கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 23, 2010

புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்ப்பதா? - ஜெயலலிதா, ராமதாசுக்கு முதல்வர் கண்டனம்


முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
ஸ்ரீபெரும்புதூர் கிரீன் பீல்டு விமான நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாசும், புதிதாக விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டுமென்றும், அதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்.
வளர்ந்துவரும் தொழில், பொருளாதார முன்னேற்றங்களின் காரணமாக தற்போதைய சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்துகளில் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு, முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களை விரிவுபடுத்திடவும், புதிதாக சர்வதேச விமான நிலையங்களை அமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி, புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை விமான நிலையங்களை மேம்படுத்துவதற்காக புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. கர்நாடகா, ஆந்திராவில் ஏற்கனவே கிரீன் பீல்டு விமான நிலையங்களை அமைத்து தமிழகத்தை முந்தி விட்டார்கள். ஆனால், சென்னை விமான நிலையம் விரிவுபடுத்தப்படும் பணிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் இவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.
கிரீன் பீல்டு விமான நிலையம் தொடர்பாக, 22.5.2007ல் தலைமைச் செயலகத்தில், என் தலைமையில், சட்டப் பேரவைக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்தான் சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெறும்போதே புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் வட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 4821 ஏக்கர் பரப்பளவுள்ள நிலப்பகுதியில் மேற்கொள்வதென்றும், புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகளையும் இந்திய வானூர்தி ஆணையமே ஏற்று நடத்திட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. அரசு மட்டும் தன்னிச்சையாக எந்த முடிவினையும் எடுத்து விடவில்லை. ஒரு நாடோ, நகரமோ விரிவடைய வேண்டுமென்றால் விமான நிலைய விரிவாக்கம் என்பது அவசியமான ஒன்று.
மற்ற மாநகரங்களில் எல்லாம் விமான நிலைய விரிவாக்கம் நடைபெற்று, தமிழகத்திலே மட்டும் செய்யப்படவில்லை என்றால் அப்போதும் இதே எதிர்க் கட்சிகள் ஆட்சியாளர்கள் மீது குறை கூறி போராட்டம் நடத்த முற்படுவார்களா? மாட்டார்களா? எப்படியாவது ஆட்சியின் செயல்பாடுகளுக்கு அர்த்தம் கற்பிக்க வேண்டும், அதனை எதிர்க்க வேண்டுமென்ற எண்ணத்தோடு செயல்படுகிறார்களே தவிர வேறொன்றும் அல்ல.
அதிலும் தற்போது நிலத்தை ஆர்ஜிதம் செய்ய எந்த இடமும் உறுதி செய்யப்படவில்லை. தற்போது மண் பரிசோதனை என்ற அளவில்தான் நடைபெறுகிறது. முதலில் மண் பரிசோதனைக்காக அதிக இடங்கள் தெரிவு செய்யப்பட்டு, அதன் பின்னர் தேவையான இடத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். அதற்குள்ளாகவே ஆர்ப்பாட்டம் என்று இவர்கள் ஆரம்பித்து விட்டால், மத்திய அரசு இந்தத் திட்டத்தையே கைவிட முன்வந்தால் அதனால் இழப்பு நமது மாநில அரசுக்கும் மக்களுக்கும்தான். மத்திய அரசுக்கு ஒன்றும் பாதகம் இல்லை.
அசூயை எண்ணத்தோடு, தி.மு.க. அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து விடக் கூடாது என்ற பொறாமை குணத்தோடு, நல்ல திட்டங்களுக்கெல்லாம் யார் எதிர்ப்பாகச் செயல்படுகிறார்கள் என்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பா.ம.க. நிறுவனர் விமான நிலையம் அமைய வேண்டுமென்பதில் கருத்து வேறுபாடு இல்லை, ஆனால் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென்கிறார். பல இடங்களைப் பார்வையிட்டு, அங்கெல்லாம் விமான நிலையத்தை அமைத்தால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதையெல்லாம் கணக்கிட்டுத்தான், இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்களே தவிர, ஏனோதானோ என்று முடிவெடுத்து விடவில்லை.
புதிய விமான நிலையத்தை அமைக்கவோ, பழைய விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யவோ, பல மாநகரங்களோடு போட்டியிட்டு மத்திய அரசிடம் அணுகி பேச்சுவார்த்தை நடத்தித்தான் பெற வேண்டியிருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட திட்டங்களுக்கு குந்தகம் விளைவிப்போர் யார் என்பதையும் நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். குடியிருக்கிற மக்களையோ விளைநிலங்களையோ வேண்டுமென்றே பறிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. யாருக்கும் எந்தக் குந்தகமும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தோடு, தவிர்க்க முடியாத நிலையில் ஒரு சிலருடைய இடங்களை எடுக்க வேண்டியிருந்தால், தகுந்த இழப்பீடு கொடுக்க வேண்டுமென்பதில் அரசு அக்கறையோடு உள்ளது.
கிரீன்பீல்டு விமான நிலையத்திற்கு ஏறத்தாழ 4200 ஏக்கர் பரப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 64 இடங்களில் மண் பரிசோதனைகள் நடைபெற்றுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் திருமங்கலம், மொளச்சூர், சோகண்டி, மாம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், கிளாய், சிறுகிளாய், வடமங்கலம், பாடிச்சேரி ஆகிய பகுதிகளிலும், திருவள்ளூர் தாலுகாவில் கொட்டையூர், வயலூர், திருப்பந்தியூர் ஆகிய பகுதிகளிலும் இப்பணிகள் முற்றிலும் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சாத்தியக் கூறுகள் குறித்து பரிசீலிப்பதற்காகவே நடைபெறுகின்றன.
விமான நிலையத்தை அமைப்பதற்காக நில எடுப்பு பணிகள் எதுவும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. மேலும் 21.7.2010ல் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மிகவும் குறைந்த அளவில், தேவைக்கு மிகாமல் ஆர்ஜிதம் செய்ய வேண்டும் என இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மண் மாதிரிகள் எடுக்கும் பணியை நிலங்களை கையகப்படுத்தும் முயற்சி என்று யாரோ சிலர் திரித்து கூறியதன் விளைவாக அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள், 12.08.2010 காலை சுமார் 10.30 மணியளவில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் கோ.அரி தலைமையில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
காலை 11.15 மணி வரை இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பேசிவிட்டு சென்றுவிட்டனர். இதனைத் தொடர்ந்து 20 லாரிகளில் வருகை தந்த வயலூர், வயலூர் அகரம், உச்சிமேடு, திருமணிக்குப்பம், கொட்டையூர் மற்றும் திருப்பந்தியூர் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 1000 பேர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவிலுள்ள திருவள்ளூர் திருத்தணி நெடுஞ்சாலையில் காமராஜ் சிலை அருகே வந்து லாரிகளை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஊர்வலமாக செல்ல முயன்றுள்ளனர். காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தடுத்து நிறுத்தியபோது, அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றுள்ளதாகவும், போக்குவரத்து பாதிப்பு நேரிட்டதால், காவல்துறையினர் மறியிலில் முன்வரிசையிலிருந்த 50 நபர்களை அப்புறப்படுத்தியதாகவும் திருவள்ளூர் வருவாய் கோட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் சுமார் 1.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மேற்படி கிராம மக்கள் கூட்டமாக வருகை தந்து, கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் காவல் துறையினர் தங்களை தாக்கியதாகவும் அவ்வாறு தாக்கிய காவல் துறையினர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், வாய்மொழியாக பெண்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தெரிவித்துக் கொண்டனர். அவர்களது கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கிராம மக்கள் அமைதியாக சுமார் 1.45 மணியளவில் கலைந்து சென்றுள்ளனர்.
இதையெல்லாம் மறைத்து விட்டு, புதிய விமான நிலையமே தேவையில்லை, விரிவாக்கம் தேவையில்லை என்று தேவையற்ற ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவார்களானால், அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதை தமிழ்நாட்டு மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment