![](http://2.bp.blogspot.com/_d1iGc9LBTmw/TE7sV3SaWwI/AAAAAAAAAXI/1zcxKtwzeeA/s400/2.jpg)
சொத்துக் குவிப்பு வழக்கில் கால தாமதம் செய்யும் நோக்கில் தொடர்ந்து வாய்தா கேட்கும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் செயலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க. இளைஞரணி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இளைஞரணிச் செயலாளரும், துணை முதல்வருமான மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தான் ஊழலற்ற நிரபராதி என்பது போல அறிக்கைகளை வெளியிடுகிறார்.
அவர் மீதான வழக்குகளில் எத்தகைய தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளன என்று தி.மு.க. தலைவர் கலைஞர் பலமுறை சுட்டிக்காட்டியும், ஜெயலலிதா அதற்கெல்லாம் பதில் சொல்லாமல், தான் நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டதாகக் கூறி வருகிறார். 1.7.1991 முதல் 3.4.1996 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில், மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குவதாகக் கூறிக் கொண்டு, ரூ.66 கோடியே 65 லட்சம் அளவுக்கு சொத்துகளைக் குவித்ததாக 5.7.1997 இல் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு தொடுக்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் முடிவுக்கு வரவில்லை.
தீர்ப்பு வழங்க இயலாத அளவுக்கு, ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி ஜெயலலிதா வாய்தா கேட்பது தொடர்ந்து நடைபெறுகிறது. 2005 ஆம் ஆண்டு மொழிபெயர்த்து தரப்பட்ட வாக்குமூலங்களில் மொழிபெயர்ப்பு சரியில்லை என்று கூறி தற்போது ஜெயலலிதா வாய்தா கேட்டுள்ளார். அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார். எனினும் மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்போவதாக ஜெயலலிதா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு ஜெயலலிதா தொடர்ந்து வாய்தா கேட்டு, தமிழ்நாட்டு மக்களையே அவமதித்துக் கொண்டிருக்கும் போக்கைக் கண்டித்தும், நீதிமன்றத்தின் கவனத்துக்கு இதனை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற அடிப்படையிலும் தமிழகத்தின் முக்கிய இடங்களில் தி.மு.க. இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தி.மு.க. தலைமையிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், விரைவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment