கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, June 2, 2010

சட்டமன்றத்தில் கலைஞரின் நகைச்சுவைகள்!


இந்த 50 ஆண்டுகளில் சட்டசபையில் கலைஞர் உதிர்த்த நகைச்சுவை முத்துக்கள் பலப் பல. அவற்றில் சில முத்துக்கள் மலரும் நினைவுகளாக இங்கே!

பீர் முகம்மது: விவசாயக் கூலிகளுக்குக் கருத்தடை ஆபரேஷன்கள் அதிக அளவில் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் எண்ணிக்கை குறைந்துவரும் ஆபத்து இருக்கிறது. அரசு இதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்!

கலைஞர்: கருத்தடை செய்து கொள்ள வேண்டும் என்று அரசு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. பீர் முகம்மதுகூட அவரது தந்தைக்கு 33வது பிள்ளை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.விநாயகம்: மெரீனா கடற்கரையின் ஒரு பகுதியில் லவ்வர்ஸ் பார்க் இருக்கிறது. அங்கு மற்றவர்கள் நுழையாமல், காதலர்கள் சுதந்திரமாக இருக்கும் நிலையை அரசு ஏற்படுத்தித் தருமா?

கலைஞர்: இந்த விஷயத்தில் விநாயகத்துக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும் (14.3.1969)

ஜேம்ஸ்: மத்திய மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதுபற்றி ஆராய அமைக்கப்பட்டு இருக்கும் ராஜமன்னார் குழு, ஒன் சைடெட் லவ் போலத்தான் இருக்கிறது.

கலைஞர்: ஒன் சைடெட் லவ்வின் கஷ்ட நஷ்டங்களை நான் கண்டதில்லை! (26.2.1970).

அப்துல் லத்தீப்: கூவம் ஆற்றில் முதலைகள் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அதனால், அங்கே அசுத்தம் குறைக்கப்பட்டு இருக்கிறது. அசுத்தத்தைப் போக்க கூவம் ஆற்றில் அரசு முதலைகள் விடுவதுபற்றி ஆலோசிக்குமா?

கலைஞர்: ஏற்கெனவே அரசாங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முதலை கூவம் ஆற்றில் போட்டு இருக்கிறது. (8.12.1971)

கோவை செழியன்: ஆண்டவன் எல்லோருக்கும் சொந்தம். ஆகவே, கோயில்களை எல்லாம் தேசிய மயமாக்கிவிட்டால் பிரச்சினை இருக்காது அல்லவா?

கலைஞர்: ஆண்டவர்களை தேசிய உடைமையாக்கும் உத்தேசம் இல்லை. ஆண்டவன்தான் அனைவரையும் தேசிய மயமாக்கி ரட்சிக்க வேண்டும்! (18.12.71)

காமாட்சி: மதுரை மீனாட்சிக்கு வைரக் கிரீடம், வைர அட்டிகை.. இன்னும் இருக்கிற பல நகைகளின் மொத்த மதிப்பு எவ்வளவு?

கலைஞர்: மீனாட்சிக்கு இருக்கிற சொத்தின் மதிப்பைச் சொன்னால், காமாட்சிக்குப் பொறாமை ஏற்படுமே! (14.3.73)

கலைஞர்: நாங்கள் விலைவாசி போராட்டத்தில் ஈடுபட்டோம். அதுவும் ஒரு நாள் அடையாள மறியல்-தான் செய்தோம். அதற்கே எங்களைப் பிடித்துக் காங்கிரஸ்காரர்கள் மூன்று மாதம் ஜெயிலில் போட்டுவிட்டார்கள்.

அனந்தநாயகி: அப்படிப் போட்டதால்தான் நீங்கள் இன்றைக்கு இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறீர்கள்?

கலைஞர்: அதனால்தான் நாங்கள் இப்போது அப்படிச் செய்யவில்லை. சிறைக்கு வந்த அன்றைக்கே விடுதலை செய்து விடுகிறோம். (23.3.1973)

சோனையா: தமிழ்நாட்டில் ஆபாசப் படங்களை, புத்தகங்களை வெளியிட்டதற்காக எத்தனை பேர் மீது வழக்கு போடப்பட்டு இருக்கிறது. தண்டிக்கப்பட்ட-வர்கள் யார் என்பதை அரிய விரும்புகிறேன்

கலைஞர்: பல பேர்மீது வழக்கு போடப்பட்டு இருக்கிறது. ஆனால், அந்த விவரங்களைக் கூறி, உறுப்பினர்களிடையே அவற்றை வாங்கிப் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்ட நான் விரும்பவில்லை. (27.3.73)

பி.ஹெச் பாண்டியன்: புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது!

கலைஞர்: புல் என்பது புல்லா?(16.2.1989)

பி.ஹெச்.பாண்டியன்: ஹை கோர்ட்டில் நீதிபதிகள் என்றைக்கு ஓய்வு பெறுகிறார்கள் என்ற செய்தியை ஓர் ஆண்டுக்கு முன்பே வாங்கி விட்டால், வழக்குகள் தேங்காது. இதற்கு முதல்வர் என்ன சொல்கிறார்?

கலைஞர்: காலிகள் ஏற்படாமல் தடுப்பதற்குப் பாண்டியன் சொன்னது நல்ல யோசனைதான்! (7.4.1989)

ஆர். சிங்காரம்: இந்த சட்டமன்றத்தில் நிலைய வித்வான்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள்தான் எப்போது பார்த்தாலும் வாசித்துக் கொண்டே இருக்கிறார்கள். இது நியாயம்தானே? புதிய வித்வான்களுக்கு வாய்ப்பு தர வேண்டாமா? நாங்கள் எல்லாம் புதிய வித்வான்கள்!

கலைஞர்: நான் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக இங்கே இருக்கிறேன். நானும் பழைய நிலைய வித்வான் தானா? நான் வாசிக்கலாமா, கூடாதா? (4.5.1989)

நூர்முகம்மது: கன்னியாகுமரி மக்களின் கோரிக்-கைப்படி முதல்வருடைய கருணை கொண்ட-கடைக்கண் பார்வை குமரியின்மீது திருப்பப்பட்டு, அம்மக்களின் குறை தீர்க்கும் வகையில் தொழிற்சாலயை அமைக்க, முதல்வர் முன்வருவாரா?

கலைஞர்: குமரியின்மீது கடைக் கண் பார்வை வைக்கின்ற அளவுக்கு எனக்கு வயது இல்லை இப்போது! (6.5.1989)

பி.வி. ராஜேந்திரன்: உப்பு உற்பத்தி மரணப் படுக்கையில் கிடக்கிறது. மரணமே அடைந்து, அது சவப் பெட்டிக்குள் சென்று கொண்டு இருப்பதை உணர்கிறீர்களா?!

கலைஞர்: தேர்தல் அறிக்கையில் சொன்னது எல்லாம் சவப் பெட்டிக்குள் போய்விட்டதா என்று கேட்கிறார்கள். சவப்பெட்டிக்குள் போனாலும் அது அழுகாமல் இருக்க, அதற்கும் உப்புதான் தேவை! (20.1.90)

ரகுமான்கான்: இந்திராகாந்தியைக் கொலை செய்ய முயற்சித்ததாகப் பொய் வழக்கு போட்டார்கள். கலைஞர், பேராசிரியர் போன்றவர்கள் எல்லாம்கூட ஜாமீனில்தான் இருக்கிறார்கள்!

கலைஞர்: தவறான தகவல்! என்னையும் பேராசிரியரையும் அந்த வழக்கில் விடுதலை செய்து விட்டார்கள். இவர்தான் விடுதலை செய்ய மறுக்கிறார். (9.4.90)

வி.பி. துரைசாமி: ஆஞ்சநேயர் கோயிலில் அசையும் சொத்து எவ்வளவு? அசையா சொத்து எவ்வளவு?

கலைஞர்: அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து ஆஞ்சநேயர்! (24.4.1990).

குமரி அனந்தன்: நான் தொலைபேசியில் பேசிய-போது, டிராக் நம்பர்செவன் என்று குரல் வருகிறது. இப்படி ஒரு குரல் வந்ததுமே எனக்கு அய்யப்பாடு...

கலைஞர்: குமரி அனந்தனுக்கு அப்படியொரு கர்ண கடூரமான வார்த்தை காதிலே விழுந்திருக்கிறது. சில நேரங்களில் காதல் வசனங்கள்கூட கிராஸ் டாக்கிலே கேட்கலாம்.. அதையும் முயற்சித்துப் பாருங்கள். (7.5.1990).

தொகுப்பு: எம். பரக்கத்அலி
நன்றி: ஆனந்தவிகடன்

No comments:

Post a Comment