கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, February 4, 2011

பேசி தீர்க்க வேண்டிய பிரச்னைகளை பகைமையாக்கிக் கொள்ள வேண்டாம் - திமுக பொதுக்குழுவில் கருணாநிதி பேச்சு



சிறிய பிரச்னைகளை, பேசி தீர்த்து கொள்ள வேண்டிய பிரச்னைகளை பெரிதுபடுத்தி பகைமையாக்கி கொள்ள வேண்டாம் என்று முதல்வர் கருணாநிதி பொதுக் குழு கூட்டத்தில் கூறினார்.
திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:
திமுகவில் பொதுக்குழு என்பது இந்த இயக்கத்தினுடைய இதயம் போன்றது என்பதை பல நேரங்களில் நாம் மெய்ப்பித்து இருக்கிறோம். எந்த ஒரு முக்கிய முடிவை எடுப்பதாக இருந்தாலும் பொதுக்குழுவைக் கூட்டித்தான் எடுத்து வருகிறோம்.
இன்றைக்கு கூட்டப்பட்டுள்ள இந்த பொதுக்குழு மிக மிக முக்கியமான ஒரு பொதுக்குழு. பொதுக்குழு கூட்டப்படுகின்ற நேரத்தில் வழக்கம் போல் வந்துள்ள ஒரு சோதனை இன்றைய தினம் நம்மையெல்லாம் ஓரளவு கலங்க வைத்திருக்கிறது, அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
நம்முடைய மகிழ்ச்சியை, ஆர்வத்தை குறைக்கின்ற நிலைக்கு உள்ளாக்கி இருக்கின்றது என்பதை நான் சொல்கிறேன். நீங்கள் எல்லாம் சொல்லாமல் இருக்கின்றீர்கள் அவ்வளவுதான். ஆனால், உண்மையினுடைய ஒளி விரைவில் தெரியத்தான் போகிறது உறுதியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
திமுகவின் வரலாற்றில் நேற்றும், இன்றும் நாம் சந்தித்து இருக்கின்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்திருக்கின்றன. அப்படி நிகழ்ந்தபோதெல்லாம் Òஎதையும் தாங்கும் இதயம் உண்டுÓ என்ற அண்ணாவின் அந்த வைர வரிகள் நமக்கு ஆசானாக நின்று ஊக்கப்படுத்தியிருக்கின்றன. வழிகாட்டியிருக்கின்றன.
அத்தகைய வழிகளை காட்டக்கூடிய தலைவராக நம்முடைய வழிகாட்டியாக இருந்த அண்ணா இன்று இல்லை என்றாலும்கூட நாம் அத்தனை பேருமே ஓர் உரு. அந்த ஓர் உரு அண்ணாவுடைய உரு என்ற முறையிலே இந்த இயக்கத்தை வளர்க்க வேண்டிய நிலையிலே இருக்கின்றோம்.
தேர்தல் வர இருக்கிறது. முதலில் ஒராண்டு, அரையாண்டு, என்றெல்லாம் கருதப்பட்டு இப்போது நாட்களை எண்ணி இத்தனை நாட்களில் நாம் தேர்தல் களத்தில் இறங்க இருக்கிறோம். இந்த நேரத்திலேதான் நாம் கூடியிருக்கிறோம்.
டெல்லி மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற நான் தேர்தலும் விரைவிலே வருகின்ற காரணத்தால் அதைப் பற்றியும் விவாதித்துவிட்டு வரலாம் என்று அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடத்திலே அதை பற்றியும் பேசிவிட்டு வந்திருக்கிறேன்.
விமான நிலையத்தில் நிருபர்கள் கேட்டார்கள். அறிவாலயத்தில் கேட்டார்கள். டெல்லி பயணம் எப்படி இருந்தது கேட்டார்கள். வானம் நிர்மலமாக இருந்தது. எந்த தடையும் எந்த இடையூறும் இல்லை, விமானம் ஒழுங் காக பறந்து வந்தது என்று சொன்னேன். வெற்றியா இல்லையா என்று சொல்லுங்கள் என நிருபர்கள் கேட்டார்கள் வெற்றி தான் என்று சொன்னேன்.
காங்கிரஸ் கட்சியினர் நம்மோடு அணி சேர்வதற்கு தயாராக இருக்கிறார்கள். அந்த அணியிலே சேர்வதற்கு எந்தெந்த கட்சிகள் இருப்பது என்பது பற்றியும் எத்தனை இடங்கள் ஒவ்வொரு கட்சிக்கு என்பது பற்றியும் பேச நாங்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஒரு மூன்று பேரை இரண்டு மூன்று நாட்களிலே அறிவிக்கிறோம். அதுபோல நீங்களும் தி.மு.க. சார்பாக ஒரு குழுவை நியமித்து அறிவியுங்கள். இரண்டு குழுக்களும் சந்தித்து பேசி முடிவு எடுத்து தேர்தல் பணியிலே இறங்கலாம் என்று சொன்னார்கள்.
அதற்கு பிறகுதான் சென்னை வந்தோம். உங்களை சந்தித்தோம். நிருபர்களிடத்திலே பயணத்தை பற்றிய குறிப்புகளை பேட்டியின் போது வெளியிட்டிருக்கிறோம். இது வெற்றியா, தோல்வியா என்ற பிரச்னைக்கு இடமில்லை. நாம் எடுத்த முயற்சியில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். இது வெற்றியா தோல்வியா என்பது தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டபிறகுதான் கூற முடியும்.
ஆனால், வருகிற தேர்தலிலே நீங்கள் ஆற்றுகின்ற பணியை பொறுத்துதான் இந்தப் பயணம் வெற்றியா தோல்வியா என்பதை என்னால் சொல்ல முடியும் என்பதை மாத்திரம் நான் உங்களை நம்பி சொல்கிறேன்.
ஆகவே சிறிய விஷயங்களை, ஒருவருக்கொருவர் பேசி தீர்த்து கொள்ள கூடிய விஷயங்களை பெரிதுபடுத்தி பகைமையாக்கிக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இதைத்தான் இங்கே பேசிய சில நண்பர்கள் குறிப்பிட்டார்கள். நமக்குள்ளே இருக்கின்ற காழ்ப்புணர்ச்சிகள், நமக்குள்ளே உருவாகின்ற பகை உணர்ச்சிகள், விரோத எண்ண மனப்பான்மை, ஒற்றுமையின்மை. இவைகளெல்லாம் ஒருவேளை நம்முடைய அபரிமிதமான வெற்றியை தடுக்கலாமே தவிர நம்முடைய ஆற்றலோ நம்முடைய சாதனைகளோ நாம் தோற்று போவதற்கு நிச்சயமாக காரணமாக இருக்காது என்ற நம்பிக்கையை நான் பெற்றிருக்கின்றேன்.
ஆகவே, அந்த நம்பிக்கையோடு நீங்கள் செயலாற்றுங்கள், தேர்தலை எதிர்கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். எதிர்கொள்கிற நேரத்தில் எத்தனை சங்கடங்கள் ஏற்படும் என்பதையெல்லாம் அறுதியிட்டு கூற முடியாது. எந்த சூழ்நிலையானாலும் எதிர்கொள்ளக்கூடிய சாதுரியமும் ஆற்றலும் உங்களுக்கு உண்டு என்பதை நான் அறிவேன். ஆகவே தவிர்க்க வேண்டியது பகை உணர்வு ஒன்றுதான்.
நாம் வெல்வதை பற்றி, உங்களது உணர்வை பற்றி, கொள்கை பற்றை பற்றி உங்களுடைய லட்சிய வெறியை பற்றி அணு அளவு சந்தேகமும் நான் என்றைக்கும் கொள்பவன் அல்ல. அப்படி அணு அளவு சந்தேகம் வந்தால் நான் அண்ணாவுக்கு தம்பியாக முடியாது. ஆகவே நான் அண்ணாவின் தம்பி என்ற முறையில் பெரியாருடைய மாணவன் என்ற முறையில், பேராசிரியரின் தோழன் என்ற முறையில் உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.
இந்த இயக்கத்தை காக்க வேண்டும். வெறும் தேர்தலுக்காக அல்ல. திராவிட இன உணர்வை காப்பாற்ற திராவிட இயக்கத்தை காப்பாற்ற வேண்டும். திராவிடர்களின் நலன்களை காப்பாற்ற திராவிடத்தை மாற்றாருக்கு அடிமையாக்காமல் திராவிட உணர்வுகளை சாகும்படி செய்யாமல், திராவிட உணர்வுகளை மேலும் மேலும் சாகுபடி செய்து இந்த இயக்கத்தை காப்போம் என்கின்ற அந்த உறுதிமொழியை ஏற்று பணியாற்றுங்கள்.
அப்படி ஆற்றுகின்ற பணிதான் இந்த நாட்டிற்காக, இனத்துக்காக, நம்முடைய தமிழ் சமுதாயத்திற்காக செய்கின்ற தொண்டு, பணி என்பதை மறந்து விடக்கூடாது என்று குறிப்பிட்டு எல்லோரும் வெற்றி பெறுவோம். ஆறாவது முறை, ஏழாவது முறை என்றெல்லாம் என்னிடத்திலே சொன்னீர்கள். ஆறாவது முறை கூட அல்ல இந்த முறை நாம் வெற்றி பெறுவதை விட நம்மை வீழ்த்துவதற்காக கங்கணம் கட்டிக்கொண்டு வாளை உயர்த்திக் கொண்டு முரசு முழக்கிக் கொண்டிருக்கின்ற எதிரிகள் பகைவர்கள் அவர்கள் வீழ்ந்தார்கள்.
இந்த இனம் காக்கப்பட்டது என்ற அந்த உறுதியை உலகத்திற்கு அறிவிப்பீர்கள் என்றால் அது மறைந்த அண்ணாவை மகிழ்ச்சி அடைய செய்யக் கூடியது. என்னை வலிவுடையவன் ஆக்க கூடியது. அந்த காரியத்தை செய்யுங்கள். அந்த சபதத்தை நிறைவேற்றுங்கள். நம்மை வீழ்த்த யாரும் கிடையாது என்ற அந்த எஃகு உள்ளத்தோடு நடைபோடுங்கள். வெற்றி நமதே.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.

No comments:

Post a Comment