கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, July 24, 2011

திமுகவை யாராலும் அழிக்க முடியாது - கலைஞர்




கோயம்புத்தூரில் அறிஞர் அண்ணா வளாகத்தில் திமுக செயற்குழு கூட்டம் 23.07.2011 அன்று மாலை நடந்தது. இந்தக் கூட்டத்தில், திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது:
ஒரு மாநிலத்தில் பெரிய பொதுத்தேர்தல் நடைபெற்று, அந்தத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடிருந்து, நேர்மாறான விளைவுகளின் காரணமாக இன்று நாம், ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும் எதிர்க் கட்சியாகவாவது இருக்கக் கூடிய நிலைமையையும் பெறாமல், எதிர்க்கட்சிக் குழுக்களிலே ஒன்றாக இடம்பெற்றிருக்கின்ற நிலையில், நாம் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டிருக்கின்றோம்.
நமக்கு நாமே தேடிக் கொண்ட முடிவு இது. நான் உணர்ந்த காரணத்தால்தான் இதைச் சொல்லுகின்றேன். யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. ஏனென்றால், இன்றைக்குக் கட்சி புண்பட்டிருக்கிறது. கட்சி புண்பட்டிருக்கிறதென்றால், நான் புண்பட்டிருக்கிறேன். பொதுச்செயலாளர் பேராசிரியர் புண்பட்டிருக்கிறார். தளபதிகள் புண்பட்டிருக்கிறார்கள். முன்னெடுத்துச் செல்லக்கூடிய முன்னணி வீரர்கள் எல்லாம் புண்பட்டிருக்கிறார்கள் என்பது அதற்குப் பொருள்.
ஆகவே, இந்தப் புண்ணை ஆற்றிக் கொள்ள, மீண்டும் திமுகவின் ஆற்றல் பெருகி, அகிலம் பரவ இருவண்ணக் கொடியை ஏற்றுகின்ற அந்தக் காலம் நிச்சயமாக வரும், வரவேண்டும் என்பதற்காகத்தான் மீண்டும் இன்றைக்கு பூஜ்யத்திலே இருந்து ஆரம்பிக்கிறோம். இருபது பேரோ, இருபத்திரண்டு பேரோ சட்டசபையிலே இருப்பதாலோ, நாடாளுமன்றத்தில் சில பேர் இடம் பெற்றிருப்பதாலோ நாம் பெரிய அளவிலே மகத்தான மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று எண்ணிக் கொள்ள முடியாது.
அண்ணா அடிக்கடி சொல்வதைப் போல, ஒரு கட்சியினுடைய அளவை, அவர்கள் தேர்தலில் பெறுகின்ற இடத்தை பொறுத்து அரசியல்வாதிகள் கணக்கெடுக்கிறார்கள். ஆனால், நம்மைப் பொறுத்தளவில் அரசியலிலே இடம்பெறுகின்ற ஒரே நோக்கத்திற்காக இந்த கட்சியை ஆரம்பிக்கவில்லை. பெரியாரிடமிருந்து மாறுபட்டு, அண்ணா இந்த இயக்கத்தை திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரால் தொடங்கியபோது, கொட்டுகின்ற மழையிலே, எத்தகைய முரசு கொட்டி நம்மையெல்லாம் அழைத்தாரோ, அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி நாம் பதவிகளுக்காக பவுசுகளுக்காக ஆடம்பரங்களுக்காக அரசியலுக்காக பதவிகளைப் பெற்று அந்த அரசியலை அதற்குப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல; நம்முடைய இனத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் திமுக.
டாக்டர் நாயரும் தியாகராயரும், அவர்களைத் தொடர்ந்து தந்தை பெரியாரும், அவரைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணாவும், அவர்களைத் தொடர்ந்து நாமும், இந்த இயக்கத்தை நடத்துவது, நடத்திக் கொண்டிருப்பது நடத்தியதெல்லாமே, திரா விட சமுதாயத்திற்கு, திராவிட இனத்திற்கு ஏற்றமும் வெற்றியும் கிடைத்திட வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், இன்றைக்கு ஒரு கட்சியினுடைய வெற்றி தோல்விகளால் ஒரு கொள்கை நிர்ணயிக்கப்படுகின்றது என்று யாரும் சொல்ல முடியாது. இப்போது வெற்றி பெற்றிருக்கின்ற அ.தி.மு.கவின் வெற்றியில் கொள்கை நிர்ணயிக் கப்பட்டுள்ளதா என்று கேட்டால் ஒரு முட்டாள்கூட, ஆமாம் அந்தக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்று சொல்ல மாட்டான். யாருக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, நமக்குக் கிடைத்திருக்கின்ற தோல்வி, நம்முடைய கொள்கைக்கு, நம்முடைய இலட்சியத்திற்கு, நம்முடைய எதிர்காலத்திற்கு, நம்முடைய சந்த தியினருக்கு, நம்முடைய வருங்கால தலைமுறைக்கு கிடைத்திருக்கக்கூடிய தோல்வி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
அதனால்தான், இன்றைக்கு நீட்டி முழங்கி திமுகவை அழித்து விட்டோம் என்றறெல்லாம் குல்லுக பட்டர்களும், சோ போன்றவர்களும், வேறுசில பேர்வழிகளும் நம்மைப் பார்த்து கேலி செய்து கொண்டிருக்கிறார்கள். ஏடுகளை ஒவ்வொரு நாளும் புரட்டினால், படிக்க முடியாத அளவிற்கு அதை படித்து முடிக்கலாமா, வேண்டாமா என்கின்ற அளவிற்கு அய்யுற்று, அதை கீழே எறிந்துவிட்டு வருகின்ற அளவிற்கு திமுக தோழன், தொண்டன், தன்னுடைய ரத்தத்தைக் கொட்டி வளர்த்தானே இந்த இயக்கத்தை வளர்த்த அந்தத் தொண்டன் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கின்றான், இவ்வளவு பெரிய தோல்வி நமக்கு வந்துவிட்டதே என்று.
ஆனால், நான் சொல்லுகின்றேன். இதை தோல்வி என்று கருதக்கூடாது. நாம் சந்திக்காத தோல்விகள் இல்லை. திமுகவை பொறுத்தவரையில், ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது, ஒரே ஒரு இடத்திலேதான் நாம் வெற்றி பெற முடிந்தது. சென்னை துறைமுகம் தொகுதியிலே நான் ஒருவன்தான் வெற்றிபெற்று, அதையும் ராஜினாமா செய்துவிட்டு, அன்றைக்கு திமுக தனித்து எந்தவிதமான உதவியும் துணையுமின்றி நிற்க நேர்ந்த காலத்திலேயேகூட, அந்த ஒரு தொகுதியிலே இருந்து தொடர்ந்து பல தொகுதிகளைப் பெற்று, ஆட்சியை அமைத்தோம் என்றால் மீண்டும் அந்தக் காலம் வராமலேயே போகாது. அப்படி வரவேண்டிய காலம், (கைதட்டல்) கைதட்டுகின்றவர்களுக்குச் சொல்லுகிறேன். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற காரணத்தால், நம்முடைய கொள்கைகள், எண்ணங்கள், கருத்துக்கள், லட்சியங்கள் நம்முடைய குறிக்கோள்கள் இவைகள் எல்லாம் நிறைவேறுவதற்கு நாம் வெற்றி பெற்றாக வேண்டும். அந்த வெற்றி ஏதோ பத்து இடம், பதினைந்து இடம் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இருக்கிறோம் என்ற அந்த வெற்றியல்ல. அப்படிப்பட்ட வெற்றிக்காக பாடுபடவில்லை.
நாம், எம்.பிக்கள், எம்.எல்.ஏ.,க்கள் வரவேண்டுமென்று எண்ணுகிற அதேநேரத்தில், அந்த எண்ணிக்கையின் காரணமாக நம்முடைய கொள்கை வளர வேண்டும், நம்முடைய கொள்கை வலுத்திட வேண்டும், நம்முடைய லட்சியம் ஈடேற வேண்டும் என்பதை சேர்த்துத்தான் தேர்தலில் போட்டியிடுகின்றோம். தேர்தலில் திமுக நிற்கும் என்று திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில், அண்ணா அறிவித்த நேரத்தில், நம்முடைய லட்சியங்களையெல்லாம் விட்டுவிட்டு, தேர்தலில் நிற்கப் போகிறோம் என்று சொல்லவில்லை. �எங்களுடைய லட்சியங்களை காப்பாற்ற, எங்களுடைய கொள்கைகளுக்கு வெற்றித் தேடித் தரக்கூடிய அளவிலேதான், நாம் தேர்தலில் ஈடுபடப்போகிறோம்� என்றுதான் அண்ணா அறிவித்தார். அதைத்தான் இன்றைக்கும் நம்முடைய உள்ளத்திலே பதிய வைத்துக் கொண்டு இந்தப் பணியிலே ஈடுபட்டிருக்கிறோம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
இன்று நான், இங்கே எதிரே அமர்ந்திருக்கின்ற நண்பர்களை எல்லாம் பார்க்கின்றேன். அவர்களைப் பார்த்து, எப்போது வந்தீர்கள் என்று கேட்பதற்குக்கூட என்னுடைய மனம் அவ்வளவு துணிவைப் பெறவில்லை. அந்தளவிற்கு தேடப்படுபவர்களாக, வேட்டையாடப்படுபவர்களாக விலங்கு மாட்டுவதற்கு தயாராக இருக்கிறோம். வா என்று அழைக்கப் படுவர்களாக, இங்கே அமர்ந்திருக்கின்ற காட்சியை நான் காணுகின்றேன். அதற்காக நாம், நிலைகுலைந்து போய்விடவில்லை. இந்த நிலையிலும்கூட, நம்முடைய செயற்குழுக் கூட்டத்திற்கு, இந்த மண்டபம் நிரம்பி வழிகின்ற அளவிற்கு, இங்கே வந்திருக்கின்றீர்கள் என்றால், திமுகவை எவனும், எந்த நேரத்திலும் அழித்துவிட முடியாது.
செயற்குழுவில் என்னென்ன திட்டங்களைத் தீட்ட வேண்டும். மேலும், கட்சி வளர்ச்சிக்கு என்னென்ன காரியங்களை ஆற்ற வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் நாளைய தினம் பொதுக்குழுவிலே விரிவாக பேச இருக்கின்றோம். அதற்கான தீர்மானங்கள் என்னென்ன, இருபத்தைந்து, முப்பது தீர்மானங்களுக்கு மேல், நாளையதினம் நிறைவேற்றப்படவிருக்கிறது. அந்தத் தீர்மானங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான அடித்தளத்தை இன்றைக்கு நீங்கள் அமைத்துத் த ரவேண்டிய பொறுப்பில் இருக்கிறீர்கள். அதற்குத்தான் இந்த செயற்குழு. இந்தச் செயற்குழுவிலே இன்றைக்குப் போடப்படுகின்ற அடித்தளம், நாளைய பொதுக்குழுவின் தீர்மானங்களாக வெளிவரும். இனி பொறுப்பதில்லை என்ற பாரதியினுடைய வாசகத்தை மனதிலே பதிய வைத்துக் கொண்டு, பொறுப்பதில்லை என்று சொல்வதிலிருந்து, அந்த நிலையை அடைய, வென்றிட, வாகை சூடிட, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் நிர்ணயிக்கின்ற குழுவாகத்தான் நாளைய தினம் நடைபெறவிருக்கின்ற பொதுக்குழு அமையவிருக்கின்றது. அதற்கேற்ப இந்தச் செயற்குழுவிலே உங்களுடைய கருத்துகளை எடுத்துச் சொல்ல வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

அதன்பின் பல்வேறு தலைவர்களும் பேசினர். செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து 24.07.2011 அன்று பொதுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுக்குழு உறுப்பினர்கள் கோவைக்கு வந்துள்ளனர்.

No comments:

Post a Comment