
பொதுமக்கள் பணம் எடுத்துச்செல்வதை தடுப்பதும், உயர் அதிகாரிகளை மாற்றுவதுமாக தன்னிச்சையாக அதிரடி நடவடிக்கை எடுப்பதா? என்று தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
முதல்வர் அறிக்கையை வழக்காக எடுத்து, கமிஷன் 28 ம் தேதிக்குள் பதில் அனுப்ப வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து மாநிலம் முழுவதும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, பல முனைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சோதனையில், ரூ.20 கோடிக்கு மேல் பணம், நகைகள், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அமைச்சர் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டன. மேலும், ரியல் எஸ்டேட் நடத்துபவர்கள், நகைக்கடைக்கு நகைகளை எடுத்துச் சென்றவர்கள், திருமணச் சாமான்கள் கொண்டு சென்றவர்கள் இந்த சோதனையில் சிக்கினர். இதற்கு பொதுமக்கள், வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் ஆணையத்துக்கும் மனு கொடுத்தனர். போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர்கள் அறிவித்தனர்.
இந்தநிலையில், முதல்வர் கருணாநிதியும் பொதுமக்களின் கோரிக்கை பற்றி தேர்தல் ஆணையத்துக்கு சில கேள்விகளை எழுப்பியிருந்தார். முதல்வர் கருணாநிதி வெளியிட்டிருந்த அறிக்கையை உயர்நீதிமன்றம், தானாக முன் வந்து, வழக்காக எடுத்துக் கொண்டு 23.03.2011 அன்று விசாரணை நடத்தியது. இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் எலிபி தர்மராவ், வேணுகோபால் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தமிழக முதல்வர் அறிக்கையை படித்து காண்டினர்.
அதன்பிறகு இந்த அறிக்கையை பொதுநல வழக்காக எடுத்து விசாரிப்பதாக அறிவித்தனர். விசாரணைக்கு பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
தேர்தல் கமிஷன் அளவுக்கு அதிகமான கட்டுப்பாட்டு விதித்துள்ளது என்ற தலைப்பில், தமிழக முதல்வர் கருணாநிதியின் அறிக்கை பத்திரிகையில் வந்துள்ளது. அதை நாங்கள் பரிசீலணை செய்து பார்த்ததில் தேர்தல் கமிஷனுக்கு 3 கேள்விகளை எழுப்புகிறோம். அவை வருமாறு:
1. வாக்குப்பதிவு தேதிக்கும் வாக்கு எண்ணிக்கை தேதிக்கும் ஏன் இவ்வளவு இடைவெளி? எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் இந்த முடிவை தேர்தல் கமிஷன் தன்னிச்சையாக எடுக்கமுடியுமா?
2. தமிழக அரசிடம் ஆலோசனை நடத்தாமல் போலீஸ் டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகளை தேர்தல் கமிஷன் தன்னிச்சையாக இடமாற்றம் செய்ய முடியுமா? டி.ஜி.பி. பதவி உயர்வுக்கு அரசு வகுத்த விதிமுறை சரியானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறிய நிலையில் டி.ஜி.பி. இடமாற்ற விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தன்னிச்சையாக செயல்பட முடியுமா?
3. தனி நபர்கள், வர்த்தகர்கள், நில பரிவர்த்தனை செய்பவர்கள் மற்றும் பொதுமக்கள் நியாயமான காரணத்திற்கு பணத்தை பொதுமக்கள் கொண்டு செல்லும் போது, தேர்தல் நன்னடத்தை என்ற காரணம் கூறி அதை பறிமுதல் செய்ய தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உள்ளதா? அரசியல் கட்சியில் ஏராளமான உறுப்பினர்கள் இருப்பார்கள். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க போகிறோம் என்று தேர்தல் கமிஷன் கூறி கொண்டு, பணத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கும் போது யார் அரசியல் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் என்று தேர்தல் அதிகாரிகள் எப்படி அடையாளம் கண்டுபிடிப்பார்கள். அப்படி அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் பணத்தை பறிமுதல் செய்ய முடியுமா?
இந்த கேள்விகள் அரசியல் சட்டப்படி முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே இந்த கேள்விகளுக்கு வரும் 28ம் தேதி தேர்தல் கமிஷன் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment