான் உங்கள் கேள்வியிலேயே ஊடகச் செய்தி என்று சொல்லி விட்டீர்களே?

கேள்வி: ஜெயலலிதாவுக்கு சின்சியாரிட்டி பிடிக்கும். உங்களுக்கு சீனியாரிட்டி பிடிக்கும் என்பது பரவலாகப் பேசப்படும் விஷயம். அமைச்சரவையிலும், சட்ட மன்றத்திலும் புதிய முகங்களை, புதிய சிந்த னையை வரும் ஆண்டிலாவது பார்க்க முடியுமா?

பதில்:
என்னைப் பொறுத்த வரையில் சின்சியாரிட்டி யோடு இணைந்த சீனியாரிட்டி யைத்தான் நான் எப்போதும் மதிப்பவன். கழகம் அவ்வப்போது தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வருவதை அனைவரும் அறிவர். புது முகங்களுக்கும் புதிய சிந்தனைக்கும் கழகத்தில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. கடைசியாக நடைபெற்ற பென்னாகரம் இடைத்தேர்தலில் கூட படித்த ஒரு இளைஞரான புது முகத்தைத் தானே நிறுத்தி வெற்றி பெறச் செய்தோம்.

கேள்வி: இப்போது 5 வது முறையாக முதல் மந்திரியாக இருக்கிறீர்கள். ஏற்கனவே 4 முறை முதல் மந்திரி பதவியில் இருந் துள்ளீர்கள். இந்த காலத்தில் நீங்கள் நினைத்த எல்லா திட்டங்களையும் நிறைவேற்றி விட்டீர்களா? அல்லது இன்னும் நிறைவேற்ற வேண்டியவை இருக்கிறதா?

பதில்: ஏற்கனவே நான்கு முறை பதவியிலே இருந்த காலத்திலும், தற்போது ஐந்தாவது முறையாக ஆட்சிப் பொறுப்பிலே இருக்கின்ற நிலையிலும் மக்களின் தேவைகளை ஓரளவிற்கு நிறைவேற்றினோம் என்ற மன நிறைவு எனக்குள்ளது என்ற போதிலும் இன்னும் ஏராளமாக மக்களுக்கு செய்திட வேண்டு மென்ற வெறி எனக்குள் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றது. மக்களிடம் தேவை என்று ஒன்று இருக்கின்ற வரையில் அதனைப் பூர்த்தி செய்திட வேண்டுமென்ற எனது விருப்பம் இருந்து கொண்டுதானே இருக்கும்.

கேள்வி: சட்டசபை தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி நீடிப்பது குறித்து சோனியாவிடம் பேசினீர்களா?

பதில்: தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி; வரும் சட்டப் பேரவைத் தேர்தல்களுக்கும் தொடரும் என்று இரு தரப்பிலும் பலமுறை வெளிப்படையாகச் சொல்லியாகிவிட்டது. எனவே அண்மையில் அவர்களைச் சந்தித்தபோது, அது பற்றி பேசவில்லை.

கேள்வி: அதிகாரம் மற்றும் அரசியலில் இருந்து விலகி இருக்கப் போவதாக நீங்கள் 2 தடவை சொல்லி விட்டீர்கள். இந்த நிலையில் அடுத்த தேர்தலில் போட்டியிடுவீர்களா?

பதில்: எனது இறுதி மூச்சு இருக்கும் வரையில் இலக்கியத்தையும், அரசிய லையும், மக்கள் பணியையும் என்னிடமிருந்து எதுவும் பிரித்து விட முடியாது. ஏதோ ஒரு வகையில் என் னுடைய தொண்டு மக்க ளுக்காகத் தொடர்ந்து கொண்டே இருக்கும். அடுத்த பொதுத் தேர்தலில் நிற்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை.

கேள்வி: கடந்த 4 ஆண்டில் நீங்கள் செய்த முக்கிய சாதனைகள் என்ன?

பதில்: தமிழகத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் கழக அரசு செய்துள்ள எண்ணற்ற சாதனைகள் என் எண்ணத்தில் நிழலாடுகின்றன. எனினும், 1 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டம், உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கலைஞர் வீட்டு வசதி திட்டம் ஆகிய மூன்றும் மறக்க முடியாதவை மட்டுமல்ல; மகத்தான சாதனைகளாகும்.

கேள்வி: உங்களின் மிக முக்கிய திட்டமாக எதை கருதுகிறீர்கள்?

பதில்: பெரியார் நினைவு சமத்துவப்புரத் திட்டம் அண்ணா மறு மலர்ச்சித் திட்டம்.

கேள்வி: தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

பதில்: பசியும், பிணியும் தீண்டாத தமிழகம்; இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அனைத்துத் துறைகளிலும் முன்னேறி முதல் நிலையில் இருக்கும் தமிழகம்; சமத்துவமும், சகோதரத்துவமும் பின்னிப் பிணைந்து இழையோடும் தமிழகம்; தாய்மொழிப் பற்றும், தாயகத்தின் மீது பாசமும் நிறைந்துள்ள தமிழகம் இவைதான் நான் கனவு காணும் தமிழகம்.

கேள்வி: சென்னையின் தோற்றத்தை மாற்றும் திட்டம் உள்ளதா?

பதில்: சென்னையின் முகத்தையும், தோற்றத்தையும் மாற்றுவதற்கு ஏராளமான திட்டங்களை கழக அரசு வகுத்து செயல்படுத்தி வருகிறது. தமிழக துணை முதல் அமைச்சர், தம்பி மு.க. ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்தபோது சென்னையை சிங்கார சென்னையாக மாற்றிட பத்துக்கு மேற்பட்ட மேம்பாலங்கள், நகர் முழுவதிலும் அழகழகான பூங்காக்கள், சென்னைக் கடற்கரையை அழகு படுத்தும் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களை வகுத்து முறையாகச் செயலாற்றியிருக்கிறார். தற்போது அடையாறு பூங்கா அமைக்கும் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை உயர்நிலை விரைவுச்சாலை திட்டம் போன்றவையெல்லாம் சென்னையின் முகத்தை அழகுபடுத்துவதற்கான திட் டங்கள்தான்.

கேள்வி: சென்னையில் துணை நகரம் அமைக்க திட்டம் தீட்டினீர்கள். அந்த திட்டம் வருமா?

பதில்: சென்னையைப்போல் வேகமாக வளர்ந்து வரும் மாநகரங்களுக்கு துணை நகரம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இரண்டாண்டுகளுக்கு முன்பு துணை நகரம் ஒன்றினை உருவாக்கிடத் திட்டமிடப்பட்டு பல்வேறு காரணங்களால் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினை ஒரு துயரமான முடிவுக்கு வந்திருக்கிறது. அந்நாட்டில் போர் முடிந்து, இரு தேர்தல்கள் நடந்துள்ள நிலையிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கவும் அரசியல் தீர்வு ஏற்படவும் இந்தியாவின் நடவடிக்கைகளில் மெத்தனமும் அலட்சியமும் தென்படுகின்றனவே?

பதில்:
இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அங்குள்ள தமிழர்கள் எல்லாம் அமைதியான நல்வாழ்வு வாழ வேண்டும். அவர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது தான் இங்குள்ள மத்திய, மாநில அரசுகளின் பெரு விருப்பமாகும்.


இலங்கை ஒரு அன்னிய நாடு என்கிற போது தான், அவர்களின் உள்நாட்டுப் பிரச்சினைகளில் நாம் தலையிடும்போது முள்ளில் விழுந்த துணியை, கிழியாமல் எடுப்பது போல் எடுக்க வேண்டியிருக்கின்றது. அந்த அளவிற்கு மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே, இங்குள்ள ஒருசில அரசியல்வாதிகள் அரசியல் ரீதியான உள்நோக்கங்களோடு, ஏதோ அவர்கள் தான் இலங்கைத் தமிழர்களுக்காகப்பாடுபடு பவர்களைப் போல நடிக்கிறார்களே தவிர, வேறொன்றும் இல்லை.

உதாரணமாக பார்வதி அம்மாள் பிரச்சினையையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலை. இருந்தாலும் ஒருசிலர் தங்களின் அரசியல் அபிலாஷைகளுக்காக அந்த அம்மையாரின் உடல் நிலையை வைத்து தாங்கள் தான் அவர்மீது அக்கறையும், பாசமும், பற்றும் உள்ளவர்கள் என்பதைப்போல திட்டமிட்டு எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி: தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படும் நிலைமை தொடர்கிறதே?

பதில்:
இந்தத் துன்பத்தைகளைவதற்கு பல ஆண்டுகளாக நம்மால் முடிந்த முயற்சிகளையெல்லாம் செய்து கொண்டு தான் வருகிறோம். எனினும் மீண்டும், மீண்டும் அந்தக் கொடுமை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது என்று அந்தப் பேட்டியில் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

கேள்வி: இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததும் காங்கிரசிடம் ஒரு கர்வமும் பெரிய அண்ணன் போக்கில் நடந்து கொள்வதாகவும் டெல்லி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் அன்னையார் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில்கூட தமிழக அரசோடு கலந்தாலோசிக்கவில்லை என்று தி.மு.க. குற்றம்சாட்டி இருக்கிறது.

பதில்:
இது ஏதோ உள்நோக்கத்தோடு கேட்கப்படுகின்ற கேள்வியைப் போல உள்ளது.இருந்தாலும் பதில் கூறுகிறேன். காங்கிரசிடம் எந்தக் கர்வமும் ஏற்படவும் இல்லை. பெரிய அண்ணன் போக்கில் அவர்கள் நடந்து கொள்ளவும் இல்லை. இவை வெறும் கற்பனை. அண்மையில் நான் டெல்லி சென்றிருந்தபோது கூட, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மிகுந்த அன்போடு என்னை வரவேற்றார்கள். பிரபாகரனின் அன்னையார் விவகாரத்தில் கூட தமிழக அரசோடு மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை என்று தி.மு.க. தரப்பில் யாரும் குற்றஞ்சாட்டவில்லை. பிரபாகரனின் அன்னையார் தரப்பிலிருந்து தான் யாரும் தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் நீங்கள் வேண்டுமென்றே அனைத்தையும் மாற்றி கேள்வி கேட்டிருக்கிறீர்கள்.




Monday, May 10, 2010

பார்வதி அம்மாள் தமிழகம் வந்து சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி



சட்டசபையில் இதுகுறித்து சட்டமன்ற விதி 110ன் கீழ் முதலமைச்சர் கருணாநிதி அறிக்கை ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘’கடந்த ஏப்ரல் மாதம் 16ந் தேதி இரவு, பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மலேசியாவிலிருந்து சென்னைக்குச் சகிச்சைக்காக வந்த போது, அவர்கள் சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டதாக 17.04.2010 அன்று ஊடகங்களில் செய்தி வெளியானது. அதுபற்றி, சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தில் கடந்த 19.04.2010ம் நாளன்று விவாதிக்கப்பட்டது.

நான் அதற்கு பதில் கூறிய போது, பார்வதி அம்மாள் தமிழகத்திற்கு வருவது பற்றி, அவர்களிடமிருந்தோ அவர்களுக்குத் துணைபுரிய விரும்புபவர்களுடமிருந்தோ தமிழக அரசுக்கு எந்தவிதமான கடிதமோ, தகவலோ வரவே இல்லை என்றும், மத்திய அரசுக்கும் பார்வதி அம்மாளுக்கும் இடையே தான் இந்த பயணம் பற்றிய செய்தித் தொடர்பு இருந்திருக்கிறதே தவிர, தமிழக அரசுக்கு இதில் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்றும், அதன் காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டார்கள் என்றும்,

அப்படித் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் கோலாலம்பூருக்கே திரும்பச் சென்று வைத்திய வசதி பெறுவதாகப் பத்திரிகைகளில் செய்தி வந் திருக்கிறது என்றும், அவர்கள் மீண்டும் தமிழகத்தில்தான் வைத்திய வசதி செய்து கொள்ள விரும்புகிறேன் என்று அறிவிப்பார்களேயானால், அதைப் பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு எழுத மாநில அரசு தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்தேன்.

30.04.2010 அன்று மின் அஞ்சல் மூலமாகப் பெறப்பட்டுள்ள, பார்வதி அம்மாளின் பெருவிரல் ரேகை பதித்த கடிதத்தில், தனது சிகிச்சைக்காக கோலாம்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வர மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலமாக ஏற்பாடு செய்து தரும்படி எனக்கொரு கோரிக்கை வந்தது.

எனவே நான் ஏற்கனவே சட்டமன்றப் பேரவையில் அறிவித்ததிற்கிணங்க, பார்வதி அம்மாள் கேட்டுக் கொண்டபடி, மருத்துவச் சிகிச்சைக்குத் தமிழ்நாட்டிற்கு வந்து மருத்துவமனையிலே சிகிச்சை பெறுவதை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு மத்திய அரசு ஆராய்ந்து அனுமதியளிக்கலாம் என்று பரிந்துரைக் கடிதம் மத்திய உள் துறைச் செயலாளருக்கு தமிழக அரசால் 01.05.2010 அன்று அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விவரங்களைத தமிழகச் சட்டப் பேரவையில், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 03.05.2010 அன்று தெரிவித்தார். 3, 4 தேதிகளில் டெல்லியில் நான் பிரதமரிடமும், சோனியா காந்தியிடமும், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடமும் இந்த பிரச்சனை குறித்து தெரிவித்து அவர்களின் உதவியை நாடினேன்.

அதன் தொடர்ச்சியாக நமது சார்பில் அன்றாடம் மத்திய அரசின் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு விரைவிலே ஒரு நல்ல பதில் கிடைப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டோம். மத்திய அரசு 07.05.2010 தேதியிட்டு மலேசியா, கோலாலம்பூரிலே உள்ள இந்தியத் தூதுவருக்கும் நகல் நமக்கும் அனுப்பியுள்ள கடிதம் ஒன்று நேற்றையதினம் வந்துள்ளது.

அந்த கடிதத்தில் மனிதாபிமான அடிப்படையில் பார்வதி அம்மாளை சில நிபந்தனைகளின் பேரில் தமிழகத்திற்கு வர அனுமதிக்கலாம் என்று எழுதியிருக்கிறார்கள். நிபந்தனைகளாக, பார்வதி அம்மாளின் தமிழக வருகை மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே இருக்க வேண்டும்;

அவர் மருத்துவமனையிலேதான் தங்க வேண்டும் தவிர, வேறெங்கும் தங்கக் கூடாது; அரசு மருத்துவமனையிலே அவர் சிகிச்சை பெற விரும்பினால், தமிழக அரசு அதற்குத் தேவையான உதவிகளையெல்லாம் செய்திட வேண்டும்; அவர் எந்த அரசியல் கட்சியினரோடோ, குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு பங்கு வைத்திருப்பவர்களோடு, எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது; பெயர் குறிப்பிடப்பட்ட அவருடைய உறவினர்களோடு மட்டுமே தொடர்பு வைத்துக் கொள்ளலாம்; என்று அந்தக் கடித்தில் எழுதப்பட்டுள்ளது.

மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரகம் பார்வதி அம்மாளோடு தொடர்பு கொண்டு ஆறு மாத காலத்திற்கு ""விசா'' வழங்கலாம் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கு எந்தவிதமான குந்தகமும் இல்லாமல் இந்த ஆணை மத்திய அரசினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக இதுபோன்ற நிகழ்வுகளில் முடிவு எடுப்பதற்கு சில காலம் பிடிக்கும் என்றாலும், பார்வதி அம்மாளின் உடல் நிலை கருதி, மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு மேல் மலேசியாவில் உள்ள அந்த பார்வதி அம்மாளின் முடிவுக்கிணங்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை இந்த அவைக்கும் நாட்டிற்கும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று தெரிவித்தார்.