கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, March 19, 2011

ஆட்சியின் சாதனைகளை கூறி தேர்தல் பணியை துவங்குங்கள்


திமுக அரசு செய்த சாதனைகளை மக்களிடம் சொல்லி பிரசாரமே செய்யுங்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி 18.03.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் & களத்திலே நிற்கவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன. 119 பெயர்களில் 58 பேர் புது முகங்கள்; 70 பேர் பட்டதாரிகள் என்றும் அதிலே வழக்கறிஞர்கள் 24 பேர்; டாக்டர்கள் 3 பேர்; முதுகலைப் பட்டதாரிகள் 27 பேர்.
இதுவரை பொறுப்பிலே இருந்த ஒரு சிலருக்கு இந்தமுறை வாய்ப்பளிக்கப்படவில்லை. ஏன் அமைச்சர்களாக இருந்தவர்களான எனக்கு மிகவும் நெருங்கிய திமுகவின் முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமியும், என்னுடைய தளகர்த்தர்களில் ஒருவர் என்று சொல்லத்தக்க அளவிற்கு என் வாழ்வோடு நெருங்கிய தொடர்புடைய கோ.சி. மணியும் இந்தமுறை தேர்தலில் போட்டியிடவில்லை.
இந்த இரண்டு அமைச்சர்களுக்கும் வாய்ப்பு அளிக்காதது பற்றி செய்தியாளர்கள் என்னைக் கேள்வி கேட்டபோது, அவர்கள் உடல் நிலை கருதி வாய்ப்பு தரப்படவில்லை என்று நான் அப்போதே கூறி, அதுவும் ஏடுகளிலே வெளிவந்துள்ளது. அதைப்போலவே கோ.சி. மணிக்கு வாய்ப்பு தராவிட்டாலும், அவரால் வளர்க்கப்பட்ட மற்றொரு தம்பிக்குத்தான் அந்தத் தொகுதியிலே வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
ஆனால் ஒருசிலர் வாய்ப்பு கிடைக்காதவர்கள் அல்லது அவர்களுடைய ஆதரவாளர்கள் வருத்தப்படத்தான் செய்கிறார்கள். ஒரு உதாரணம் கூறுகிறேன், கடலூர் தொகுதியில் என்னுடைய அருமை நண்பராக இருந்தவர் கடலூர் இளம்வழுதி. அண்ணா இருந்த காலத்திலிருந்து திமுகவை வளர்த்தவர். அவர் இப்போது இல்லை, மறைந்துவிட்டார். ஆனாலும் அவருடைய குடும்பமே திமுக குடும்பம்.
அவருடைய வீட்டிலே உள்ள பிள்ளை குட்டிகள் எல்லாம் கோபாலபுரம் வீட்டைத்தான் தங்கள் சொந்த வீடாகக் கருதுபவர்கள். அந்த கடலூர் இளம்வழுதியின் மகன்தான் இள.புகழேந்தி. வழக்கறிஞரும் கூட. அவர் அந்தத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்து சிறப்பாகப் பணியாற்றினார்.
ஆனால் கடந்த முறை அந்தத் தொகுதிக்கான வேட்பாளராக அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. திமுகவிலே வேறொருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கருதி, புகழேந்தியை அழைத்து நிலைமையை நான் கூறியபோது அதனையேற்றுக் கொண்டு, மிகப் பொறுமையாக இந்த ஐந்தாண்டு காலமும் அவர் கட்சிப் பணிகளை ஆற்றி வந்தார்.
கடந்த முறை அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட போது, தனக்கு வாய்ப்பு தராமல் விட்டு விட்டார்களே என்று அவர் எந்த தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை. யாரையும் தூண்டிவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தக் கூறவில்லை. திமுக மாணவர் அணியிலே பொறுப்பேற்று ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவ இயக்கங்களைத் தொடங்கிட உழைத்தார்.
எனவே இந்த ஐந்தாண்டுகள் சட்டமன்றத்திலே நல்ல பணி ஆற்றிய நண்பருக்கு வாய்ப்பு அளிக்க இயலாமல், கட்சிப் பணியை ஆற்றி வந்த இள.புகழேந்திக்கு வாய்ப்பு தரப்பட்டது என்றதும், இந்த ஐந்தாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவரின் ஆதரவாளர்கள் சிலபேர் அங்கே எதிர்ப்புகளைத் தெரிவித்ததாக ஏடுகளிலே செய்தி வந்துள்ளது. வாய்ப்பு கிடைக்காதவர்கள் பொறுமையாக இருந்த போதிலும், அவருடைய ஆதரவாளர்கள் என்போர், அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முனைகிறார்கள்.
இத்தகைய போக்குகள் நமது திமுகவுக்கு ஏற்றதல்ல. மாற்று முகாம்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளையெல்லாம் ஏடுகளில் கண்டு வருகிறோம். அதைப் பற்றிக்கூட செய்தியாளர்கள் என்னிடம் கேட்டபோது மற்றவர்களுக்கு ஏற்படுகின்ற சிக்கலைப்பார்த்து மகிழ்ச்சி அடையக் கூடியவன் நான் அல்ல என்றுதான் பதில் அளித்திருக்கிறேன். எனவே, மற்றவர்களைப் பற்றியே நாம் நினைத்துக் கொண்டிராமல் நமது பணியினைத் தொடங்கிட வேண்டும்.
முறைப்படி தோழமைக் கட்சிகளோடெல்லாம் கலந்து பேசி எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளிலே போட்டியிடுவது என்பது உறுதி யாகிவிட்டது. அவைகள் எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றியும் தோழமைக் கட்சிகளோடு கலந்து பேசி மணிக்கணக்கிலே விவாதித்து, அவைகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன.
அதன் பின்னர் கழகத்தின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களையெல்லாம் நேர்காணலுக்கு அழைத்து, இரவும் பகலுமாக திமுக தலைமை அவர்களோடு கலந்து பேசி, வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டார்கள்.
இதைத் தொடர்ந்து வரும் 19 ம் தேதி திமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படவுள்ளது. அந்தத் தேர்தல் அறிக்கையினைத் தயாரிப்பதற்காக திமுக சார்பில் நியமிக்கப்பட்ட குழுவினர் அளித்த விவரங்களை வைத்துக்கொண்டு தேர்தல் அறிக்கை தயாராகி, அச்சுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதைப்பற்றிக் கூட செய்தியாளர் ஒருவர் கடந்தமுறை திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையை அந்தத் தேர்தலிலேயே அதுதான் கதாநாயகன் என்று வர்ணிக்கப்பட்டதே, இந்த முறை தி.மு.கழகத்தின் தேர்தல் அறிக்கை எப்படி இருக்குமென்று கேட்டபோது நான் சிரித்துக் கொண்டே கதாநாயகியாக இருக்குமென்று சொன்னேன்.
அந்தத் தேர்தல் அறிக்கையிலே கூறப்படும் கருத்துக்களையெல்லாம் வாக்காளப் பெருமக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு கட்சியினருக்கு இருக்கிறது. திமுக சார்பில் கடந்த ஐந்தாண்டுகளில் செய்யப்பட்ட சாதனைகளையெல்லாம் எடுத்துச் சொல்லி, இதைப் போன்ற சாதனைகளில் மீண்டும் தொடர்ந்து பெற்றிட நமது அணியினை ஆதரிக்க வேண்டுமென்று அனைவரையும் கேட்டுக்கொள்ள வேண்டியது திமுகவினரின் கடமைதான்.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும், பொருளாளர் ஸ்டாலினும், தென் மண்டலத்தின் அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரியும், திமுக முன்னணியினரும், பிரச்சாரகர்களும், திமுக கலைஞர்களும் தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஈடுபடுவது பற்றிய விவரங்கள் அடுத்தடுத்து வரவுள்ளன.
இதற்கு முன்பெல்லாம் நான் விடிய விடிய தேர்தல் பிரச்சாரம் செய்வேனே, வேனிலே அமர்ந்து கொஞ்சம் தயிர் சாதத்தை சாப்பிட்டுவிட்டு ஒவ்வொரு தொகுதியாக வலம் வருவேனே, அந்த அளவிற்கு பிரச்சாரம் செய்ய எனது உடல் நிலை இடம் கொடுக்காவிட்டாலும், வராவிட்டால் தொண்டர்கள் கோபித்துக் கொள்வார்களே என்பதற்காக என்னால் முடிந்த அளவிற்கு ஆங்காங்கு வருவதற்கு முயற்சி செய்கிறேன். அதுபற்றிய விவரங்களையும் இரண்டொரு நாட்களில் தெரிவிக்கின்றேன்.
தேர்தலுக்கு இன்னும் ஒருமாதம் கூட இல்லை. எண்ணி 24 நாட்கள்தான் உள்ளன. அதற்குள் நமக்கு எண்ணிலடங்கா பணிகள் உள்ளன. நேரம் கிடைக்கும்போதெல்லாம் கடிதம் மூலமாக தொடர்பு கொள்கிறேன். மாற்றார் முகாமிலே என்ன நடக்கிறது என்றெல்லாம் பார்த்துக் கொண்டிராமல், மக்களை நேரில் சந்தித்து நாம் செய்தவைகளைச் சொல்லி, செய்யப் போவதையும் சொல்லி உண்மை உழைப்புக்கான அங்கீகாரத்தை அளிக்கச் செய்திடுக.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment