கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 18, 2011

தேர்தல் ஆணையத்தில் உத்தமர்கள் வேண்டும் மத்திய அரசுக்கு கோரிக்கை - புதுச்சேரி கூட்டத்தில் கருணாநிதி வேண்டுகோள்



தேர்தல் ஆணைய தலைவர், உறுப்பினர்களை நியாயம் தவறாத, நடுநிலையான, உத்தமர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
புதுவை மாநில ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலியார்பேட்டை ஏஎப்டி திடலில் பிரசார பொதுக்கூட்டம் 09.04.2011 அன்று நடந்தது. திமுக மாநில அமைப்பாளர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். மத்திய இணையமைச்சர் நாராயணசாமி, முதல்வர் வைத்திலிங்கம் உட்பட கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி பேசியதாவது:
தேர்தல் நேரத்தில் தெரிவிக்க வேண்டிய கருத்துகளை தெரிவிக்க வேண்டிய அவசியம் இருப்பதால் தெரிவிக்கிறேன். இந்த தேர்தலில் தமிழ்நாட்டையும், புதுச்சேரி மாநிலத்தையும் தேர்தல் ஆணையம் என்கிற ஒன்று கண்காணித்து வருகிறது. இந்த கண்காணிப்பு தேவையற்றது என்றோ எதிர்த்தோ எந்த ஒரு வார்த்தையும் கூற விரும்பவில்லை. விழுப்புரம் கூட்டத்தை முடித்து அங்கு தங்கி இருந்த பின்னரே இங்கு வந்திருக்கிறேன்.
விழுப்புரத்தில் அரசினர் விருந்தினர் மாளிகையிலோ, அரசுக்கு சொந்தமான மண்டபத்திலோ நான் தங்க தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை. நான் முதல்வர். நான் தான் இந்த மாநிலத்தை ஆளுகிற நிலையில் அரசு மாளிகையில் தங்க அனுமதியில்லை. திமுகவை, திராவிட இயக்கத்தை எத்தனை ஆண்டு காலம், புதுவையில் கூட அடிப்பட்டு உதைப்பட்டு கட்சி நடத்தியவன். அப்படிப்பட்ட நான் எங்கே தங்கினேன் என்று நீங்கள் கேட்க கூடும். இப்படியெல்லாம் நாட்டில் நடக்கும் என்று சில மாறுதல்கள் ஏற்படும் என்று திமுக சார்பில் தங்க கூடிய அளவில் கட்டப்பட்டது. கலைஞர் மாளிகை என்று உருவாக்கப்பட்ட இடத்தில் ஒரு அறையில் தங்கி வந்திருக்கிறேன்.
மாலை சிற்றுண்டி சாப்பிடக்கூட இடமில்லை. வழியில் வேனை நிறுத்தி சாலையில் போனவர்கள் வேனை சுற்றி நின்றிருந்த நிலையில் சாப்பிடும் நிலை இருந்தது. தேர்தல் ஆணையத்தை குறை கூற இதை சொல்லவில்லை. அதிகாரம் உள்ள உச்ச தேர்தல் அதிகாரிகள் கடந்த காலங்களில் முதல்வராக இருந்தவர்களை என்ன பாடுபடுத்தினார்கள் என்பது தெரியும்.
தேர்தல் ஆணையராக சர்வ வல்லமையோடு, அறிவார்ந்த நிலைகளோடு இருந்த சேஷனை கடந்த காலங்களில், மத்திய அமைச்சர்களும், மக்களும் சேஷனை பாராட்டி இருக்கிறார்கள். தமிழகத்தில் நடந்த தேர்தலின் போது அம்மையார் ஆட்சியில் தமிழகத்தில் கடுமையான, நியாயமான தேர்தலை நடத்த முற்பட்ட போது அந்த அரசால் என்னென்ன பாடுபட்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.
மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கும் தெரியும். அவரை ஓட ஓட விரட்டினார்கள். போலீசார் முன்னிலையிலேயே துரத்தினார் கள். ஓட முடியாமல் விமான நிலையத்தில் இருந்த ஒரு காரில் ஏரி ஓட்டலுக்கு சென்று ஒளிந்து கொண்டார். அந்த பெரிய ஓட்டலுக்கும் கும்பல் சென்று அடித்து நொறுக்கினார்கள். அங்கிருந்த கார்களை எல்லாம் அடித்து நொறுக்கினார்கள். பிறகு போனால் போகிறது என்று போலீசார் அவரை காப்பாற்றினார்கள். இது மறந்து விட்ட நடந்த செய்தி. நாடறியும்.
தேர்தல் ஆணையர்களை அடிக்க வேண்டும் என்று சொல்லி கொடுக்க இதை கூறவில்லை. தவறு இழைத்தாலும், அவர்கள் எப்படி நடந்தாலும் எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை தெரிவிக்கும் அரசாக தமிழக, புதுவை அரசு இருக்கிறது. இதன் தலைமை டெல்லியில் இருக்கிறது. அரசு இடத்தில் முதல்வர் தங்குவதற்கு கூட கண்டிஷன். தங்கலாம். ஆனால் பார்க்க யாரும் வரக்கூடாது. இது வேடிக்கையாக இருக்கிறது.
உலக கோப்பை கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா மகத்தான வெற்றியை பெற்று இருக்கிறது. தொடர்ந்து இந்த பந்தயத்தை பார்க்கும் கிரிக்கெட் மீது ஆர்வமும், பற்றும் உண்டு. நம் நாட்டு வீரர்கள் ஜெயிக்க வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் உண்டு. இறுதி போட்டியில் இந்தியா இலங்கை ஆடியது. இதில் இந்தியா ஜெயிக்க வேண்டும். இலங்கை தோற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தேன். எனது எண்ணப்படி முடிவு வந்தது. இந்தியா வென்றது.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு, குழுவிற்கு இந்திய அரசு சார்பில் வாழ்த்தும், பரிசும் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலமும் மகிழ்ச்சியை தெரிவிக்க இயன்ற தொகை, பரிசை அறிவித்தது. நான் சும்மா இருக்க முடியுமா? அவர்களுக்கு தமிழக மாநிலம் சார்பில் தமிழக வீரர் அஸ்வினுக்கு ரூ.ஒரு கோடியும், குழுவிற்கு ரூ.3 கோடி என ரூ.4 கோடி போட்டியில் வெற்றவர்களுக்கு பரிசுசாக அறிவித்தேன். அறிவித்ததை வழங்க வேண்டும் என்பதற்காக குழுவிற்கும், பிரபல ஆட்டக்காரர் டோனிக்கும் தந்தி கொடுத்து தொடர்பு கொண்டு தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் விதிப்படி தலைமை செயலர் வழியாக தேர்தல் ஆணையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது.
பரிசு வழங்க தேர்தல் ஆணையம் ஒத்துக்கொண்டது, கண்டிஷனுடன். பரிசுகளை வழங்கலாம் ஆனால் முதல்வர் வழங்கும் காட்சியை படமாக எடுக்க கூடாது. காட்சியாக எடுக்கக்கூடாது என்று கண்டிஷன் போட்டார்கள். இதனால் ஒத்தி வைத்து விட்டேன். கொடுப்பதை ஒத்திவைக்கவில்லை. வரும் 13ம் தேதிக்கு பிறகு வழங்க ஒத்திவைத்து இருக்கிறேன்.
கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசை அளிக்க ஒரு முதல்வருக்கு, 6 கோடி தமிழக மக்கள் அதுவும் பெரும்பான்மை மக்களால் தேர்வு செய்யப்பட்டு தமிழக ஆட்சியை நடத்தி கொண்டிருப்பவர்களுக்கு இந்த நிலை. புதுவை முதல்வருக்கும் இந்த நிலை தான்.
முதல்வர் பதவியில் இருந்தாலும், தேர்தல் ஆணையத்தின் கீழ் வேலை பார்ப்பவர்கள் நாங்கள். நான் விதிமுறைகளை மீற விரும்புபவன் இல்லை. குற்றச்சாட்டு கூறி தரத்தை தாழ்த்தி கொள்ளவும் இல்லை.
அடுத்த தேர்தலிலாவது தேர்தல் ஆணையத்தை நியமிக்கும் போது அவர்களது அதிகாரம் என்ன? எந்தெந்த அதிகாரம் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு சிந்தித்து செயல்பட வேண்டும். ஆணைய தலைவர், உறுப்பினர்கள் நியாயம் தவறாதவர்கள், நடுநிலையானவர்கள் உத்தமர் களை அங்கு நியமிக்க வேண்டும். பிறகு இதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை.
ஆட்சி பொறுப்பில் இருக்கும் முதல்வர், இந்திய அணி வெற்றியை கொண்டாட உரிமை கிடையாது என்று கூறுவது வியப்பாக இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் உச்சக்கட்ட அதிகாரம் என்படியெல்லாம் இருக்கிறது என்பதற்காக சொல்கிறேன்.
இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி இன்று அடிப்பட்டு விட்டது. ஊழலை, லஞ்சத்தை கண்டுபிடித்து குற்றம் செய்தவர்கள் மீது உரிய தண்டனை அளிக்க அதிகாரம் படைத்த குழு தான் போலக்பால். இதனை ஏற்படுத்த வேண்டும் என்று தான் ஆசாரே சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். அவரது கோரிக்கையை சோனியா நிறைவேற்றி இருக்கிறார்.
லோக்பால் சட்ட மசோதா வை பாராளுமன்றத்தில் உடன் நிறைவேற்ற உறுதி கொடுத்து இருக்கிறார். இதனால் உண்ணாவிரதத்தை அவர் வாபஸ் பெற்றார். அவரது உயிரை காப்பாற்றிய சோனியாவிற்கும், மத்திய அரசுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். புதுவையில் எதிர்கால நல்வாழ்விற்கு கூட்டணி கட்சி வேட்பாளர் களை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற மத்திய அரசை வலியுறுத்துவோம் :
புதுவை மாநில ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏஎப்டி திடலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
புதுவை மாநில அரசுக்கு இன்னும் சில உரிமைகள், அதிகாரங்கள் பெற்று மக்களுக்கு நேரடியாக தொண்டு புரிய வேண்டும் என்று திமுக சொல்லி வருகிறது. மாநிலத்தில் சுயாட்சி. மத்தியில் கூட்டாட்சி என்பதை திமுக முழக்கமாக கொண்டுள்ளது. தமிழகத்துக்கு தாய்மொழி தமிழ். புதுவைக்கும் அதே மொழி தான்.
தொடர்ந்து போராடியும்கூட செம்மொழி அந்தஸ்து கொடுக்க தயாராக இல்லை. தற்போது செம்மொழி அந்தஸ்தை வழங்கிய சோனியாவை மறக்க முடியாது. இதற்காக சோனியா சென்னை வந்தபோதெல்லாம், நான் டெல்லி சென்ற போதெல்லாம் சந்தித்து செம்மொழி பற்றி பேசுவேன்.
செம்மொழி தந்த சோனியாவுக்கு நன்றி கடிதம் அனுப்பினேன். அவர் அளித்த கடிதத்தில் தமிழுக்கு செம்மொழி பெற்று தந்தவர் யார்? இதற்காக வாதாடியவர் யார்? தொடர்ந்து வலியுறுத்தியவர் யார்?
யாராலும் மறுக்க முடியாத உன் பெயர் தான் என்று சோனியா எழுதிய கடிதத்தை பத்திரமாக வைத்து இருக்கிறேன். மேலும், தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறேன்.
புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டும். இதனை பெற தொடர்ந்து வலியுறுத்துவோம். மத்திய அரசுக்கு நாம் கட்டுப்பட்டவர்கள். அடிமைப்பட்டவர்கள் அல்ல. உறவுக்கு கை கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம். இந்திரா சென்னை வந்தபோதே இதை கூறி இருக்கிறேன். இன்றும் அப்படிதான் இருக்கிறேன்.
தமிழக மீனவர்கள், இலங்கை படையினரால் இன்னமும் கொல்லப்படுகின்றனர். கரை ஒதுங்கிய மீன்களைபோல் பிணங்கள் மிதக்கின்றன. இந்த கொடுமைகளிலிருந்து எல்லாம் தமிழர்கள் விடுபட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.
இதற்கு நமது ஆதரவை வலுப்படுத்த வேண்டும். மூப்பனார் கூறியது போல் மாநிலங்கள் வளமாகவும், மத்திய அரசு பலமாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு மாறுபட்ட கருத்து இல்லை. இன்னும் மாநிலங்களுக்கு அதிகாரங்களை பெற வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.

No comments:

Post a Comment