![](http://2.bp.blogspot.com/_d1iGc9LBTmw/TOEE96nvKGI/AAAAAAAABXI/WZg-MUA_ick/s400/A.jpg)
![](http://2.bp.blogspot.com/_d1iGc9LBTmw/TOEE6UCN82I/AAAAAAAABXA/2uWDOEn6vZ4/s400/B.jpg)
![](http://3.bp.blogspot.com/_d1iGc9LBTmw/TOEE3FtrY0I/AAAAAAAABW4/ztik8b2FN2Y/s400/C.jpg)
முதலமைச்சர் கருணாநிதியின் பேரனும், மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகனுமான துரை தயாநிதிக்கும், சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சீதாராமன் மகள் அனுஷாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது.
இந்த திருமணம் மதுரை தமுக்கம் மைதானத்தில் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. முன்னதாக 17-ந் தேதி இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் கருணாநிதி 17-ந் தேதி பகல் 1 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு தி.மு.க. மாநகர் மற்றும் புறநகர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் தமுக்கம் மைதானத்தில் இரவு 6 மணிக்கு நடக்கும் வர வேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொள்கிறார். வரவேற்பு நிகழ்ச்சியில் கங்கை அமரன் குழுவினரின் இன்னிசை விருந்து நடக்கிறது.
மறுநாள் (18-ந் தேதி) காலை 9.30 மணிக்கு துரைதயாநிதி-அனுஷா திருமணம் நடக்கிறது.
திருமணத்தை நிதி அமைச்சர் அன்பழகன் தலைமையில் முதலமைச்சர் கருணாநிதி நடத்தி வைக்கிறார். முன்னதாக காலை 8 மணிக்கு பொன்னுச்சாமி குழுவினரின் நாதஸ்வரமும், பழனிவேல் மற்றும் பால சுப்பிரமணியத்தின் சிறப்பு தவில் நிகழ்ச்சியும் நடக்கிறது.
இந்த திருமண நிகழ்ச்சியில் மத்திய-மாநில மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித் உள்பட பலரும் கலந்து கொள்கின்றனர். மேலும் தமிழகம் முழுவதிலும் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.
திருமண ஏற்பாடுகளை மத்திய மந்திரி மு.க.அழகிரி முன்னிலையில் தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி, புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ்பாபு, மேயர் தேன்மொழி, துணை மேயர் மன்னன், மண்டல தலைவர்கள் இசக்கிமுத்து, குருசாமி உள்பட தி.மு.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
துணை முதலமைச்சர் ஸ்டாலின், சகோதரி செல்வி ஆகியோர் கடந்த 4-ந் தேதி மதுரை வந்து தமுக்கம் மைதானத்தில் நடந்து வரும் திருமண ஏற்பாடுகளை பார்வையிட்டு சில ஆலோசனைகள் வழங்கினர். தொடர்ந்து அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, நேரு, மைதீன்கான், தமிழரசி ஆகியோர் பார்த்தனர்.
தமுக்கம் மைதானத்தில் மணமேடை மிக அழகாகவும் எளிமையாகவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதில் அறிஞர் அண்ணாவின் படமும், முதலமைச்சர் கருணாநிதியின் பெற்றோர் முத்துவேலர்-அஞ்சுகம் அம்மையார் படங்களும், மு.க.அழகிரியின் மாமானார் காராளன்- மாமியார் மீனாட்சி அம்மாள் படங்களும் உள்ளது.
திருமணத்தில் கலந்து கொள்ளும் முக்கிய பிரமுகர்கள், தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், மற்றும் பொதுமக்களுக்கு சுவையான சைவ உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த திருமண ஏற்பாட்டிற்காக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட கூடாது என்று மத்திய மந்திரி மு.க.அழகிரி கண்டிப்பான உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
குறிப்பாக தி.மு.க. உறுப்பினர்கள் பிளக்ஸ் போர்டு வைப்பதற்கு தடை விதித்து உள்ளார். மதுரை மாநகர் மற்றும் புறநகர் தி.மு.க சார்பில் மட்டும் நகரில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த போர்டுகள் அனைத்தும் மாநகராட்சியின் அனுமதியுடன், போலீஸ் துறை தடை இல்லா சான்றிதழ் பெற்று பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாதவாறு நிறுவப்பட்டு உள்ளது.அதுவும் பெரும்பாலான போர்டுகள் கட்டிடங்கள் மேல் வைக்கப்பட்டு உள்ளது. இது தவிர சாலைகளின் ஓரங்களில் தி.மு.க. கொடிகள் மற்றும் தோரணங் கள் கட்டப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment