கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, March 24, 2011

தேர்தல் ஆணையம் இந்த முறை அதிக கெடுபிடி செய்ய என்ன காரணம்? - முதல்வர் கருணாநிதி கேள்வி


தேர்தல் கமிஷன் கெடுபிடி வாகன சோதனையில் காமெடி காட்சிகள் ஆடு, கொலுசுகளைக்கூட விடவில்லை என்று செய்திகள் வந்துள்ளன. தேர்தல் ஆணையம் இந்த முறை இந்த அளவிற்கு அதிகக் கெடுபிடிகள் செய்ய என்ன காரணம்? என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி 22.03.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
இதுவரை நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் வாக்குப் பதிவு முடிவுற்ற இரண்டொரு நாட்களில் வாக்குகள் எண் ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும். ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத ஒரு முடிவாக ஏப்ரல் 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்ற போதிலும், மே 13ம் நாள்தான் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
எதற்காக இந்த இடைவெளி? ஏன் ஒரு மாதத்திற்கு முன்பாகவே அரசியல் கட்சிகளுக்கு நேரம் கொடுக்காமலே அவசரம் அவசரமாக தேர்தலை நடத்துகிறார்கள்? எல்லாம் தேர்தல் ஆணையத்தின் முடிவு. அவர்களுக்கு எதிராக யாரும் வாய் திறக்கக் கூடாது. அரசியல் கட்சிகள் சார்பில் வாக்குப் பதிவு செய்யும் நாளை சற்று தள்ளி வைக்க வேண்டுமென்ற கோரிக்கை வைக்கப்பட்டபோது தேர்தல் ஆணையம் அதனை ஏற்க முடியாதென்று தள்ளிவிட்டது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவு என்று சொல்லி மற்றும் ஒரு கொடுமையும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டிலே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் யாரும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பணம் எடுத்துச் செல்லக்கூடாது. இதைப்பற்றி அன்றாடம் ஏடுகள் ஒவ்வொரு செய்தியைத் தாங்கி வெளிவருகின்றன. ஏன், மாலை இதழ் ஒன்றில் நேற்று வந்த செய்தியிலே கூட தேர்தல் கமிஷன் கெடுபிடி வாகன சோதனையில் காமெடி காட்சிகள் ஆடு, கொலுசுகளைக்கூட விடவில்லை என்று கொட்டை எழுத்துக்களில் செய்திகள் வந்துள்ளன.
அந்தச் செய்தியில் தேர்தல் என்றாலே தெருவுக்குத் தெரு, வீதிக்கு வீதி வேட்பாளர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் மாறி மாறி கார்களில் வந்து பிரச்சாரம் செய்தபடி இருப்பார்கள். எங்கு பார்த்தாலும் ஒலிபெருக்கியில் பிரச்சாரச் சத்தம் காதைப் பிளந்த வண்ணம் இருக்கும். அரசு சுவர்கள், தனியார் சுவர்களில் சின்னங்கள் தேர்தல் வாசகங்கள் எழுத முன் கூட்டியே இடம் பிடித்து விடுவார்கள்.
வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும் பெயர் எழுதுவது வாசகம் எழுதுவது மும்முரமாக இருக்கும். தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே திருவிழா போல ஊரெங்கும் களை கட்டி விடும். ஆனால் இந்தத் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி உத்தரவுகளைப் போட்டுள்ளது. சுவர்களில் வரையப்பட்டிருந்த சின்னம், தலைவர்களது படங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன.
சென்னை நகரில் ஒரு இடத்தில் கூட சின்னத்தைப் பார்க்க முடியவில்லை. சிலைகளைக் கூட விட்டுவைக்கவில்லை. அண்ணா, காமராஜர், ராஜீவ்காந்தி, எம்.ஜி.ஆர். சிலைகளையும் தேர்தல் முடியும் வரை மூடவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சிலைகளை துணியால் சுற்றி மூடி வைத்துள்ளனர். கொடி தோரணங்களும் கண்ணில் படவில்லை.
பொது இடங்களில் இருந்த கட்சிக் கொடி கம்பங்களும், கொடிகளும் அகற்றப்பட்டு வருகின்றன. போஸ்டர்கள், டிஜிட்டல் பேனர்களும் எங்கும் காணப்படவில்லை. தேர்தலுக்கு முன்பே தொடங்கும் ஆரவாரம் தம்பட்டம் எதுவும் இன்றிகளை இழந்த கோவில் விழா போல் காட்சி அளிக்கிறது. இதற்கெல்லாம் மேலாக வாகன சோதனை, வியாபாரிகளையும் பல்வேறு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களையும் முடக்கிப்போட்டு விட்டது.
நகைக்கடைக்காரர்கள் அல்லது தொழில் நிறுவனங்கள் நடத்துவோர் அன்றாடம் வசூல் ஆகும் வியாபார பணத்தை வங்கியில் கட்ட எடுத்துச் செல்வார்கள். இப்போது அவர்கள் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்ல முடியவில்லை. வாகன சோதனையில் சிக்கினால் அதிகாரிகள் பறிமுதல் செய்து விடுகிறார்கள். இது போல் நிலம் வாங்க, விற்க எடுத்துச் செல்லும் பணமும் பறிமுதல் செய்யப் படுகிறது. இதுவரை நடந்த சோதனையில் எந்த அரசியல் பிரமுகரிடமும் பணம் சிக்கவில்லை என்பதுதான் வேடிக்கை என்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் வாகனச் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 29ம் தேதி கடை அடைப்பு நடத்த வணிகர்கள் முடிவு செய்திருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா அறிக்கை கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்துள்ள அறிக்கையில் தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் 22ம் தேதிக்குள் அவர்களை அழைத்துப்பேசி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்றும், இல்லாவிட்டால் 24ம் தேதி வணிகர் சங்கப் பிரதிநிதிகள் ஒன்று கூடி சென்னையில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்து வார்கள் என்றும், அதன் பின்னரும் இந்தப் பிரச்சினை நீடித்தால் வரும் 29ஆம் தேதி கடையடைப்பு நடத்துவார்கள் என்றும், அதற்கும் பலன் இல்லாவிட்டால் வணிகத் துறையினர் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இதிலே இன்னும் வேடிக்கை வாகன சோதனையில் ஆடு, கோழிகளைக் கூட விட்டு வைக்கவில்லை. வாக்காளர்களுக்கு பிரியாணி போடுவதற்காக மொத்தமாக கொண்டு போவதாக கற்பனை செய்து கொண்டு ஆடுகளையும், கோழிகளையும் ஏன் பீடிகளையும் கூட பறிமுதல் செய்துள்ளார்கள். விற்பனைக்காக எடுத்துச் சென்ற கொலுசுகளையும், நகைகளையும் கைப்பற்றியிருக்கிறார்கள். மதுரையில் ஒரு அரசியல் கட்சியினரின் வெங்காய கிடங்கில் பணம் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி சோதனை நடத்தியிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் இந்தக் கெடுபிடிகளை எதிர்த்து தேனி மாவட்டம், ஜக்கம்பட்டியைச் சேர்ந்த தில்லை நடராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு ஒன்றையே தாக்கல் செய்துள்ளார். அதில் தேசிய நெடுஞ்சாலைகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாகனங்களைச் சோதனை யிட்டு பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர், இது போல பணத்தை பறிமுதல் செய்ய தேர்தல் கமிஷனுக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை
திருமணத்துக்கு நகை வாங்கி வந்தாலும் அதையும் பறிமுதல் செய்கிறார்கள். இதனால் பொது மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். நீதிபதிகள் வழக்கு விசாரணையை தள்ளிவைத்திருக்கிறார்கள். விசாரணை தொடர்கிறது.
தேர்தல் ஆணையம் தனது செயல்பாட்டினை இந்த அளவோடு நிறுத்திக் கொள்ளவில்லை. இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவிற்கு போலீஸ் டி.ஜி.பி. முதல் மாவட்டக் கலெக்டர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் பல பேரை தேர்தல் கமிஷன் மாற்றம் செய்து ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் நேர்மையாகப் பணி புரிந்து கொண்டிருந்த பல அதிகாரிகளை அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அதிலே உண்மை இருக்கிறதா என்பதைப் பற்றிக்கூட விசாரிக்காமல் தமிழக அரசிடம் கேட்காமல் கூட தன்னிச்சையாக மாற்றி ஆணை பிறப்பித்திருக்கிறார்கள். அதிகாரிகள் அளவிலே மட்டுமல்ல, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலே சாதாரணமாகப் பணியாற்றும் மக்கள் தொடர்பு அதிகாரிகளைக்கூட மாறுதல் செய்து உத்தரவிட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் கூடுதல் விதிமுறைகளை நேற்று அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்று எழுதி தேர்தல் ஆணையத்தின் கூடுதல் கெடுபிடிகள் எல்லாம் கூறப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையம் இந்த முறை இந்த அளவிற்கு அதிகக் கெடுபிடிகள் செய்ய என்ன காரணம்? தேர்தல் ஆணையம் கெடுபிடியில் ஈடுபட்டிருப்பதாக நாம் குற்றம் சாட்டவில்லை. நாளேடுகள் பல அதைப்பற்றி அன்றாடம் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. அதைப்பற்றி தேர்தல் ஆணையம் ஏதாவது கவலைப்படுகிறதா? மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம் கங்கையே சூதகமானால் எங்கே மூழ்குவது? என்று தேவர் திருமகன் அடிக்கடி கூறிய பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment