![](http://4.bp.blogspot.com/-EPvVGGGVTSw/TmOVSWTJV8I/AAAAAAAAFNE/gzxZb4nnLco/s400/N1.jpg)
![](http://1.bp.blogspot.com/-MlOK6n_wt3E/TmOUUmI5EDI/AAAAAAAAFM8/Vwio9KYpUXA/s400/N.jpg)
நில அபகரிப்பு வழக்கில் திருச்செங்கோடு நகராட்சி தலைவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நடேசன் சிறையில் அடைக்கப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் கீரம்பூரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி வசந்தி (37). இவருக்கு சொந்தமான 2.2 ஏக்கர் நிலம் திருச்செங்கோட்டை அடுத்த சிந்தாளந்தூரில் உள்ளது. ஸீ1.50 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை 2008 ம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி அடியாட்களுடன் வந்து திருச்செங்கோடு நகராட்சி தலைவர் நடேசன் (51) மிரட்டி, அபகரித்து கொண்டதாக வசந்தி நாமக்கல் மாவட்ட நில மோசடி தடுப்பு பிரிவு போலீசில் சமீபத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பிச்சை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். நகராட்சி தலைவர் நடேசன், அவரது உதவியாளர் ராஜவேல் மற்றும் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வீட்டில் இருந்த நடேசனை 01.09.2011 அன்று காலை நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து 4 மணி நேரம் விசாரித்தனர். கைது செய்யப்பட்டது குறித்து நடேசன் நிருபர்களிடம் கூறுகையில், “என் மீது பொய் வழக்கு பதிவு செய்து போலீசார் சிறையில் அடைக்கின்றனர். இதை சட்டப்படி சந்திப்பேன்,“ என்றார்.
பின்னர், அவரை திருச்செங்கோடு முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த திமுகவினர், போலீசாரை கண்டித்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நடேசனை 15 நாள் காவலில் வைக்கும்படி நீதித்துறை நடுவர் ஆபிரகாம் லிங்கன் உத்தரவிட்டார். அப்போது, சிறையில் நடேசனுக்கு முதல் வகுப்பு அளிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் மனு அளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதித்துறை நடுவர், சிறையில் அவருக்கு முதல் வகுப்பு அளிக்கும்படி உத்தரவிட்டார். பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துசென்றனர். அப்போது அவர் சென்ற போலீஸ் வாகனத்தை திமுகவினர் மறித்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் அப்புறப்படுத்திவிட்டு, நடேசனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவருக்கு அங்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதன் பின்னர் அவர் சேலம் மத்திய சிறை யில் அடைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment