கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, May 8, 2011

ஜனநாயகத்தை மேலும் வளப்படுத்த ஊடகங்கள் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும் : முதல்வர் கருணாநிதி அறிக்கை


ஜனநாயகத்தை மேலும் வளர்க்க, வளப்படுத்த, ஊடகங்கள், ஏடுகள், கடமை, பொறுப்பு உணர்ந்து நெறி தவறாமல் செயல்பட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து 07.05.2011 அன்று முதல்வர் கருணாநிதி வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை:
மம்தாவுக்கு வால் பிடிக்கும் ஊடகங்கள் என்று தலைப்பிட்டு கம்யூனிஸ்ட் கட்சி நாளேட்டில் வெளிவந்த தலையங்கத்தைப் பார்த்தீர்களா?
பார்த்தேன். பார்த்தவுடன் எனது நினைவுக்கு வந்ததெல்லாம், தனக்கு வந்தால்தான் தெரியும், தலைவலியும், காய்ச்சலும் என்ற பழமொழிதான். அந்தத் தலையங்கத்தில், மேற்கு வங்கத்திலுள்ள பெரும்பாலான ஊடகங்கள், இடது முன்னணிக்கு எதிராக நாள்தோறும் விஷம் கக்கி வருகின்றன. பெருமுதலாளிகளின் ஊதுகுழலாகத் திகழும் இந்த ஊடகங்கள், செய்தி என்ற போர்வையில், நாள்தோறும் மக்களைக் குழப்பும் வகையிலும், திரித்தும், கலகம் விளைவிக்கும் வகையிலும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன என்று ஊடகங்களைக் கடுமையாக சாடியிருக்கிறார்கள்.
எப்போதுமே கம்யூனிஸ்ட்டுகள், தங்கள் கட்சி ஆளும் மாநிலங்களுக்கு ஒரு அளவுகோலையும், மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு வேறொரு அளவுகோலையும் கடைப்பிடிப்பார்கள். திமுக மீது ஒரு துரும்பு விழுந்தால்கூட அதை தூணாக்கி, மக்கள் மத்தியில் திமுகவுக்கும் தலைமைக்கும், கெட்ட பெயர் உண்டாக்கும் முயற்சியில் ஒரு சில ஏடுகளும், ஊடகங்களும் ஈடுபட்டு வருவதை நாம் கண்டிக்கும்போது, அதனைக் கண்டும் காணாமலும் சில சமயங்களில் நம் மீதே பாய்ந்து பிராண்டிக் கொண்டும் இருப்பவர்கள் தான் இங்கிருக்கும் கம்யூனிஸ்ட்டுகள். நம்மை யார் தாக்கி எழுதினாலும், அது எவ்வளவு கடைந்தெடுத்த பொய்யாக இருந்தாலும், அது பத்திரிகா தர்மத்திற்கு முழுக்க முழுக்க எதிரானதாக இருந்தாலும், கம்யூனிஸ்ட்டுகளுக்கு வெல்லப் பாகாய் இனிக்கும் ஆனால், அவர்களை யாராவது தாக்கி எழுதினால், அது வேம்பாய்க் கசக்கும்.
சில ஏடுகளும், ஊடகங்களும், நடுநிலை என்ற போர்வைக்குள் புகுந்து கொண்டு, செய்யும் சேட்டை விமர்சனங்களும், எழுதும் கட்டுரைகளும், கற்பனையாகவும் செயற்கையாகவும் உற்பத்தி செய்து பரப்பும் விஷமச் செய்திகளும் தாங்கொணாதவை. சில ஏடுகளும், ஊடகங்களும் புலன் விசாரணை என்ற பெயரில், வெளியிடும் செய்திகள் அக்கிரமமானவை. அவை பிராசிகியூட்டர் வேடம் அணிந்து கொண்டு, குற்றப் பத்திரிக்கை வாசிப்பதுடன் நீதிபதி வேடம் போட்டுக் கொண்டு, தீர்ப்பு எழுதுகின்றன. அவற்றால் படிப்பவர்களின் ரசனை பெரும் பாதிப்புக்குள்ளாகி, பண்பாடும், நாகரிகமும் படுபாதாளம் நோக்கிச் செல்வதை ஜனநாயக மரபுகள் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளும் என்பதை நடுநிலையாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நமது நாட்டை அனைத்து முனைகளிலும் கைகொடுத்துத் தூக்கி விடுவதற்கும், மக்களைச் சரியான திசையில் வழிகாட்டுவதற்கும், வளர்ந்துவரும் ஜனநாயகத்தை மேலும் வளர்த்தெடுத்து வளப்படுத்துவதற்கும் ஏடுகளும், ஊடகங்களும் தமது கடமையினையும், பொறுப்பினையும் உணர்ந்து நெறி தவறாமல் நடக்க வேண்டும். அதை தவிர்த்து, கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரித்து, ஜனநாயகத்தை காட்டுக்கு அனுப்புவதற்கு, அவை கருவிகளாக பயன்பட்டுவிடக் கூடாது.
மத்திய அரசு இயற்றிய வன உரிமைகள் சட்டத்தின்படி, பழங்குடியினருக்கு திமுக அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று அடிக்கடி கம்யூனிஸ்ட் ஏடுகள் சுட்டிக்காட்டுகின்றனவே?
அப்படி அவர்கள் சொல்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை. பழங்குடியினர் மற்றும் மரபு வழியாக வனங்களில் குடியிருப்போர் (வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டம், 2006 என்பது 29&12&2006 முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது. பல காலமாக வனங்களில் வாழ்ந்து வருவோரது உரிமைகள் அங்கீகரிக்கப்படவில்லை என்பதால் இந்தச் சட்டத்தின்படி, மாநில அரசுகள், வன நில உரிமைகளை அங்கீகரித்து, வரையறை செய்து தீர்வு காண வேண்டும்.
தமிழக அரசு, மத்திய அரசின் இந்தச் சட்டத்தைச் செயல்படுத்திட, தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலான கண்காணிப்புக் குழு, மாவட்ட அளவிலான குழு, உட்கோட் டக் குழு என்று மூன்று நிலைகளில் குழுக்களை அமைத்துள்ளது.
மத்திய அரசின் இந்தச் சட்டத்தின்படி, 13&12& 2005க்கு முன்பிருந்தே வன நிலத்தை அனுபவித்துவரும் பழங்குடியினர் வனங்களில் மூன்று தலைமுறையாக, அதாவது 75 ஆண்டுகளுக்கு குடியிருந்து அனுபவித்து வருவோர் நில உரிமைப் பட்டா பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் ஆகிறார்கள்.
மொத்தம் 21781 கோரிக்கைகள் வரப்பெற்றன. இவை அனைத்தும் கிராம சபை, உட்கோட்டக் குழு, மாவட்ட அளவிலான குழு ஆகியவற்றால் பரிசீலனை செய்யப்பட்டு 3259 உரிமைப் பட்டாக்கள் வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளன.
பட்டா வழங்குவதற்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினைப் பெற வேண்டுமென்று உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அந்த உத்தரவினைப் பெறுவதற்கும், ஏற்கனவே தடையாணை வழங்கியுள்ளதால், அந்தத் தடையாணையை விலக்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை முடிவுக்கு வந்ததும், வன உரிமைப் பட்டாக்கள் வழங்கப்படும். தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், மாநில கண்காணிப்புக் குழுவினை முறையாக நடத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்தி வருகிறார். எனவே, வன உரிமைகள் சட்டத்தைக் அரசு கண்டு கொள்ளவில்லை என்பது தவறான கூற்றாகும்.
மக்கள் தொகை வேகமாக வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறதே?
உலகத்தின் மக்கள் தொகை அடுத்த நூற்றாண்டில் 1000 கோடியைத் தாண்டும் என்று ஐ.நா அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நூற்றாண்டின் மத்தியில் உலக மக்கள் தொகை 930 கோடியை எட்டும் என்றும் 2100ம் ஆண்டு 1000 கோடியைத் தாண்டும் என்றும் கணித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மக்கள் தொகை இன்னும் 50 ஆண்டுகளில், அதாவது 2060ம் ஆண்டில், 170 கோடியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் 2030ம் ஆண்டில் தண்ணீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும். பெரும்பாலான தண்ணீர், உணவு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுவதால், தண்ணீர், உணவுப் பற்றாக்குறையிலும் எதிரொலிக்கும். அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய மற்றும் எதிர்பாராத அளவிற்கு உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்படும் என்று சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
மக்கள் தொகை குறித்த ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அறிக்கையையும் தண்ணீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை குறித்து, சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, பெரும் கவலை ஏற்படுகிறது. இந்த கணிப்புகளையெல்லாம் மத்திய திட்டக்குழு முன்னெச்சரிக்கையாகக் கருத்தில் எடுத்துக் கொண்டு, உரிய நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொண்டு, வருமுன் காப்பதே அறிவு என்பதை நிரூபித்துக் காட்டும் என்று நம்புகிறேன்.
ஒவ்வொரு மனிதனும் பிறக்கும்போது, உண்பதற்கு ஒரு வாயோடு மட்டும் பிறக்கவில்லை. உழைப்பதற்கு இரண்டு கரங்களோடும் பிறக்கிறான் என்ற வாதமும் வெறுங்கை என்பது மூடத்தனம்; விரல்கள் பத்தும் மூலதனம் என்ற வாதமும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையே. மக்கள் தொகை பெருகப்பெருக, உழைப்பதற்கான கரங்களும் பெருகுகின்றன. உழைக்கும் கரங்கள் அனைத்தும், உற்பத்தியைப் பெருக்க வேண்டும். குறிப்பாக உணவு உற்பத்தியையும், அடிப்படைத் தேவைகளுக்கான உற்பத்தியையும் பெருக்க வேண்டும். அப்படிப் பெருக்குவதற்குத் தேவையான அளவு, வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
இன்று (7&5&2011) ரவீந்திரநாத் தாகூர் 150ம் பிறந்தநாளை மத்திய அரசு கொண்டாடுவது குறித்து?
தமிழ்க் கீதாஞ்சலி என்னும் நூலுக்கு, 29&11&1971ல் நான் வழங்கிய அணிந்துரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன். ‘வங்கம் தந்த கவியரசர் தாகூர், கிழக்குக்கும் மேற்குக்கும் ஒரு பெரும் இணைப்புப் பாலம் உருவாக்கிய கவிதை மன்னர். எல்லோரும் காணும் உலகில், எல்லோராலும் காண முடியாத, காணாத பல்வேறு நுட்பங்களையும், உண்மைகளையும் கண்டுணர்த்திய கவிதைச் செல்வர். அவர் இந்து, முஸ்லிம் ஒற்றுமையில் இறுதிவரை உறுதியாக இருந்தவர்.
கீதாஞ்சலி எனும் கவிதை நூலை முதலில் தனது தாய்மொழியான வங்காள மொழியில் இயற்றி தாய்மொழியின் மீது தான் கொண்டிருந்த பற்றையும், மதிப்பையும் உலகறியச் செய்து, பின்னர் அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, நோபல் பரிசு பெற்றவர். தாகூர், எனது இதயங்கவர்ந்த கவிஞர்களுள் ஒருவர்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment