![](http://4.bp.blogspot.com/-aX6a0llny5M/TcE_b8395RI/AAAAAAAAD3w/vKh1BUBPbYc/s400/kalaigar-bhalachandar-3.jpg)
![](http://3.bp.blogspot.com/-r3iKISorcQk/TcE_Yift0PI/AAAAAAAAD3o/JEaqznXMzt4/s400/kalaigar-bhalachandar-2.jpg)
![](http://2.bp.blogspot.com/-ww4exHZtHHg/TcE_Qof4OEI/AAAAAAAAD3g/tmqOBn7PcIU/s400/kalaigar-bhalachandar-1.jpg)
தமிழ்த் திரைப்பட உலகில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியவர் பாலச்சந்தர் - கலைஞர் :
தமிழ்த் திரைப்பட உலகில் புதிய சிந்தனையைப் பாய்ச்சி, சமூகப் பிரக்ஞையை உருவாக்கி, திருப்புமுனையை ஏற்படுத்தியவர் பாலச்சந்தர் என, திமுக தலைவரும், முதல் அமைச்சருமான கலைஞர் கூறியுள்ளார்.
இயக்குநர் கே.பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்திருப்பதையொட்டி கலைஞர் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். முதல் அமைச்சர் கலைஞர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் தொடர்ந்து ஒளிவீசி வருபவரும், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கித் தயாரித்தவரும், பல படங்களுக்கு ஏற்கனவே தேசிய விருதுகளும் மத்திய அரசின் ‘‘பத்மஸ்ரீ’’ விருதும், தமிழக அரசின் ‘‘கலைமாமணி’’ விருதும் பெற்றவரும், தமிழ்த் திரையுலகில் பழுத்த அனுபவமும், ஏகோபித்த புகழும் கொண்டவரும், நீண்டநெடுங்காலமாக எனக்கு நெருங்கிய நண்பராகத் திகழ்பவருமான ‘‘இயக்குநர் சிகரம்’’ கே.பாலசந்தர் அவர்களுக்கு; திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் தனது சீரிய பங்கை வழங்கியமைக்காக; மத்திய அரசு 2010ஆம் ஆண்டுக்கான ‘‘தாதா சாகேப் பால்கே விருது’’ வழங்கி அறிவித்திருப்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
‘‘தாதா சாகேப் பால்கே விருது’’ பெறும் முதல் தமிழ்த் திரைப்பட இயக்குநர் பாலசந்தர் என்பது கூடுதல் சிறப்பாகும். அருமை நண்பர் கே.பாலசந்தர் அவர்கள் தமிழ்த் திரைப்பட உலகில் புதிய சிந்தனையைப் பாய்ச்சி, சமூகப் பிரக்ஞையை உருவாக்கி, திருப்புமுனையை ஏற்படுத்தியவர். தமிழ்த் திரைப்படப் பரிணாமத்தில் அவர் ஒரு முக்கியமான மைல்கல் என்பதை யாராலும் மறுத்திட இயலாது.
கே.பாலசந்தர் அவர்களுக்கு இந்த விருதின் மூலம் அகில இந்திய அங்கீகாரமும், பாராட்டும் கிடைத்திருப்பது கண்டு எனது உள்ளம் பேருவகை கொள்கிறது. நண்பர் கே.பாலசந்தர் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும், என் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கலைஞர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment