![](http://2.bp.blogspot.com/-tz37Cj9lX3A/TgF5BIVOGvI/AAAAAAAAENg/4NHyMMF9vNw/s400/SC.bmp)
சமச்சீர் கல்வி பாடத்திட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வித் திட்டத்தை கடந்த திமுக அரசு கொண்டு வந்தது. 1 மற்றும் 6ம் வகுப்புகளில் கடந்த ஆண்டு சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத் தப்பட்டது. இந்த ஆண்டு முதல் 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டது.
இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட கல்வியாளர்களைக் கொண்டு பாடத்திட்டத்தை தயாரித்து புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டன. புதிதாக பதவி ஏற்ற அதிமுக அரசு, சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்து கடந்த வாரம் சட்ட திருத்த கொண்டு வந்தது.
இதற்கிடையே, அரசின் சட்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. �சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும். சமச்சீர் கல்வியை நிறுத்தியதால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்� என்று கூறி, சமச்சீர் கல்வி திருத்த சட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ‘சமச்சீர் கல்வி திட்டத்தின் படி, அதன் பாடத்திட்டங்களை கொண்டு கடந்த 2010&2011ம் ஆண்டில் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டதை போல் 2011&2012ம் கல்வி ஆண்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். இரு வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி பாடத்திட்டம்தான் இந்த ஆண்டும் தொடர வேண்டும். மற்ற வகுப்பு பாட புத்தகங்கள் குறித்து ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். இந்த குழு பாடத்திட்டத்தை 2 வாரங்களுக்குள் ஆய்வு செய்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையின் மீது, நாள்தோறும் விசாரணை நடத்தி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை 3 வாரகாலத்துக்கு 1 மற்றும் 6ம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கு எந்த பாடத்திட்டமும் இருக்காது’ என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில், பெற்றோர் சார்பில் மனோன்மணியம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை 20.06.2011 அன்று தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாடத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த பாடப்புத்தகங்களில் பல பாடங்களில் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. புத்தகங்களின் சில பக்கங்களையும் கிழிக்கும் நடவடிக்கை நடந்து வருகிறது.
மேலும், கடந்த ஆண்டு இருந்த பாடத்திட்டத்திற்கான புத்தகங்களையும் அரசு அச்சடித்து வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கின் இறுதித் தீர்ப்பு வருவதற்கு முன்பு சென்ற வருட பாடத்திட்டத்திற்கான புத்தகங்களை அச்சடிப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக, கல்வியாளர்கள் குழுவில் பள்ளி நிர்வாகத்தினர் இடம்பெற்றுள்ளனர்.
எனவே, பழைய பாடத்திட்டத்தின்படி புத்தகங்களை அச்சிடுவதை தடுக்க வேண்டும். 1 மற்றும் 6ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் திருத்தம் செய்வதையும், பக்கங்களை கிழிப்பதையும் தடை செய்ய வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி தமிழக அரசு செயல்படுவதால் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
No comments:
Post a Comment