கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, May 22, 2011

இறுதி போரில் வெல்வது உறுதி - திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை


திமுக தலைவர் கருணாநிதி 21.05.2011 அன்று இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தி.மு.க. பெரும் தோல்வியைச் சந்தித்து ஆட்சியை இழந்திருக்கும் கால கட்டம் இது. அந்த இழப்புக்கு எது காரணம்? இணைந்த கட்சிகளுக்கு வழங்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையா? அல்லது அவர்கள் வலியுறுத்தி வாங்கிக் கொண்ட தொகுதிகளின் கணக்கா? தமிழ் நாட்டிற்கென்றே தனியான ஜபர்தஸ்துகளை ஜனநாயக விரோதச் செயல்களை சாட்டைகளாகக் கொண்டு சர்வாதிகார பாட்டை வகுத்துக் கொண்ட தேர்தல் கமிஷன் எனும் பிரம்ம ராஷச பூதமா? என்ற கேள்விகளுக்கெல்லாம் நான் போக விரும்பவில்லை.
ஆனால் இந்தியாவிலேயே அல்லது தமிழ்நாட்டிலேயே அதிகாரச் செல்வாக்கைப் பெருக்கி ஆயிரம் கோடி, பத்தாயிரம் கோடி, லட்சம் கோடி சம்பாதித்து மூட்டைகளாகக் கட்டி வைத்திருக்கிற குடும்பம், கருணாநிதியின் குடும்பம் என்று தேர்தல் நேரத்தில் பிரசாரம் செய்தவர்கள், மழை விட்டும் தூறல் விடவில்லை என்பதைப்போல இப்போதும்கூட அந்தப் பிரசாரத்தை ஏடுகள் வாயிலாக ஏனைய ஊடகங்களின் வாயிலாக கூறிக்கொண்டிருக்கிறார்களே, அவற்றை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக சிலவற்றைத் தொகுத்துச் சொல்ல விரும்புகிறேன்.
என் எளிய வாழ்க்கையை நான் நடத்திட பொருளீட்டியதே இல்லையென்று புளுகிடும் துணிவு எனக்கில்லை பொருளீட்டியது உண்டு. அந்தப் பொருளில் பெரும் பகுதியை வாழ்வின் இருளில் இருந்தோர்க்கு வழங்கியது உண்டு.
பராசக்தி, மனோகரா, மலைக்கள்ளன், இருவர் உள்ளம், மருதநாட்டு இளவரசி, திரும்பிப் பார், பணம், நீதிக்குத் தண்டனை, இளைஞன் என்றெல்லாம் தொடர்ந்து தற்போது பொன்னர் சங்கர் வரையில் 76 படங்களுக்கு கதை, வசனம் எழுதியிருக்கிறேன். சில படங்களுக்கு பாடல்களும் எழுதியிருக்கிறேன்.
பிரசாத் இயக்கத்தில் உருவான தாயில்லா பிள்ளை மற்றும் இருவர் உள்ளம் படங்கள் நூறு நாள் ஓடினால் மேலும் பத்தாயிரம் ரூபாய் தருவதாக பிரசாத் வாக்களித்து, அவ்வாறே நூறு நாள் அந்தப் படம் ஓடியதற்காக அவர் தந்த பத்தாயிரம் ரூபாயைக் கொண்டு என்னைப் பெற்றெடுத்த திருக்குவளையில் முத்துவேலர், அஞ்சுகம் தாய் சேய் நல விடுதி கட்டி அந்நாள் முதல்வர் பக்தவத்சலத்தை கொண்டு திறப்பு விழா நடத்தினேன்.
வெள்ள நிவாரண நிதி, புயல் நிவாரண நிதி, கைத்தறியாளர் கண்ணீர் துடைக்க நெசவாளர் நல்வாழ்வுக்காக நிதி, இப்படி எத்தனையோ நிதிகள் வழங்கியும் வசூலித்து தந்தும் தொண்டாற்றியவன் தான் நான்.
2004&2005ம் ஆண்டில் மண்ணின் மைந்தன் திரைப்படத்திற்காக 11 லட்சம் ரூபாயும், ண்ணம்மா திரைப்படத்திற்காக 10 லட்சம் ரூபாயும் கிடைத்ததை சுனாமி நிவாரணத் தொகையாக அப்போதிருந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம், தம்பி மு.க.ஸ்டாலின் மூலமாக நேரடியாகக் கொடுக்கச் செய்தேன்.
9&7&2008ல் உளியின் ஓசை திரைப்படத்திற்காக எனக்குத் தரப்பட்ட 25 லட்சம் ரூபாயில் ஏழு லட்சம் ரூபாய் வருமான வரி போக மீதத் தொகை 18 லட்ச ரூபாயை அன்று கலையுலகைச் சேர்ந்த நலிந்த கலைஞர்களுக்கு உதவி நிதியாக கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் நேரடியாக வழங்கினேன்.
17&9&2009ல் பெண் சிங்கம் திரைப்படத்திற்காக எனக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அந்தத் தொகையினை அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித் தொகையாக வழங்குவேன் என்று அறிவித்ததையொட்டி அப்படி வழங்கப்பட வேண்டிய தொகை 61 லட்சம் ரூபாய் என்று கூறியபோது என்னுடைய சொந்த கையிருப்பு நிதி 11 லட்சம் ரூபாயையும் சேர்த்து உதவி நிதியாக 29&10&2009 அன்று வழங்கினேன்.
27&4&2010 அன்று இளைஞன் திரைப்படத்துக்காக வருமானவரி போக 45 லட்சம் ரூபாய் எனக்கு வழங்கப்பட்டது. அந்தத் தொகையினை முதலமைச்சர் நிவாரண நிதியிலே சேர்த்து பிறகு மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வுக்காக அந்தத் தொகை உதவி நிதியாக வழங்கப்பட்டது.
பொன்னர் சங்கர் திரைப்படத்திற்காக 8&9&2009ல் 10 லட்சம் ரூபாயும் 6&6&2010ல் 12.5 லட்சம் ரூபாயும் எனக்கு வழங்கப்பட்டது. இந்தப் படத்திற்காகத் தரப்பட வேண்டிய 25 லட்சம் ரூபாயில் வரியாக 2.5 லட்சம் ரூபாய் போக எஞ்சியத் தொகை 22.5 லட்சம் ரூபாயாகும். இந்தத் தொகையிலிருந்து காவல்துறையிலே விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் பெற்ற வீரர்களுக்கு வழங்கச் செய்தேன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் தொல்.திருமாவளவன் வழங்கிய 50 ஆயிரம் ரூபாய் நிதியினை முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் சேர்த்துள்ளேன்.
கழகத்தை தோற்றுவித்த தலைவர்கள், தோன்றா துணைவர்களாக இருந்த தலைவர்கள், உயிரினும் மேலான உடன்பிறப்புகளாம் தொண்டர்கள் ஆகியோருக்கு குடும்ப நிதியாக நலவாழ்வு நிதியாக அள்ளித் தந்தது ஆயிரம் ஆயிரம். அவை இன்றைக்கும் என்னுடைய பெயரால் அமைந்துள்ள அறக் கட்டளைகளின் சார்பில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாள் நிகழ்ச்சிகளிலும், மாலைக்குப் பதிலாகவும், பொன்னாடைகளுக் குப் பதிலாகவும் வழங்கப்பட்ட நிதியினையும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலே சேர்த்திருக்கிறேன். ஈழத் தமிழர் நிவாரணத்திற்காக தமிழக அர சின் சார்பில் நிதி திரட்டப்பட்ட போது என்னுடைய சொந்தப் பொறுப்பில் 10 லட்சம் ரூபாயினை நன்கொடையாக வழங்கியிருக்கிறேன்.
சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் பங்குதாரராக இருந்த என் மனைவி தயாளு அம்மையார் அதிலிருந்து பிரிந்து வந்த வகையில் கிடைக்கப் பெற்ற 100 கோடி ரூபாயில் எனக்குக் கிடைத்த 10 கோடி ரூபாயில் ஐந்து கோடி ரூபாயினை பங்கீட்டுத் தொகையாக செலுத்தி, தி.மு.க.வின் சார்பில் கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை ஒன்று, நலிந்தவர்களுக்கு உதவி செய்வதற்காக தொடங்கப்பட்டது.
11&1&2007 அன்று நடைபெற்ற 30வது புத்தகக் கண்காட்சி விழாவில் நான் பேசும்போது இந்த 5 கோடி ரூபாயிலிருந்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்படும் என்று அறிவித்து அவ்வாறே அந்தச் சங்கத்துக்கு அந்தத் தொகை வழங்கப்பட்டது.
அந்தத் தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு அந்தச் சங்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் நல்ல புத்தகங்களை, சமுதாய சீர்திருத்த கருத்துகள் தாங்கிய புத்தகங்களை எழுதும் சிறந்த எழுத்தாளர்கள், வெளியிடும் பதிப்பாளர்கள் ஐந்து பேரை தேர்வு செய்து, தலா ஒரு லட்சம் பொற்கிழி வழங்கிடக் கூறியுள்ளேன். இந்த ஒரு கோடி ரூபாய் நிதியைக் கொண்டு கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் நிறுவப்பட்டு இதுவரை 17 அறிஞர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பொற்கிழிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
தி.மு.க. சார்புடைய கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்கு நான் கொடுத்ததில் எஞ்சிய நான்கு கோடி ரூபாய்க்கு மாதந்தோறும் கிடைக்கின்ற வட்டித் தொகையிலிருந்து தி.மு.க.வில் உள்ள நலிந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2005 நவம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை 2337 பேருக்கு மொத்தம் 2 கோடியே 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளன. இந்த உதவித் தொகை தற்போதும் ஒவ்வொரு மாதமும் தரப்பட்டு வருகிறது.
சன் தொலைக்காட்சியிலிருந்து எனக்கென்று கிடைத்த 10 கோடி ரூபாயில் கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்கு அளித்த 5 கோடி ரூபாய் போக எஞ்சிய 5 கோடி ரூபாய் வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. அந்த வைப்பு நிதிக்கு கிடைத்த வட்டித் தொகையிலிருந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக தமிழ்ச் செம்மொழி நிறுவனத்திற்கு 26&7&2008 அன்று வழங்கி அந்தத் தொகையிலிருந்து கல்வெட்டியல், தொன்மையியல், நாணயவியல் ஆகிய பிரிவுகளில் ஆராய்ச்சி செய்யும் சான்றோர்களுக்கு விருது வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறேன்.
கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் போது முதன் முறையாக இந்த விருது பின்லாந்து நாட்டு தமிழ் அறிஞர் அஸ்கோ பர்போலா அவர்களுக்கு பத்து லட்ச ரூபாய் பொற்கிழியாக நன்கொடையுடன் வழங்கப்பட்டது. இதற்கெல்லாம் மேலாக சென்னை கோபாலபுரத்தில் நான் தற்போது வாழ்ந்து வரும் என்னுடைய வீட்டைக் கூட ஏழையெளியோர்க்குப் பயன்ப டும் வகையில் ஒரு மருத்துவமனையாக மாற்றி அளிப்பேன் என்றும் அறிவித்து, அதற்கான முறையான பத்திரப் பதிவுகளும் செய்யப்பட்டுள்ளன.
சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் தயாளு அம்மாள் பங்குதாரராக இருந்து பிரிந்ததையொட்டி 18&10&2005 அன்று சன் தொலைக்காட்சி நிறுவனத்தால் தரப்பட்ட தொகை 100 கோடி ரூபாயில் 22.5 கோடி ரூபாய் வருமான வரியாக முறைப்படி செலுத்திய பின் எஞ்சிய தொகையான 77.5 கோடி ரூபாய் பகிர்ந்து கொள்ளப்பட்டபோது என் இளைய மகள் கனிமொழி தனக்குக் கிடைத்த 2 கோடி ரூபாயை பங்குத் தொகையாக செலுத்தி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பங்குதாராக இருக்கச் சொல்லி நான்தான் வலியுறுத்தினேன்.
கனிமொழி அதை விரும்பாவிட்டாலுங்கூட, அப்பா சொல்கிறாரே என்று அதற்கு ஒப்புதல் அளித்த ஒரு குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் லாபமோ, நட்டமோ அந்த இரண்டில் ஒன்றுக்கு பங்குதாரராக ஆகி விடுவது பொதுவான விஷயம். ஆனால் அந்த நிர்வாகத்தின் ஒவ்வொரு நாள் நடவடிக்கைக்கும் அனைத்துப் பங்குதாரரும் பொறுப்பாக ஆவதில்லை.
டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கனிமொழிக்காக வாதாடிய பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஒரு நிறுவனத்தில் நடைபெறுகிற வரவு, செலவு கொடுக்கல் வாங்கல் இவற்றில் எல்லாம் அந்த நிர்வாகத்தின் பங்குதாரர்கள் பொறுப்பேற்க வேண்டியவர்கள் என்று விதிமுறை இல்லை என்பதை தெளிவாகச் சுட்டிக் காட்டிய பிறகும் கூட; கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகத்தின் நிர்வாகி சரத் குமாரையும் என் மகள் கனிமொழியையும் ஜாமீனில் விட மறுத்து சிறைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள போதிலுங்கூட அத்துடன் நிம்மதி அடையாது, நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், நம் இரு வண்ணக்கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி புல் முளைத்த இடமாகப் போக வேண்டும் என்று அதுவும் தர்ப்பைப் புல் முளைத்த இடமாகப் போக வேண்டுமென்று குமரி முனையிலிருந்து இமயக் கொடுமுடி வரையிலே உள்ளவர்கள் தவம் கிடக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாமல் இல்லை.
இந்த உண்மைகள் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான் இதை எழுதியுள்ளேன். சுயபுராணம் இது என்றாலும் சுயமரியாதைப் புதினமாக இதைக் கருதி இந்த அறிக்கையின் தொடக்கத்திலிருந்து முடிவு வரையில் ஒவ்வொரு வரியாக படித்து சிந்தித்து புரிந்துக் கொண்டு செயல்படுத்தினால், தன்மானக் கழகமாம் தமிழர் நலம் தேடும் இந்தப் பாசறை அறப் போர்க் கணைகளை ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் வடிவில் தம்பி தங்கையர் உருவில் நடமாட விடுவார்கள் என்பது என் எண்ணம். அந்த அறப்போர் இறுதிப் போராகி வெல்வது திண்ணம்.
இவ் வாறு அறிக் கையில் கரு ணாநிதி கூறியுள் ளார்.

No comments:

Post a Comment