கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, March 28, 2011

சாதனைகளை சொல்லியிருக்கிறேன்: நன்றியை எதிர்பார்த்து நிற்கிறேன்: கலைஞர்


நாடு வாழ நாம் புரிந்த சாதனைகளை சொல்லியிருக்கிறேன். அனுபவித்துவரும் தமிழக மக்கள் காட்டப்போகும் நன்றியை எதிர்பார்த்து நிற்கிறேன் என்று முதல் அமைச்சர் கருணாநிதி கூறினார்.

தி.மு.க.தலைவரும் முதல் அமைச்சருமான கருணாநிதி 27.03.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

5 ஆண்டு தி.மு.க.ஆட்சியில்...

ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் தமிழக மக்கள் பல்வேறு பிரச்சினைகளைத் தான் சந்தித்து வருகிறார்கள், எந்த நன்மையும் செய்யப்படவில்லை, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த கருணாநிதி ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா என்றெல்லாம் கேட்டதாக ஏடுகளிலே செய்தி வந்துள்ளது. எனவே கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க ஆட்சியில் தமிழக மக்களுக்காக என்னென்ன செய்யப்பட்டது என்பது குறித்தும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பது பற்றியும் விளக்கிடுகிறேன்.


ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வீதம் மாதம் 20 கிலோஅரிசி ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு அதன் மூலமாக மாதந்தோறும் ஒரு கோடியே 85 லட்சம் குடும்பங்கள் பயனடைகிறார்கள். குறைந்த விலையில் பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா கோதுமை வழங்கப்படுகிறதே, இது மக்களுக்கு செய்யப்பட்ட நன்மை இல்லையா? விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நிறைவேற்றிய திட்டம் இல்லையா? "மானிய விலையில் மளிகைப் பொருள்கள்''என 50 ரூபாய்க்கு 10 சமையல் பொருள்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படுகின்றன.


கூட்டுறவு கடன் தள்ளுபடி


22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி கடந்த ஐந்தாண்டு காலத்தில் செய்யப் பட்டிருக்கிறதே, ஜெயலலிதாவுக்கு இது மக்களுக்கு செய்யப்பட்ட நன்மையாகத் தெரியவில்லையா? 35 லட்சத்து 54 ஆயிரத்து 721 விவசாயிகளுக்கு 8 ஆயிரத்து 477 கோடியே 56 லட்சம் ரூபாய் பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவைகள் எல்லாம் கடந்த ஐந்தாண்டு காலத்தில் கழக அரசில் செய்யப்பட்ட நன்மைகளா இல்லையா?


2005 2006ல் நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு விலை ரூபாய் 600; 2010 2011ல் சாதா ரக நெல் விலை 1050 ரூபாய்; சன்ன ரக நெல் விலை 1100 ரூபாய்; உழவர்களும், வாங்குவோரும் பயனடைய மீண்டும் புதுப்பொலிவுடன் 117 உழவர் சந்தைகள்; மேலும் புதிதாக 45 உழவர் சந்தைகள் அமைப்பு; பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 2006ல் 50 சதவீத காப்பீட்டுத் தொகையை அரசே மானியமாக வழங்கி, ஊக்கப்படுத்தியதால் 2005 2006ல் ஒரு லட்சம் விவசாயிகள் பயனடைந்த நிலையில்; 2009 2010 ம் ஆண்டில் 9 லட்சத்து ஓராயிரத்து 643 விவசாயிகள் அரசின் மானிய உதவி பெற்றுப் பயிர்க் காப்பீடு செய்தனர். இதுவரை 9 லட்சத்து ஆயிரத்து 643 விவசாயிகளுக்கு 974 கோடி ரூபாய் இழப்பீடுத் தொகை வழங்கப்பட்டுள்ளது; இது மக்களுக்குச் செய்யப்பட்ட சாதனையா இல்லையா? கரும்பு விவசாயிகளுக்கு 2005 2006ல் டன் ஒன்றுக்கு வழங்கப்பட்ட விலை ரூ.1014; தற்போது டன் ஒன்றுக்கு ரூ.2000 வழங்கப்படுகிறது.


மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் புரட்சிகரமான திட்டத்தின்கீழ் 189 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம்; 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்புத் திட்டம்; விவசாயிகளுக்கு வழங்கும் சலுகைகளால் உணவு தானிய உற்பத்தி உயர்வு. விவசாயிகளைச் சுயஉதவிக் குழுக்களாக ஒருங்கிணைத்து சுழல்நிதி வழங்கும் திட்டத்தின்கீழ் 27 ஆயிரத்து 294 குழுக்கள் அமைக்கப்பட்டு, 27 கோடியே 29 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சுழல்நிதியாக வழங்கப்பட்டு, 32 ஆயிரத்து 940 குழுக்களுக்கு 402 கோடியே 56 லட்சம் ரூபாய் பயிர்க் கடனாகவும் அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு இவைகள் எல்லாம் கடந்த ஐந்தாண்டு காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளாகத் தோன்றவில்லையா?


இலவச கலர் டி.வி.


ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 494 கைத்தறி நெசவாளர்களுக்கும், 90 ஆயிரத்து 547 விசைத்தறி நெசவாளர்களுக்கும், சிறப்புத் தொகை செலுத்தி மின் இணைப்பு பெற்ற 2 லட்சத்து 39 ஆயிரத்து 511 விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம்; மேலும், 2 லட்சம் பம்ப் செட்களுக்கும் இலவச மின்சார இணைப்பு படிப்படியாக வழங்கிட ஆணையிடப்பட்டு வழங்கப்படுகிறது.


3742 கோடியே 42 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு கோடியே 72 லட்சத்து 80 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்க முடிவு செய்யப்பட்டு, இதுவரை ஒரு கோடியே 62 லட்சத்து 59 ஆயிரத்து 526 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. 661 கோடி ரூபாய் செலவில் 29 லட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன;

ஒரு லட்சத்து 79 ஆயிரம் நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் விவசாயிகள் குடும்பங்களுக்கு 2 லட்சத்து 12 ஆயிரத்து 995 ஏக்கர் இலவச நிலம்; 8 லட்சத்து 29 ஆயிரத்து 236 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா.


காமராஜர் பிறந்த நாளில்...


காமராஜர் பிறந்த நாளில் "கல்வி வளர்ச்சி நாள்'' என பள்ளிகளில், கல்வி விழா; 2 வயது முதல் 15 வயது வரை உள்ள 73 லட்சம் குழந்தைகள், மாணவ மாணவியருக்கு சத்துணவுடன் வாரம் 5 நாட்களும் முட்டைகள்; முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப் பழங்கள்; தமிழ் வழியில் பயிலும் 50 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர்க்கு அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் சிறப்புக் கட்டணங்களும், 11 லட்சம் மாணவ, மாணவியருக்கு 10, 12 ம் வகுப்புகளின் அரசுத் தேர்வுக் கட்டணங்களும் ரத்து.


பட்டப்படிப்பு பயிலும் 3 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியரின் படிப்புக் கட்டணங்கள் ரத்து; 2010 2011 முதல் எம்.ஏ., எம்.எஸ்ஸி. வகுப்புகளுக்கும் படிப்புக் கட்டணங்கள் ரத்து. படிப்பைத் தொடர இயலாமல் இடையில் நிறுத்திய ஏழை மாணவர்களில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் வேலை வாய்ப்புகளுக்கேற்ற தொழிற் பயிற்சிகளைச் சமுதாயக் கல்லூரிகள் மூலம் பெற, ஒரு கோடி ரூபாய் செலவில் திறந்த நிலைப் பல்கலைக் கழகம் மூலம் தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை; ஆண்டுதோறும் 24 லட்சத்து 82 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கும், 4 லட்சத்து 35 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்; ஏழை மகளிர்க்கு பட்டப்படிப்பு வரை வழங்கப்பட்ட இலவசக் கல்வி, முதுகலைப் பட்டப் படிப்பு வரை நீட்டிப்பு.


நுழைவுத்தேர்வு ரத்து


தொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து. பட்டதாரிகள் இல்லாக் குடும்பங்களிலிருந்து தொழிற் கல்லூரிகளில் சேரும் முதல் மாணவர் அல்லது முதல் மாணவிக்கு கல்விக் கட்டணம் 20 ஆயிரம் ரூபாய் ரத்து; "மாவட்டத்திற்கொரு மருத்துவக் கல்லூரி'' கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்; அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லா திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள். நூறாண்டு கனவை நனவாக்கிச் "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்'' சென்னையில் அமைப்பு.


நலிந்த கலைஞர்களுக்கான நிதியுதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட நிதியுதவி மாதம் 500 ரூபாய் என்பது 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. 2006க்குப்பின் புதிதாக 2500 நலிந்த கலைஞர்களுக்குத் தலா ஆயிரம் ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்க அனுமதிக்கப்பட்டு இதுவரை 9 ஆயிரத்து 563 கலைஞர்கள் இத்திட்டத்தின்கீழ் பயன் பெற்றுள்ளனர்.


4724 திருக்கோவில்களில் 523 கோடி ரூபாய் செவில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன;


கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவி


மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டம் உட்பட அனைத்துத் திருமண உதவித் திட்டங்களின் நிதியுதவி 10 ஆயிரம் ரூபாய் என்பது 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு; 4 லட்சத்து 67 ஆயிரத்து 419 ஏழைப் பெண்களுக்கு 882 கோடியே 6 லட்சம் ரூபாய் நிதியுதவி; ஏழைக் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தலா 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி திட்டத்தின்கீழ் 25 லட்சத்து 76 ஆயிரத்து 612 ஏழை மகளிர்க்கு மொத்தம் 1389 கோடியே 42 லட்சம் ரூபாய் நிதியுதவி; 50 வயது கடந்து திருமணமாகாமல் வறுமையில் வாடும் 12 ஆயிரத்து 904 ஏழைப் பெண்களுக்கு மாதம் 500 ரூபாய் உதவித் தொகை; "வருமுன் காப்போம் திட்டம்'' மீண்டும் செயல் படுத்தப்பட்டு 18 ஆயிரத்து 742 மருத்துவ முகாம்களில் ஒரு கோடியே 77 லட்சத்து 5 ஆயிரத்து 85 பேர் ஏழை எளியோர் பயன்;

தமிழகத்தில் உள்ள 1,421 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்; புதிதாக உருவாக்கப்பட்ட 116 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தலா மூன்று செவிலியர்களைப் பணியமர்த்தி 24 மணிநேரமும் மருத்துவ சேவை அளிப்பதால், அங்கு 2005 2006ல் நடைபெற்ற மகப்பேறுகளின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 532 என்பது, 2009 2010ல் 2 லட்சத்து 98 ஆயிரத்து 853 ஆக, மூன்று மடங்கு உயர்ந்து கிராமப்புற மகளிர் மகிழ்ச்சியாக இருக்கிறார்களே, அது ஐந்தாண்டு கால சாதனையாக அம்மையாருக்குத் தெரியவில்லையா?


கிராமப்புற ஏழைகளுக்கு மருத்துவ வசதி


குழந்தைகள் உயிர் காத்திட மூடிய அறுவை சிகிச்சைக்கு 20 ஆயிரம் ரூபாய்; சாதாரண திறந்த அறுவை சிகிச்சைக்கு 50 ஆயிரம் ரூபாய்; கடினமான திறந்த அறுவை சிகிச்சைக்கு ஒரு லட்சம் ரூபாய் என அரசு நிதி உதவி வழங்கப்படுகிறது. 21.11.2007ல் தொடங்கப்பட்ட இளம் சிறார் இருதய அறுவை சிகிச்சைத் திட்டம், 3.6.2008ல் தொடங்கப் பட்ட பள்ளிச் சிறார் இருதய அறுவை சிகிச்சைத் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களின்கீழ் 3264 சிறார்க்கு 17 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் புகழ்வாய்ந்த 28 தனியார் மருத்துவ மனைகளின் மூலம் இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, குழந்தைச் செல்வங்களின் அரிய உயிர்கள் பாதுகாக்கப் பட்டுள்ளன.


கிராமப்புற ஏழைகளுக்கும் உடனடி மருத்துவ வசதி கிடைக்கச் செய்திட 445 ஊர்திகளுடன் கூடிய அதிநவீன "அவசர கால மருத்துவ ஊர்தி 108 சேவைத் திட்டம்''தமிழகம் முழுவதும் நடை முறை; 8 லட்சத்து 8 ஆயிரத்து 907 பேர் பயன்; அரசு ஊழியர்களுக்கு புதிய "மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்''; "உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்''; இதுவரை 2 லட்சத்து 55 ஆயிரத்து 744 ஏழை மக்களுக்கு 667 கோடி ரூபாய் செலவில் உயிர்காக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளன.


வேலை வாய்ப்பு

ஏறத்தாழ 2 லட்சத்து 35 ஆயிரத்து 464 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 62 ஆயிரத்து 349 கோடி ரூபாய் முதலீட்டிலான 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்; 24 அரசாணைகள் மூலம் 51 புதிய தொழிற்சாலைகள் அமைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளில் இதுவரை 12 தொழிற் சாலைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. 4 லட்சத்து ஓராயிரத்து 704 படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 284 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது; ஏறத்தாழ 5 லட்சத்து 5 ஆயிரத்து 314 இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன;


ஆதரவற்ற முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்பது 1.9.2006ல் 400 ரூபாய் எனவும், 24.11.2010 முதல் 500 ரூபாய் என மேலும் உயர்த்தப்பட்டு, மொத்தம் 23 லட்சத்து 71 ஆயிரத்து 370 பேர் மாதம் 500 ரூபாய் வீதம் உதவித்தொகை பெறுகின்றனர். இந்த உதவித் தொகை மாதம் 750 ரூபாயாக உயர்த்தப்படும் என தற்போது தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்குப் பராமரிப்பு உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்பது 500 ரூபாய் என உயர்த்தப்பட்டு, 2006 முதல் ஆண்டுதோறும் 10 ஆயிரம் கடும் மாற்றுத் திறனாளிகள் பயன்;


சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி


1989ல் தர்மபுரி மாவட்டத்தில் கழக அரசு தொடங்கிய மகளிர் திட்டத்தின் மூலம் இதுவரை உருவாக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கை 5,54,538. இக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன் 9 ஆயிரத்து 32 கோடி ரூபாய். 2006க்குப்பின் 26 லட்சத்து 94 ஆயிரம் மகளிர் உறுப்பினரைக் கொண்ட ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 493 புதிய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு; 1068 கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதாரக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. 2,81,883 மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுழல் நிதி 281 கோடியே 88 லட்சம் ரூபாய்.


மகளிர் சுய உதவிக் குழுக்களைப் போலவே 2006க்குப்பின் 19 ஆயிரத்து 885 இளைஞர் சுயஉதவிக் குழுக்களும், 30 ஆயிரம் நகர்ப்புற சுயஉதவிக் குழுக்களும், 11 ஆயிரத்து 155 விவசாயிகள் கூட்டுப் பொறுப்புக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டு நிதியுதவிகள் வழங்கப் படுகின்றன.


நிதிநிலையில் நலிந்த 30 நகராட்சிகளிலும் தலா 75 லட்சம் ரூபாய் செலவில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன; மாநகராட்சி, நகராட்சிகளின் நிதிநிலை மேம்பட்டு மக்களுக்கு வசதிகள் செய்திட அவை அரசுக்கு செலுத்த வேண்டிய 793 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி;


சாலை மேம்பாடு


12 ஆயிரத்து 94 கோடி ரூபாய்ச் செலவில் 57 ஆயிரத்து 787 கிலோ மீட்டர் நீளச் சாலைகளில் மேம்பாட்டுப் பணிகளும் பராமரிப்புப் பணிகளும் நிறைவேற்றப் பட்டன; 4 ஆயிரத்து 730கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் இருவழித் தடங்களாக அகலப் படுத்தப்பட்டுள்ளன; தமிழகத்தில் உள்ள சாலைகளில் 1046 பாலங்கள் மற்றும் 3800 மிகச் சிறுபாலங்கள் 881 கோடி ரூபாய்ச் செலவில் கட்டப் பட்டுள்ளன; தமிழகத்தில் உள்ள 4,676 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளில் 3,226 கி.மீ நீளச் சாலைகள் 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளன;


தலவரி, தலமேல்வரி, தண்ணீர்த் தீர்வை அனைத்தும் ரத்து; நிலவரி, ஏக்கர் ஒன்றுக்குப் புன்செய் நிலங்களுக்கு 15 ரூபாய் என்பது 2 ரூபாய் என்றும், நன்செய் நிலங்களுக்கு 50 ரூபாய் என்பது 5 ரூபாய் என்றும் பெயர் அளவிற்கு மட்டுமே வசூலிக்க அரசு ஆணை;


ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன. அரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்கள் உதயம்;


இஸ்லாமியர் சமுதாயம் மேன்மை பெற 3.5 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு; அருந்ததியர் சமூகத்தின் அவலம் தீர 3 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு; சமத்துவ சமுதாயம் காணும்நோக்கில் அனைத்துச் சாதியாரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு பல்வேறு சாதிகளையும் சார்ந்த 216 பேருக்கு அர்ச்சகர் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க ஏற்கனவே உருவாக்கப் பட்டுள்ள 145 பெரியார் நினைவு சமத்துவபுரங்களுடன் மேலும் 95 சமத்துவ புரங்கள் அமைத்து 240 சமத்துவபுரங்களையும் தந்தை பெரியார் திருவுருவச் சிலைகளுடன் நிர்மாணிக்கும் திட்டம் நடைமுறை; 95 சமத்துவ புரங்களில் இதுவரை 65 சமத்துவபுரங்கள் திறப்பு; 30 சமத்துவபுரங்கள் அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.


புதிய சட்டமன்ற வளாகம்


சென்னை கோட்டூர்புரத்தில் உலகத் தரத்திலான 181 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான "அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்'' திறப்பு; ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற தலைமைச்செயலக வளாகம் திறந்து சாதனை; 100 கோடி ரூபாய் செலவில் அடையாறு தொல்காப்பியர் பூங்கா திட்டம்; சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் 8 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்திலான "செம்மொழிப் பூங்கா''திறப்பு;


குடிநீர் திட்டம்


சென்னை குடிநீர் பற்றாக்குறையை தீர்த்திட, வட சென்னை மீஞ்சூரில் "கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்'' நிறைவேற்றப்பட்டு திறப்பு; மத்திய அரசு அனுமதித்துள்ள 908 கோடி ரூபாய் நிதியுதவியுடன் தென் சென்னையில் நெம்மேலியில் "கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்;'' ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதி உதவியுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "மெட்ரோ ரெயில் திட்ட'' அமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன; 1929 கோடி ரூபாய் மதிப்பீட்டில், "ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்;''630 கோடி ரூபாய்ச் செலவில், "ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றம்;''


சென்னைத் துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை 1,655 கோடி ரூபாய் மதிப்பீட்டில், "பறக்கும் சாலைத் திட்டம்;'' வேகமாக உருவாகி வருகிறது. மத சுதந்திரம் பேண "கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் ரத்து;'' "மூன்றாவது காவல் ஆணையம்'' மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டு, அது வழங்கிய 444 பரிந்துரைகளில் இதுவரை 278 பரிந்துரைகள் நடைமுறை; 2 லட்சத்து 12 ஆயிரத்து 981 சத்துணவுப் பணியாளர்கள் பயன்பெற காலமுறை ஊதியம்; ஓய்வூதியம்;


அரசு ஊழியர்களுக்கு...

டெஸ்மா, எஸ்மா சட்டங்களை நீக்கி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பறிக்கப்பட்ட சலுகைகளைகள் மீண்டும் வழங்கப்பட்டு, 1.1.2006 முதல் தமிழகத்தில் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 155 கோடியே 79 லட்சம் ரூபாய் கூடுதல் செலவில் 6வது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன்காரணமாக, 11 ஆயிரத்து 93 கோடி ரூபாய் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகையாக அனுமதிக்கப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 2 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பயன்பெறும்வகையில் 200 கோடி ரூபாய் கூடுதல் செலவில் ஒரு நபர் குழு பரிந்துரை நடைமுறை; ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்கி 163 கோடி ரூபாய்ச் செலவில் கூடுதல் சலுகைகள்; 2.73 லட்சம் ஆசிரியர்கள் பயன். அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத அலுவலர்கள், அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஊர்திப்படி 300 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட ஆணை;


குடிசை வீடுகளுக்கு பதில் கான்கிரீட் வீடு


21 லட்சம் குடிசை வீடுகளை 6 ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் "கலைஞர் வீடு வழங்கும் திட்டம்'' என்னும் புரட்சிகரமான திட்டம். நடப்பாண்டில் ஒரு வீட்டிற்கு 75 ஆயிரம் ரூபாய் மானியம் வீதம் 2,250 கோடி ரூபாய்ச் செலவில் 3 லட்சம் வீடுகளைக் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டு, பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்குரிய பணி ஆணைகள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின்கீழ் முதல் வீடு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராமத்தில் 9.10.2010 அன்று பயனாளிக்கு வழங்கப்பட்டது. இதுவரை 75 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 31.3.2011க்குள் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கான்கிரீட் வீடுகளும், 15.4.2011க்குள் 2 லட்சம் கான்கிரீட் வீடுகளும் கட்டி முடிக்கப்படும். இதுவரை இத்திட்டத்திற்கு 1082 கோடி ரூபாய் அரசு செலவிட்டுள்ளது.


மேலும் 12 லட்சம் பயனாளிகளுக்கு தகுதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக மேலும் 3 லட்சம் குடிசைகள் இத்திட்டத்தின்கீழ் கான்கிரீட் வீடுகளாகக் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டு 2011 பிப்ரவரியில் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கான அரசு மானியம் 75 ஆயிரம் ரூபாய் என்பது ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப் பட்டுள்ளது.


சாதனைகளை சொல்லியிருக்கிறேன்


இன்னும் துறைவாயிலாக கழக அரசின் ஐந்தாண்டு காலச் சாதனைகளையும் பட்டியலிடுவதென்றால் இடம் போதாது என்பதால் அந்தப் பட்டியலை நிறுத்தி விட்டேன். தற்போது கடந்த ஐந்தாண்டுகளில் எந்தச் சாதனையும் செய்யப்படவில்லை என்று தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசப்படுவதால் ஒட்டுமொத்த சாதனைகள் சிலவற்றை அவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஞாபகப்படுத்துவதற்காக இதனைத் தொகுத்து வெளியிட்டுள்ளேன்.


செய்த சாதனைகளைச் சொல்லியிருக்கிறேன். இந்தச் சாதனைகளை அன்றாடம் அனுபவித்து வரும் தமிழ்நாட்டு மக்கள் காட்டப்போகும் நன்றியினை எதிர்பார்த்து நிற்கின்றேன்.


இவ்வாறு முதல் அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்.


No comments:

Post a Comment