![](http://3.bp.blogspot.com/-7wOD_Aw-zxw/Th6IVwQ3BkI/AAAAAAAAEaM/vjKj7lOQwZs/s400/CD.jpg)
பணி நீக்கத்தை எதிர்த்து முதல்வரிடம் மனு கொடுக்க வந்த அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் 200 பேர் சென்னையில் 13.07.2011 அன்று கைது செய்யப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சென்னை, மதுரை, கும்பகோணம், சேலம், திருநெல்வேலி, விழுப்புரம் உள்பட 8 கோட்டங்கள் உள்ளன. இவற்றின் சார்பில் 22 ஆயிரத்துக்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 1.25 லட்சம் போக்குவரத்து ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
கடந்த ஆட்சியின்போது விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு கோட்டங்களில் சேமநல (தற்காலிக) டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர். அந்த வகையில் பணியில் சேர்ந்த விழுப்புரம் மற்றும் வேலூர் கோட்டங்களை சேர்ந்த 600 பேர், கடந்த 2ம் தேதி திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் விழுப்புரம் மண்டலத்துக்கு உட்பட்ட கடலூர், பண்ருட்டி, விருதாச்சலம், வடலூர், சிதம்பரம், திட்டக்குடி, கள்ளக்குறிச்சி, செஞ்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், திருக்கோவிலூர், திண்டிவனம், கோயம்பேடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட டெப்போக்களை சேர்ந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் பாதிக்கப்பட்டனர்.
தங்களை திடீரென பணி நீக்கம் செய்ததால் குடும்பம் பாதிக்கப் பட்டிருப்பதாகவும், தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும் கோரி போக்குவரத்து கழக உயரதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர். ஆனால், அதற்கு எந்தப் பலனும் இல்லை. இதனால் விரக்தி அடைந்த டிரைவர்களும் கண்டக்டர்களும் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கருணை மனு கொடுக்க முடிவு செய்தனர். இதற்காக விழுப்புரத்தில் இருந்து 200க்கும் அதிகமானோர் 13.07.2011 அன்று காலை சென்னை வந்தனர்.
அவர்கள் எல்லாரும் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை முன்பு திரண்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். முதல்வரை சந்திக்க புறப்பட்ட டிரைவர், கண்டக்டர்களை திடீரென கைது செய்தனர். முதல்வரை சந்தித்து மனு கொடுக்க வந்தவர்களை போலீசார் திடீரென சுற்றிவளைத்து கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவர்களை ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் தங்க வைத்தனர்.
பாதிக்கப்பட்ட டிரைவர் விஜயராமன் என்பவர் கூறியதாவது:
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் எங்களை தேர்வு செய்து முறையான பயிற்சியும் அளித்தனர். பணிக்கான உத்தரவும் வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2ம் தேதி பணிக்கு சென்றபோது, �இன்றுதான் உங்களுக்கு கடைசி நாள் வேலை. நாளை முதல் பணிக்கு வர வேண்டாம்� என்று டெப்போ அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனர். பணியில் இருந்து நிறுத்துவதற்கான சரியான காரணம் சொல்லவில்லை.
விழுப்புரம் மண்டல அதிகாரியை சந்திக்க சென்றோம். அவர் அங்கு இல்லை. துணை அதிகாரியும் சரியான பதில் கூறவில்லை. தேவையைவிட அதிகமான பணியாளர்கள் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறுகின்றனர். திடீரென பணி நிறுத்தம் செய்யப்பட்டதால் எங்கள் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறோம். முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து கருணை மனு கொடுக்கத்தான் வந்தோம். ஆனால், எங்களை போலீசார் கைது செய்து அடைத்து வைத்துள்ளனர்.
இவ்வாறு விஜயராமன் கூறினார்.
பின்னர், பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் 5 பேர் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கருணை மனுவை மதியம் கொடுத்தனர். பின்னர், அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment