திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என காவிரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்கம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் குரு.கோபிகணேசன், முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கடந்தமுறை நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் விவசாயிகளின் கூட்டுறவு கடன் ரூ.7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தீர்கள். நிலவரியையும் ரத்து செய்து விவசாயிகளின் வாழ்வில் ஒளி விளக்கேற்றினீர்கள். இந்த தேர்தல் அறிக்கையிலும் விவசாயிகளுக்காக எண்ணற்ற சலுகைகளை அறிவித்துள்ளீர்கள். அதை நீங்கள் நிறைவேற்றித் தருவீர்கள் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு உள்ளது.
எனவே, வரும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தருவது மட்டு மல்லாமல், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மக்கள் பாதுகாப்பு கழகம் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு :
மக்கள் பாதுகாப்பு கழக பொதுச் செயலாளர் மணிமாறன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மக்கள் பாதுகாப்புக் கழகத்தின் சார்பில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு சிறப்பு மலர் வெளியீட்டு விழா கடந்த மார்ச் 27ம் தேதி நடந்தது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு மலரை வெளியிட்டார். இந்த விழாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பிறகு நடந்த செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் திமுகவை ஆதரிப்பது என முடிவு செய்தோம். கழகத்தின் இளைஞர்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோரை கொண்டு, தமிழக அரசின் மகளிர் நலக்கொள்கை திட்டங்களை ஆதரித்தும், திமுக அரசு தொடர்ந்திட, 6வது முறையாக முதல்வர் கருணாநிதி அரியணை ஏற்றிட களப்பணியாற்ற முடிவு செய்துள்ளோம்.
திமுக கூட்டணிக்கு பரதர் நலப்பேரவை ஆதரவு :
தூத்துக்குடியில் பரதர் நல பேரவையினர் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் அடைக்கலம், தூத்துக்குடி வடபாகம் மீனவர் சங்க தலைவர் ராபர்ட், மாவட்ட நாட்டுபடகு மீனவர் சங்க தலைவர் கயஸ், மாநகராட்சி துணை மேயர் தொம்மை ஏசுவடியான் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், 1998ல் பரதர்குல மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை நிபந்தனையின்றி தள்ளுபடி செய்தவர் முதல்வர் கருணாநிதி. குளச்சல் தொகுதியில் பெர்னார்டை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற செய்து, மீன்வள ஆலோசனை குழு உறுப்பினராக நியமித்துள்ளார். பரத மக்களை கடல்துறை பழங்குடியினராக அறிவித்து சலுகைகள் அளிக்க அவர் தயாராக இருக்கிறார். திமுக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது
ஆசிரியர் குடும்பங்களின் ஒன்றரை கோடி ஓட்டு தி.மு.க கூட்டணிக்கே :
‘ஆசிரியர் குடும்பங்களின் ஒன்றரை கோடி ஓட்டு, எப்போதும் திமுகவுக்குதான்’ என்று அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பின் தென்னிந்திய செயலாளர் அண்ணாமலை தெரிவித்தார்.
பெரம்பலூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆசிரியர், அரசு ஊழியர்கள் காடு போய் சேரும் வரை கைகொடுத்து உதவி வந்த ஓய்வூதிய பணப்பயன்கள் ஜெயலலிதா ஆட்சியில் ரத்து செய்யப்பட்டதை மறக்க முடியவில்லை. வேலை நியமனத்திற்கு 5 ஆண்டு தடைச்சட்டம் போட்டதையும் மறக்க முடியவில்லை. பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 1.75 லட்சம் பேரை எஸ்மா, டெஸ்மா சட்டங்களை கொண்டு பணி நீக்கம் செய்ததை மறக்க முடியவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலே ஆபத்துதான்.
வேலை நியமன தடைச்சட்டத்தை ரத்து செய்ததோடு, வயது வரம்பை 5 ஆண்டு உயர்த்தி அறிவித்த கருணாநிதியை மறக்கமாட்டோம். 45,989 ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிய முதல்வர் கருணாநிதியை மறக்கமாட்டோம்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் 18 லட்சம் பேர் உள்ளனர். அவர்களது குடும்பத்தினரையும் சேர்த்து ஒன்றரை கோடி ஓட்டுகள் எங்களிடம் உள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் கருணாநிதிதான் வேட்பாளர். வாக்குப்பதிவு இயந்திரங்களில் அவரது முகம்தான் எங்களுக்கு தெரியும். நன்றி மறக்காமல் அவருக்குத்தான் வாக்களிப்போம்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
No comments:
Post a Comment