

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடிகர் வடிவேலு 28.03.2011 அன்று மாலை கொளத்தூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது,
கொளத்தூர் தொகுதியை சொர்க்க பூமியாக மாற்றுவதற்கு, துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கே போட்டியிடுகிறார். கடந்த 5 ஆண்டு காலத்தில் எண்ணற்ற பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி இருக்கிறது.
இப்போதும் தேர்தல் அறிக்கையில், மிக்சி, கிரைண்டர் என்று அறிவித்து இருக்கிறார்கள். கலைஞர் ஆட்சியில், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு கூட, திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அன்னை போல் தாய்மை உள்ளம் கொண்டவராக கருணாநிதி விளங்கி வருகிறார்.
துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 12 வயதிலேயே அரசியலுக்கு வந்தவர். அரசியலில் கடுமையான போராட்டங்களை சந்தித்து முன்னுக்கு வந்திருக்கிறார். இப்போதும், 12 வயது போலவே துருதுருவென செயல்படுகிறார். அவர் சென்னை நகர மேயராக இருந்தபோது, சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன் என்று கூறினார். இதை அப்போது எல்லோரும் கேலி செய்தனர். ஆனால், இன்று சென்னையில் எண்ணற்ற பாலங்கள், பூங்காக்கள், குப்பையில்லா கூவம் என்று சென்னை நன்றாக காட்சி அளிக்கிறது. செம்மொழி பூங்கா அமைத்து, அதை சொர்க்க பூமி பூங்காவாக மாற்றியிருக்கிறார்.
நேற்று கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம், நாங்கள்தான் முதல்வர் என்று கூறுகிறார்கள். சினிமாவில் நான் நிறைய பேரை சிரிக்க வைத்திருக்கிறேன். ஆனால், என்னை சிரிக்க வைத்தவர் விஜயகாந்த்.
234 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார். அந்த ஒரு தொகுதி (விருதாச்சலம்) மக்கள், நாங்கள் ஏமாந்துவிட்டோம் என்று, உள்ளம் வருந்திக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் வீரம் காட்டுவார் விஜயகாந்த். வில்லன்களை அடித்து துவைப்பார். இதெல்லாம் டூப். உண்மையிலேயே அடி வாங்குவது யார் என்றால் நாங்கள்தான்.
தன்னை கருப்பு எம்.ஜி.ஆர். என்கிறார். ஆனால், அவருக்கு எம்.ஜி.ஆரின் குணமில்லையே.
சிவனே என்று இருந்த எனது வீட்டில் கல் எரிந்தனர். இது என் மகள் மீது பட்டது. ஊரையே சிரிக்க வைக்கும் என்னை, அழவைத்தவர் விஜயகாந்த். அந்த அளவுக்கு கொடூரமனம் படைத்தவர் அவர். பண்பாடு தெரியாதவர், அவருக்கு புரட்சி கலைஞர் என்று பெயர் வைத்தவர் என் கலைஞர். அவருடைய திருமணத்தை நடத்தி வைத்தவர் கலைஞர். அப்படிப்பட்ட அப்பாவுக்கு நிகரானவரை, ஒழிப்பேன் என்று பிரசாரம் செய்து வருகிறார்.
விஜயகாந்த் எப்போதும் நிதானமின்றி இருப்பதால், பிரச்சாரத்தில் என்ன பேசுகிறோம் என்று அவருக்கே தெரியாது. ஏதோ ஒரு பிரச்சனையை பற்றி எப்போதாவது நிதானமாக அவரால் பேச முடிகிறதா. அவருக்கு பெயர் கேப்டன் என்று சொல்கிறார்கள். தான் என்ன பேசினோம் என்பதை காலையில் பேப்பரில் பார்த்துதான் தெரிந்துகொள்வார்.
எம்ஜிஆருக்கு மாற்றாக விஜயகாந்த்தை ஒருபோதும் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நேற்று கட்சியை ஆரம்பித்துவிட்டு இன்று முதல் அமைச்சர் பதவிக்கு வர ஆசைப்படலாமா? முதல் அமைச்சராக வர ஆசையாக இருந்தால் ஒரு 5 கோடி, 10 கோடி செலவு செய்து முதல் அமைச்சராக நடிக்க வேண்டியதுதானே.
இப்படி பேசியதால் என்னுடைய உருவபொம்யை எரிக்கச் சொல்லி மகிழ்கிறார். ஆனால் விஜயகாந்த்துக்கு எதிரான எனது விமர்சனத்தை ஒருபோதும் நிறுத்த மாட்டேன்
நேற்று கூட கலைஞர் சொன்னார். எல்லாவற்றையும் உங்களுக்கு செய்திருக்கிறேன். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு வடிவேலு பேசினார்.
No comments:
Post a Comment