கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, May 4, 2011

2ஜி விவகாரம் : முதல்வர் கருணாநிதி ஜெயலலிதாவுக்கு பதில்


முதல்வர் கருணாநிதி 01.05.2011 அன்று எழுதியுள்ள கேள்வி&பதிலில் கூறியிருப்பதாவது:
2ஜி அலைக்கற்றை பிரச்னை சம்மந்தமாக கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து ஜெயலலிதா மனம்போன போக்கில் விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே?
“சாத்தான் வேதம் ஓதுகிறது” என்ற முதுமொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, ஜெயலலிதா அம்மையாருக்கு பெரிதும் பொருந்தும். எந்த பிரச்னையைப் பற்றி கருத்து தெரிவித்தாலும், தன்னை எல்லாவித சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டவர் என்பதைப் போலவும், தூய்மை, வாய்மை இவற்றின் உருவகம் என்பதைப் போலவும், அறநெறிகளின் இருப்பிடம் என்பதைப் போலவும் கற்பனை செய்துகொண்டு, பிறர் மீது சேறு வாரி இறைப்பதில் அந்த அம்மையார் மிகவும் கைதேர்ந்தவர் என்பதை தமிழக மக்கள் நன்கறிவர்.
கடந்த 27.04.2011 அன்று எனது தலைமையில் நடைபெற்ற கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை பற்றி, கடைந்தெடுத்த தனது தீய எண்ணத்தின் வெளிப்பாடாக அறிக்கை ஒன்றை ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்னை தொடர்பாக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் “பூதத்தை பூனைக்குட்டி விழுங்கி விட்டதாகக் கூறுவதுபோல அனுமானமாக பல கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி விட்டதாக இந்தியாவின் தலைமை கணக்காயர் தெரிவித்தது முதலாக, இந்த பிரச்னையில் அரசியல் சதுரங்கம் ஆடுவதற்கு ஓர் ஆதிக்க வட்டாரம் தொடர்ந்து முயற்சித்து வருவதை நாடறியும்” என்றும், “திமுக தலைமை மீது பழி சுமத்துவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பாக கருதி, தொடர்ந்து பல ஏடுகளும், ஊடகங்களும் செய்தி பரப்பி வருவதுடன், இதை ஓர் அரசியல் பிரச்னையாக்கி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியினரிடையே அவநம்பிக்கையை உருவாக்கிடவும், பிரச்னையை பெரிதுபடுத்தி, மாறுபாடுகளை வளர்த்து கூட்டணியை உடைக்கும் நோக்கத்துடனேயே செயல்பட்டு வருகின்றன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை திரித்தும் திசைதிருப்பும் வகையிலும் ஜெயலலிதா விமர்சனம் செய்துள்ளார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இழப்பு எவ்வளவு என்பதை அறுதியிட்டு உறுதியாக இதுவரை யாராலும் அளவிட்டு கூற இயலவில்லை. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என்று தனது அறிக்கையிலே சொன்ன தலைமைக் கணக்காயர், நாடாளுமன்ற பொது கணக்கு குழுவின் முன் விசாரணைக்காக ஆஜரானபோது, ஆதாரம் ஏதுமின்றி அனுமானத்தின் அடிப்படையிலேதான் இந்த இழப்பை சொல்லியிருப்பதாக உறுதிப்படுத்தினார். வெவ்வேறு கோணத்தில் இழப்பு ஏதேனும் ஏற்பட்டிருக்குமா என்று கணக்கிட்டு பார்த்ததாகவும், அதிலே ஒரு கோணத்தில், வெறும் 57 ஆயிரத்து 666 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே அரசுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரியவந்தது என்றும் கூறியிருக்கிறார். மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த பாஜகவை சேர்ந்த அருண் ஷோரி வெறும் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குத்தான் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று சொல்லியிருக்கிறார். புலன் விசாரணை செய்து, குற்ற பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ள சிபிஐ 22 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குதான் இழப்பு என்று குறிப்பிட்டிருக்கிறது. நாடாளுமன்ற பொது கணக்கு குழுவின் தலைவர் பாஜகவை சேர்ந்த முரளி மனோகர் ஜோஷி 1 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு என்று சொல்லியிருக்கிறார். இப்படி ஒவ்வொருவரும் தங்கள் அறிவுக்கும், கற்பனைக்கும் ஏற்ப இழப்பின் அளவை சொல்லியிருக்கிறார்கள்.
இப்படி ‘கருத்தியலான’ ஒன்றை வைத்து கொண்டு, ஊதி ஊதி பெரிதாக்கும் முயற்சியில் திமுக மீது தூசி விழுந்தாலும், அதை தூணாக்கும் நடவடிக்கையில் இன்றைக்கும் ஜெயலலிதாவை போலவே ஒருசில அரசியல்வாதிகளும், நாளேடுகளும், ஊடகங்களும் எத்தனிக்கின்றன என்பதற்கு நிரூபணங்கள் எதுவும் தேவையில்லை. ஒருசில நாளேடுகளையும், ஊடகங்களையும் தொடர்ந்து படித்தாலும், பார்த்தாலும் இதனை எளிதில் புரிந்து கொள்ளலாம். அவர்களது நோக்கமெல்லாம் எப்படியாவது இந்த பிரச்சினையைப் பயன்படுத்திக் கொண்டு, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுகவை தனிமைப்படுத்தி, அழித்துவிட வேண்டும் என்பது தான்.
நாளேடுகள் எப்படிப்பட்ட எல்லை வரைக்கும் சென்றுவிட்டன என்பதை உணர்த்திட, இன்றைய நாளேடு ஒன்றிலிருந்து உதாரணம் ஒன்றைக் காட்டட்டுமா? இன்றைய தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரையில், ‘‘பெரியதொரு குடும்பம் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்வதைப் போன்று கோபாலபுரம் கோட்டை தோற்றமளிக்கிறது’’ என்று எழுதியிருக்கிறார்கள்.
அவர்களது எண்ணம் எந்த அளவுக்கு கீழ்த்தரமானது, இழிவானது, விபரீதமானது என்பதை நான் விளக்கிடத் தேவையில்லை. இப்படிநாளேடுகளும், ஊடகங்களும் வேலிகளை தாண்டும்போது, அரசியல் சதுரங்கம்& ஆதிக்க வட்டாரம் என்று விமர்சிப்பதில் என்ன குறை சொல்ல முடியும்? மனசாட்சியைத் தொட்டுப் பார்த்தால், அப்படிப்பட்டவர்களது உள்நோக்கமும், நச்சு எண்ணமும் நன்றாகப் புரியுமே.
கலைஞர் தொலைக்காட்சி தொடங்குவதற்கு நிதி ஆதாரம் எங்கிருந்து வந்தது என்று ஜெயலலிதா கேட்டிருக்கிறார். சன் டிவியில் என் மனைவி தாயாளு அம்மாள் பெற்றிருந்த 20 சதவிகித உரிமையை முழுவதுமாக விட்டுக் கொடுத்ததன் மூலம் 100 கோடி ரூபாய் கிடைத்தது என்ற விவரங்களையெல்லாம் 2008ம் ஆண்டிலேயே நான் வெளியிட்டிருந்தேன். அதை என் குடும்பத்தாருக்குப் பிரித்துக் கொடுத்ததையும் விபரமாகக் குறிப்பிட்டிருந்தேன்.
ஜெயலலிதா தன்னை மிகப்பெரும் வழக்கறிஞராகக் கற்பனை செய்து கொண்டு, நிறைய கேள்விகளை கேட்டிருக்கிறார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அவைகளுக்கெல்லாம் இப்போது பதில் சொல்வது சட்டப்படி சரியாக இருக்காது. ஜெயலலிதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 1.7.1991 அன்று அவரிடமிருந்த சொத்துக்களின் மதிப்பு 2 கோடியே 1லட்சத்து 83ஆயிரத்து 957 ரூபாய். 5 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு, 30.4.1996ல் ஜெயலலிதாவின் சொத்துக்களின் மதிப்பு 66 கோடியே 44லட்சத்து 73ஆயிரம் ரூபாய். ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்த வழக்கு, 1997ம் ஆண்டிலிருந்து கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
அதைபோலவே, பிறந்தநாள் நன்கொடையாக வந்த 2 லட்சம் டாலர்களை, தனது சொந்த கணக்கில் வரவு வைத்துக் கொண்டதால், சிபிஐ தொடர்ந்த வழக்கு, 1997ம் ஆண்டிலிருந்து கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த வழக்குகளில் ஜெயலலிதா ஆஜராகாமல், ஒவ்வொரு தடவையும் ஏதாவது கற்பனையான காரணங்களின் அடிப்படையில் வாய்தாவுக்கு மேல் வாய்தா பெற்று, வழக்குகள் முடிவு பெற்று தீர்ப்புகள் வழங்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக கடந்த 14ஆண்டுகளாக இழுத்தடித்து வருகிறார். வழக்குகளைச் சட்டப்படி நீதிமன்றத்தில் சந்தித்து நிரபராதி என்று நிரூபித்து காட்டுவேன் என்று அடிக்கடி சண்டமாருதம் செய்யும் ஜெயலலிதா, இந்த வழக்குகளைத் தொடர்ந்து 14 ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருப்பதேன்? என்பதை நடுநிலையாளர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நிறைவுப் பகுதி முக்கியமானது. “இந்த வழக்கிலும் உண்மையை நிலைநாட்ட முடியும் என்று நம்புவதுடன், அதற்குரிய சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்வதே நம் கடமை என்று இந்த உயர்மட்டக் குழு தீர்மானித்து, அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதென முடிவெடுக்கிறது” என்று தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளது. கழகம், ஜெயலலிதாவைப் போல் அல்லாது, சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு, இந்த வழக்கு வளையத்திலிருந்தும் நிச்சயமாக வெளியே வரும்.
தமிழ்நாட்டில் மின்வெட்டை பற்றி தொடர்ந்து ஏடுகள் எழுதுகின்றனவே?
மின்வெட்டு என்பது தமிழ்நாட்டில் மாத்திரம் நிலவக்கூடிய ஒன்றல்ல. இந்தியாவில் பல மாநிலங்களிலும் இதே நிலைதான் இன்றளவும் நீடித்து வருகிறது. கூடுதலாக தேவைப்படும் மின்சாரத்தை அதிக செலவானாலும் வாங்குவதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் முயற்சி செய்தாலும்கூட, அந்த முயற்சியில் முழு அளவுக்கு வெற்றிபெற முடியாமல் இருப்பதற்கு காரணம், வேறு மாநிலங்களிலும் உபரி மின்சாரம் இல்லை என்பதுதான். நேற்று முன்தினம்கூட நாளேடுகளில் செய்தி ஒன்று வந்தது. கடந்த 5 ஆண்டுகளாக மிகச் சிறப்பான முறையில் நிர்வாகம் நடைபெற்று வருவதாக சொல்லப்படும் பீகார் மாநிலத்தில்கூட, மின் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பீகார் மாநிலத்தில் பன்னிரண்டுக்கும் மேலான நகரங்களில் மின் தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்து குழப்பமான நிலைமை ஏற்பட்டு வருகிறது. பல நாட்களாக மின்சார விநியோகமே இல்லை. எங்களால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று பொதுமக்கள் கூக்குரல் எழுப்பும் அளவுக்கு பீகாரில் மின்தட்டுப்பாடு.
தமிழகத்தைப் பொறுத்தவரை வருங்காலத்தில் மின்சார நிலைமை நிச்சயமாக சீராகும். தமிழகத்தில், 2011&2012ம் ஆண்டில் 14,224 மெகா வாட்டும், 2012&2013ம் ஆண்டில் 15,517 மெகா வாட்டும், 2013&2014ம் ஆண்டில் 16,927 மெகா வாட்டும் மின் தேவை இருக்குமென மத்திய மின்துறை ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இப்படி வளரும் மின் தேவையை கருத்திலே கொண்டு, மின் உற்பத்தி திறனை கூட்டுவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும் என்றும் அரசு உறுதியளித்துள்ளது.
மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயை அனுமதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறாரே?
மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் சம்மந்தமாக 2010ம் ஆண்டிலேயே என்னுடைய கருத்தை வெளியிட்டு இருக்கிறேன். 25.1. 2010 அன்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் தலைவர் டாக்டர் சிவராமன், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கத் தலைவர் ஆர்.செல்வம், நிர்வாகி டாக்டர் ஜீவானந்தம், பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் அமைப்பாளர்கள் நடிகை ரோகிணி, சங்கீதா, ராம், தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு தலைவர் ஷீலு ஆகியோர் சந்தித்து, மரபணு மாற்றுக் கத்தரிக்காயை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டனர். அவர் களின் மனுவை ஏற்றுக் கொண்ட முதல்வர் கருணாநிதி, அதுபற்றி அரசு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காது என்றும், தமிழக அரசு முடிவெடுக்கும் வரையில் இதனை விற்கவோ, பயிரிடவோ அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியிருப்பதாக தெரிவித்தார்” என்று குறிப்பிட்டதை நினைவுபடுத்து கிறேன்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment