கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, February 24, 2011

இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் கட்சியாக தி.மு.க மாறியிருக்கிறது : கலைஞர்



திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ மகள் பி.திவ்யா - இரா.வேதநாயகம் ஆகியோரது திருமணத்தை 23.02.2011 அன்று முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்து பேசியதாவது:

முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கு.பிச்சாண்டியின் புதல்வி திருமணத்தை திருவண்ணாமலையில் நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கிய முதல்வர் முதல்வர் கருணாநிதி, கழகத்தின் லட்சோப லட்சம் சிப்பாய்களில் ஒருவராக விளங்குபவர் தம்பி கு.பிச்சாண்டி என குறிப்பிட்டார்.

முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

இப்பொழுது தம்பி எ.வ.வேலு அவர்கள் இல்ல திருமணத்தை நிறைவேற்றி வைத்து விட்டு இந்த திருமண விழாவிற்கு வந்தால் எனக்கு அந்தத் திருமணமே தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறதோ என்று எண்ணுகின்ற அளவிற்கு இங்கேயும் அதே பெருங்கூட்ட மாக நீங்கள் அமர்ந்திருக்கின்ற காட்சியை நான் பார்க்கின்றேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஏதோ பதவியிலே இருக்க வேண்டும் என்பதற்காக சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் குறைந்தபட்சம் பஞ்சாயத்து தலைவராகவாவது இருக்க வேண்டும் என்பதற்காக இந்த இயக்கத்திலே யாரும் தங்களை ஆரம்பித்திலே ஈடுபடுத்திக் கொண்டதில்லை. இது ஒரு பாசறை பகுத்தறிவு பாசறை. நம்முடைய லட்சியங்களை, கொள்கைகளை ‘திராவிட ‘ என்கின்ற இன உணர்வை தமிழ் மொழி பற்றினை பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம். இந்த இயக்கத்தை சுயமரியாதை பாதையிலே மிகுந்த வேகத்தோடு நடைபோட செய்தவர் தந்தை பெரியார் அவர்கள். அவருக்கு பிறகு அவர் வழியில் நம்முடைய ஆருயிர் அண்ணன் பேரறிஞர் அண்ணா அவர்களால் இந்த இயக்கம் அரசியல் இயக்கமாக மாற்றப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகமாக உருவாகி இந்திய துணைக்கண்டத்திலே உள்ள அரசியல் கட்சிகளிலே பெயர் சொல்லத்தக்க குறிப்பிட்டு காட்டக்கூடிய இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடிய கட்சிகளிலே ஒன்று என்று கூறத்தக்க கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்திருக்கிறது.

இந்தக் கழகத்தில் ஒரு சட்டப்பேரவை உறுப்பினராக ஒரு அமைச்சராக இருப்பதை விட இந்தக் கழகத்தில் ஒரு போர் வீரனாக ஒரு சிப்பாயாக இருப்பதைத்தான் நான் விரும்பு கிறேன் என்று கூறுகின்ற லட்சோப லட்ச தம்பிகளிலே ஒரு தம்பி தான் என்னுடைய அருமை தம்பி பிச்சாண்டியாவார். எதற்கு இதை சொல்லுகின்றேன் என்றால் அவர் அமைச்சராக இருந்தார். அதற்கு பிறகு, அவருடைய அமைச்சர் பதவியிலே இருந்து விலகிக் கொண்டு மற்றவர்களுக்கு வழிவிட்டார். மற்றவர்களுக்கு வழிவிடுகின்ற அந்தப் பெருந்தன்மை எல்லோருக்கும் வந்துவிடு வதில்லை. அதனால் தான் எல்லோரையும் விட தம்பி பிச்சாண்டியிடத்தில் ஒரு தனிப்பட்ட அன்பு உண்டு. அந்த வகையிலே நான் என்ன விரும்புகின்றனோ அதை தன்னையே தியாகம் செய்து கொண்டு நிறைவேற்றுகின்ற அன்பு தம்பிகளிலே ஒருவர் பிச்சாண்டி என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டு.

அப்படிப்பட்ட பிச்சாண்டியினுடைய இல்லத்தில் இன்றைக்கு வாழ்க்கை துணைவர்களாக செல்வி.திவ்யாவும் அன்புச்செல்வன் வேதநாய கமும் நம் அனைவருடைய முன்னிலையிலே இணைந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. பாராட்டுக் குரியது. அவர்கள் திராவிட இயக்க தம்பதிகள் மாத்திரம் அல்ல. எதையும் தியாகம் செய்யக் கூடிய ஒரு குடும்பத்தினுடைய உறுப்பினர்களாக இன்றைக்கு விளங்குகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய இதயமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்கிட கடமைப்பட்டிருக்கிறேன். எனவே, இந்த இனிய விழாவில் பெருந்திரளாகக் கூடியிருக்கின்ற உங்களிடத்திலே நாங்கள் எல்லோரும் நிரம்பப் பேசுவோம் என்று எதிர்பார்த்திருப்பீர்கள். தம்பி ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு இவர் களெல்லாம் நிரம்பப் பேசுவார்கள் என்று எதிர்பார்த்திருப்பீர்கள். நம்முடைய பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்றத் தலைவர் மணி அவர்களும், நீண்ட நேரம் பேசுவார் என்று எதிர்பார்த்திருப்பீர்கள்.

நாங்கள் எல்லோரும் நீண்ட நேரம் பேசினாலும், பேசாவிட்டாலும் எங்களுடைய ஒரே வேண்டுகோள்; இந்த விழாவிலே நாங்கள் ஆற்றுகின்ற, நாங்கள் விரும்பி சொல்கின்ற உளவாழ்த்து ஜனநாயகத்திற்கும் சர்வாதி காரத்தை எதிர்த்து நிற்கின்ற மக்கள் சக்திக்குமாக நடைபெறுகின்ற இந்தப் போராட்டத்தில் தேர்தல் களத்தில் நாம் நிற்கின்ற நேரத்தில் இந்த திருமண விழா நடைபெறுகிறது.

எனவே, மணமக்கள் தங்கள் வாழ்நாள் எல்லாம் மறக்க முடியாத விழா இந்த விழா. தேர்தல் நேரத்திலே, இருவருக்கும் திருமணம். அந்தத் திருமணத்திற்கு பிறகு, அவர்கள் பெறக்கூடிய குழந்தை செல்வங்களுக்கு ஆணாக இருந்தால் ‘வெற்றிச் செல்வன்’, பெண்ணாக இருந்தால் ‘வெற்றிச் செல்வி’ என்றும் பெயர் சூட்டக்கூடிய அளவிற்கு நடைபெற இருக்கின்ற இந்த தேர்தலிலே நீங்கள் உங்களுடைய ஆதரவை வழங்க வேண்டும் என்று நான் வாழ்த்தி நீண்ட நேரம் உங்களிடத்திலே, இந்த விழாவிலே இருக்க முடியாமல் சென்னைக்கு செல்ல வேண்டி இருக்கின்ற காரணத்தினால் மிகுந்த மகிழ்ச்சியோடு என்னுடைய தம்பி பிச்சாண்டியை மீண்டும் மீண்டும் வாழ்த்தி மணமக்களையும் வாழ்த்துகிறேன் என்றார்.

முன்னதாக, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். விழாவில், முதல்வரின் துணைவியார் ராஜாத்தியம்மாள், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தி.க.தலைவர் கி.வீரமணி, பா.ம.க தலைவர் கோ.க.மணி, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், முரசொலி செல்வம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர்மொய்தீன், எம்.பி, கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.எல்.ஏ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment