![](http://4.bp.blogspot.com/-jTXeLqZbPwQ/TliYv0nuDYI/AAAAAAAAFHs/3IJeup09WEo/s400/1.jpg)
அவிநாசி அருகே 3.10 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, நிலத்தின் உரிமையாளர்களை மிரட்டியதாக 15 வேலம்பாளையம் நகராட்சி தலைவர் எஸ்.பி. மணியை திருப்பூர் போலீசார் கைது செய்தனர். விசாரணைக்காக எஸ்.பி. அலுவலகம் வந்த அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி, கருவலூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (69). இவரது சகோதரர்கள் கணேசன், சாமியப்பன். சகோதரிகள் மாணிக்கம்மாள், தாயம்மாள். இதில் சுப்பிரமணியன், சாமியப்பன் ஆகிய இருவர் மட்டுமே தற்போது உள்ளனர். மற்றவர்கள் இறந்து விட்டனர். சுப்பிரமணியத்தின் தந்தை கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமாக கருவலூரில் அவிநாசி மெயின் ரோட்டில் 3.10 ஏக்கர் நிலம் இருந்தது.
இந்த நிலத்தை சுப்பிரமணியன், சாமியப்பன், கணேசன் ஆகியோருக்கு அவரது தந்தை கிருஷ்ணன் எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலத்தில் உரிமை கோர மாட்டோம் என சுப்பிரமணியத்தின் சகோதரிகள் மாணிக்கம்மாள், தாயம்மாள் ஆகியோர் எழுதி கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாணிக்கம்மாள், தாயம்மாள் ஆகியோரின் வாரிசுகளான பாலகிருஷ்ணன், சிவக்குமார், சுப்புலட்சுமி, சண்முகவடிவு ஆகியோருடன் சேர்ந்து, 15 வேலம்பாளையம் நகராட்சி தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான எஸ்.பி. மணி மற்றும் அவரது ஆதரவாளர் செல்வராஜ் ஆகியோர் போலி ஆவணங்களை தயார் செய்து நிலத்தை அபகரித்து கொண்டதாக சுப்பிரமணியன் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
நிலத்தை ஆக்கிரமித்து கம்பி வேலி போட்டு மிரட்டி வந்ததாகவும், கடந்த 24ம் தேதி தன்னையும், சகோதரர் சாமியப்பனையும் தி.மு.க. நகராட்சி தலைவர் எஸ்.பி.மணி, அவரது ஆதரவாளர் செல்வராஜ் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாக சுப்பிரமணியன் புகார் தெரிவித்தார். இது தொடர்பான விசாரணையை நிலஅபகரிப்பு பிரிவு போலீசார் மேற்கொண்டு வந்தனர்.
இதன் அடிப்படையில் 15 வேலம்பாளையம் நகராட்சி தலைவர் எஸ்.பி. மணி, அவரது ஆதரவாளர் செல்வராஜ் மற்றும் பாலகிருஷ்ணன், சிவக்குமார், சுப்புலட்சுமி, சண்முகவடிவு ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்காக 26 .08 .2011 அன்று காலை விசாரணைக்காக நகராட்சி தலைவர் மணியை மாவட்ட குற்றப்பிரிவு மையத்தில் ஆஜராக தெரிவிக்கப்பட்டது. அதன்படி 26.08.2011 அன்று காலை விசாரணைக்காக வந்த நகராட்சி தலைவர் மணியை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து திருப்பூர் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் ஆஜர்படுத்தப்பட்ட நகராட்சி தலைவர் மணியை செப்டம்பர் 9ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதையடுத்து நகராட்சி தலைவர் மணி கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். நகராட்சி தலைவர் மணி கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாநகராட்சி மேயர் செல்வராஜ் உட்பட ஏராளமான தி.மு.க.வினர் மாவட்ட காவல் அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3.10 ஏக்கர் நிலம் அபகரித்ததாக வழக்கு
கைதான 15 வேலம்பாளையம் நகராட்சி தலைவர் மணியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
6 பிரிவுகளில் வழக்கு
3.10 ஏக்கர் நில அபகரிப்பு வழக்கில், 15 வேலம்பாளையம் நகராட்சி தலைவர் எஸ்.பி. மணி உள்ளிட்ட 6 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 468 (ஏமாற்றுவதற்கு பொய்யாக புனைதல்), 447 (குற்றுமுறு அத்துமீறல்), 341 (சட்ட விரோதமாக தடுத்தல்), 294 (பி) தகாத வார்த்தைகளை பயன்படுத்துதல், 506 (1) (குற்றுமுறு மிரட்டல்), 120 (பி) (கூட்டு சதி செய்தல்) என 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment