கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, August 8, 2010

நாம் அனைவரும் தமிழர் :மு.க.ஸ்டாலின் பேச்சு


திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 8வது சமத்துபுரத்தினை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அவர் அவ்விழாவில் பேசும் போது, நாம் அனைவரும் தமிழர் என்ற உணர்வோடு வாழவேண்டும் என்று தெரிவித்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’’திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அரியநாயகிபுரத்தில் ரூ.2.55 கோடியில் கட்டப்பட்டுள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம், ரூ.1.68 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டட திறப்பு விழா, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் அவர்கள் தலைமையில் சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று (07.08.2010) நடைபெற்றது.

விழாவில் தந்தை பெரியார் நினைவு சமத்துபுரம், சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேருரையாற்றும்போது தெரிவித்ததாவது:

’’இந்த ஏற்றமிகு விழாவில் உங்களில் ஒருவனாக கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். கடந்த இரண்டு நாட்களாக அரசின் பல்வேறு நிகழ்ச்சிகள், கழகத் தோழர்களின் நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளேன்.


ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு அடுத்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்கின்றபோது சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள், மாணவ-மாணவியர்கள், தாய்மார்கள் உற்சாகத்தோடும் அருகில் நின்று கொண்டும் என்னை வரவேற்றார்கள்.


அதனை பார்க்கும்போது பொதுமக்கள் ஐந்தாம் முறையாக இந்த ஆட்சி தமிழகத்தில் உருவாக காரணமாக இருந்ததையும், அதனை உணரக்கூடிய வாய்ப்பையும் பெற்றேன்.

அது ஐந்தாம் முறையாக முதல்வர் பொறுப்பேற்றிற்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள் மீது கொண்டுள்ள அசைக்க முடியாக நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

இங்கு கூடியிருக்கும் மக்கள் வெள்ளத்தை பார்க்கும் போது இது அரசு விழாவா, கட்சி மாநாடா என்கின்ற அளவிற்கு எனக்கு சந்தேகம் வருகிறது. பொதுவாக அரசு விழாக்களில் அரசு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காகத் தான் மக்கள் வருவார்கள். ஆனால், இங்கு கூடியிருக்கின்ற பொதுமக்களை பார்க்கும்போது இந்த ஆட்சியின் மீதும், தமிழக முதல்வர் கலைஞர் மீதும் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது.


இங்கு பேசிய நண்பர் ச.தங்கவேலு எம்.பி. , நகர்மன்ற உறுப்பினராக, துணைத்தலைவராக, தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக இருந்தவர்.


கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும் கூட வெற்றியையும், தோல்வியையும் சமமாக கருதி மக்கள் பணியாற்றி கொண்டிருப்பதால் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சிறப்பாக மீண்டும் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட வேண்டும் என்பதற்காக மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பை கொடுத்துள்ளார்கள்.


தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிரதிநிதியாக விளங்கிட வேண்டும், அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கிட வேண்டும், அதனால் அச்சமுதாயம் பயன்பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.


மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழக அரசு குடிநீர் திட்டப்பணிகளுக்காக பல ஆயிரம் கோடி ரூபாயினை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.


இராமநாதபுரம், ஒக்கேனக்கல், விருதுநகர் ஆகிய கூட்டுக்குடிநீர் திட்டம், சென்னையில் கடல்நிரை குடிநீராக மாற்றும் திட்டம் போன்ற குடிநீர்த்திட்டப் பணிகள் மாண்புமிகு தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் ஆட்சியில் தான் நிறைவேற்றப்பட்டு வருகிறது.


தந்தை பெரியார் கண்ட கனவு, இந்த நாட்டிலுள்ள அனைவரும் சமுதாய நல்லிணக்கத்தோடும், நட்புறவோடும் வாழவேண்டும் என்பதற்காக மாண்புமிகு தலைவர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியார் நினைவு சமத்துபுரத்தினை தமிழ்நாட்டில் உருவாக்கி அவர்களது கனவை நனவாக்கி வருகிறார்கள். குழந்தை பிறக்கின்றபோதும், வளர்கின்றபோதும் ஆண், பெண் என்றுதான் பிரிக்கின்றோம். ஆனால், சமுதாயத்தில் அதை சாதி அடிப்படையில் பிரிக்கின்றார்கள்.


தனித்த குணமுடைய அத்திமரத்தில் எந்த பகுதியில் அத்திக்காய் காய்த்தாலும் அதனை அத்திக்காய் என்றுதான் சொல்கின்றோம்.

வேறு பெயரிட்டு அழைப்பதில்லை. அதுபோல மனிதன் எங்கு பிறந்தாலும், எந்த இனத்தில் பிறந்தாலும் அவன் மனிதன்தான். அதையும் தாண்டி நாம் அனைவரும் தமிழன் என்ற உணர்வோடும், ஒற்றுமையோடும் வாழவேண்டும். அதற்காக 1996ம் ஆண்டு முதல்வர் பொறுப்பேற்ற மாண்புமிகு தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள் 148 தந்தை பெரியார் நினைவு சமத்துபுரத்தினை உருவாக்கினார்கள்.

அடுத்து வந்த ஆட்சியில் அத்திட்டம் நிறுத்தப்பட்டதோடு எவ்வித பராமரிப்புமின்றி இருந்தது. அதன் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் அவர்கள் சமத்துபுரங்களை பராமரிப்பதற்காக ரூ.14.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த 95 வயதை நினைவுகூறும் வகையில் தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகத்தில் மேலும் 95 சமத்துவபுரங்களை உருவாக்கி வருகிறார்கள். அதனடிப்படையில் கடந்த ஆண்டு வரை 59 சமத்துவபுரங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் 36 சமத்துவபுரங்கள் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. வேறுஎந்த மாவட்டத்திலும் இல்லாத அளவிற்கு திருநெல்வேலி மாவட்டத்தில் ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட பாப்பாக்குடியிலும், கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட ஊர்மேலழகியான் என்ற கிராமத்திலும் இரண்டு சமத்துபுரங்கள் கட்டப்படவுள்ளது இது திருநெல்வேலி மாவட்டத்திற்கு கிடைத்த பெருமையாகும். சமத்துவபுரத்தில் வாழ்க்கையை தொடங்கும் நீங்கள் ஒற்றுமையுடனும், சமூக நல்லிணக்கத்துடனும், சமத்துவத்துடனும் வாழவேண்டும்.


இந்த விழாவின் மூலம் இப்பகுதிக்கு ரூ.18.53 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள், திட்டப்பணிகள் நிறைவேறியுள்ளது. தலைவர் கலைஞர் அவர்களால் 1989ம் ஆண்டு மூவலூர் இராமமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் கொண்டு வரப்பட்டு ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது.

அடுத்து வந்த ஆட்சிக் காலத்தில் அது நிறுத்தப்பட்டது. 1996ம் ஆண்டு தமிழகத்தில் முதல்வர் பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் அவர்கள் ரூ.10 ஆயிரமாக உயர்த்தினார். ஐந்தாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் ரூ.15 ஆயிரமாக உயர்த்தி தற்போது அதனை ரூ.25 ஆயிரமாக வழங்கி வருகிறார்கள்.


ஏழை,எளிய மக்கள் உயர் சிகிச்சை பெற்றிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டம் கடந்த ஆண்டு தலைவர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்டு இதுவரை 1.53 கோடி மக்களுக்கு ரூ.415.66 கோடி செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் தற்போதுதான் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவில் அந்தந்த நிறுவனங்கள்தான் அவர்களுக்கு வைப்புத்தொகையினை கட்ட வேண்டும். ஆனால், தமிழகத்தில் வைப்புத் தொகையினை தமிழக அரசே செலுத்தி வருகிறது.


மேலும் 108 அவசர கால ஊர்தி சேவை 354 ஊர்திகளுடன் தொடங்கப்பட்டு தற்போது அது உயர்ந்து 548 ஊர்திகளுடன் செயல்பட்டு வருகிறது.


இதுவரை 5 லட்சம் பேர் பயனடைந்துள்ளதோடு, 24 ஆயிரத்து 171 உயிர்கள் காக்கப்பட்டுள்ளது. 24 ஆயிரத்து 975 பேர் ஆபத்தான நிலையிலிருந்து காப்பற்றபட்டுள்ளனர். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உருவாக்கப்பட்டு, தமிழகத்திலுள்ள 12 ஆயிரத்து 618 கிராமங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிப்படை பணிகள், வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.66.50 கோடி செலவில் 4 ஆயிரத்து 18 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. நடப்பாண்டில் எஞ்சியுள்ள 98 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் விரைவில் நடைபெறவுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 36 பேரூராட்சிகளில் இதுவரை 27 பேரூராட்சிகளுக்கு அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் தலா ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 9 பேரூராட்சி பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் முடிவடையும்.


பொதுவாக பேரூராட்சி நிர்வாகங்களுக்கு இதுவரை எந்த ஆட்சியும் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ததில்லை. இதுபோன்ற திட்டங்கள் தமிழகத்தை தவிர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

மேலும் கலைஞர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் ரூ.1800 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டு 6 ஆண்டுகளில் 21 லட்சம் குடிசை வீடுகள் கான்கீரிட் வீடுகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் முதற்கட்டமாக 3 லட்சம் வீடுகள் கட்டப்படவுள்ளன என மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment