கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, June 24, 2010

திராவிடம்-திராவிடர் : ஆய்வரங்கத்தில் கலைஞர் பேச்சு



உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் 2வது நாளான இன்று தொல்காப்பிய அரங்கத்தில் ஆய்வரங்கத்தை முதல்வர் கருணாநிதி துவக்கிவைத்தார்.

ஆய்வரங்கத்தில் முதல்வ கருணாநிதி உரையாற்றினார். அதன் உரை:

’’உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கத் தொடக்க விழா
நிகழ்ச்சியின் தலைவர் முனைவர் கா. சிவத்தம்பி அவர்களே,

சிறப்பு மலரினை வெளியிட்டு உரையாற்றிய மாண்புமிகு தமிழக நிதி
அமைச்சர் பேராசிரியர் அன்பழகனார் அவர்களே,

வாழ்த்துரை வழங்கிய
முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்களே,
முனைவர் மு. ஆனந்தகிருட்டிணன் அவர்களே,
முனைவர் கிரிகோரி ஜேம்ஸ் அவர்களே,
முனைவர் உல்ரிக் நிக்லாஸ் அவர்களே,
முன்னிலை வகிக்கும் வெளிநாட்டு அறிஞர் பெருமக்களே,
வரவேற்புரையாற்றிய முனைவர் பொற்கோ அவர்களே,

நன்றியுரை நவிலவிருக்கும்
முனைவர் அவ்வை நடராசன் அவர்களே,
ஆய்வரங்கில் கலந்து கொள்ள வந்துள்ள வெளிநாட்டைச் சேர்ந்த -
வெளி மாநிலங்களைச் சேர்ந்த அறிஞர் பெருமக்களே, ஆய்வாளர்களே,
மத்திய, மாநில அமைச்சர் பெருமக்களே, தாய்மார்களே, பெரியோர்களே,
என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே,
வணக்கம்.


மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களால் நேற்றைய தினம்தொடங்கி வைக்கப்பட்டுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் அடுத்த
கட்டம் இன்று தொடங்குகிறது.

அன்னைத் தமிழுக்கு அரிய பயன்தரும் கட்டம்இது; இன்றிலிருந்து தொடங்கி, நான்கு நாட்களுக்கு நடைபெறப்போகும்ஆய்வரங்கங்களின் மூலம்தான் - தமிழ்மொழியை மேலும்செழுமைப்படுத்திடவும்; அது என்றும் உயிரோட்டமுள்ள மொழி என்பதை மெய்ப்பித்திடும் வகையில், அதனை வளர்த்து, 21ஆம் நூற்றாண்டின்தேவைகளுக்கேற்ப முன்னெடுத்துச் செல்லவும், உரிய ஆலோசனைகளையும்,
உயர்ந்த கருத்துரைகளையும் நாம் பெறஇருக்கின்றோம்.

இங்கு நடைபெறவுள்ள ஆய்வரங்கிலும், இணையத் தமிழ் மாநாட்டிலும்
பங்கு கொள்ள வந்திருக்கிற உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த
அன்பையும், நன்றியையும், முதற்கண் தெரிவித்துக் கொள்வதில் நான் மெத்த
மகிழ்ச்சியடைகிறேன்.

தமிழ்மொழி - தமிழர் பண்பாடு - நாகரிகம் ஆகியவற்றைப் பொறுத்தவரை,
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இப்போது எல்லா முனைகளிலும் புதிய
ஆர்வத்தையும், எழுச்சியையும் நம்மாலே காண முடிகிறது. ஏறத்தாழ
ஐம்பதுக்கும் மேலான நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு
பகுதிகளிலிருந்தும் ஏராளமான ஆய்வறிஞர்கள் இங்கே வந்திருப்பது நமக்குப்
புதியதெம்பையும், நம்பிக்கையையும் தருகிறது.

ஆழ்ந்த ஆய்வுகளின் காரணமாக உருவாகிடும் சிந்தனைகளைச்
சேகரித்துக் கோவைப்படுத்துவதே ஆய்வரங்குகளின்பணியாகும். இத்தகைய
ஆய்வரங்குகள் நடப்பதிலிருந்து நல்ல பலன்களை எதிர்பார்த்திடும் மக்கள்
முன், ஆய்வறிஞர்கள்; எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள
கருத்துக்களை வழங்கிட வேண்டும்.

ஆய்வரங்குகளில் வைக்கப்படும்
கட்டுரைகளும், விளக்கப்படும் கருத்துக்களும் மக்களைப்புதிய கோணத்தில்
சிந்திக்கத் தூண்டிடும் தன்மையுடையவையாக இருத்தல் வேண்டும்.

அந்தஅளவுக்கு மிக உயர்ந்த தரத்தை உடையவையாகக் கட்டுரைகளும்,
கருத்துரைகளும் இருந்தன என்று கருதப்படக்கூடிய அளவுக்கு, இந்த
ஆய்வரங்கங்கள் அமைந்திட வேண்டும் என்று நான் பெரிதும் விரும்புகிறேன்.

கொல்கத்தாவில் ஆசியக் கழகம் மூலமாக 1786இல் வில்லியம் ஜோன்ஸ்
அறிவித்த இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கம்

சமஸ்கிருதத்தை மையமாகக் கொண்டு அமைந்தது. திராவிட மொழிக்
குடும்பம் என்னும் கருத்தாக்கத்தை 1816இல் எல்லிசு, அவரைத் தொடர்ந்து
1856இல் கால்டுவெல் என ஐரோப்பிய அறிஞர்கள் பலரும் மையப்படுத்தி
ஆராய்ந்தனர்.

இந்தோ ஆரிய மொழிக் குடும்பத்தினின்றும் வேறானது திராவிட
மொழிக் குடும்பம்; அக்குடும்பத்தின் முதன்மை மொழி; தமிழ் என்னும்
உண்மையை உலகத்திற்கு அவர்கள் உணர்த்தினர்.

1927இல் ஜான் மார்ஷலின் சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகம்
என்னும் கண்டுபிடிப்பு உலகத்தின் கருத்தைத் தமிழின்பால் ஈர்த்தது.
அதன்பின், உலக நாடுகளின் அறிஞர்கள் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு,
நாகரிகம் முதலியன குறித்தெல்லாம் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர்.

அவர்கள் ஆராய்ந்து தமிழின் தொன்மை, தனித்தன்மை, செவ்வியல் தன்மை,
தமிழர்தம் இலக்கிய விழுமியம், கலைநலம், பண்பாட்டு வளம், நாகரிக முதிர்ச்சி
முதலியவற்றை எல்லாம் வெளிப்படுத்தினார்கள்.

திராவிட இனத் தொன்மை பற்றி அறிஞர்கள் பலர் ஆய்வு செய்து
அறிவித்துள்ளனர்.

இரவீந்திரநாத் தாகூர், திராவிடம் தந்த செழிப்பும் வலிவும்தான் ஆரிய
நாகரிகத்தின் நலிவைப் போக்கி அதன் அடிப்படையை அலுங்காமல்
காத்தது என்கிறார்.

சோவியத் நாட்டு மொழி அறிஞர் சாகிரப் என்பவர் வட இந்திய திராவிட
மொழிகளையும், தென்னகத் திராவிட மொழிகளையும் ஒப்பிட்டவர். அவர்
தமிழர்கள் தென்னாட்டிலிருந்து வடதிசை நோக்கிப் பரவினர் என
வாதிட்டு நிலை நாட்டுகிறார்.

காஷ்மீரில் வாழும் மலைவாழ் மக்கள் திராவிடமொழிப் பிரிவின்
கிளைமொழியைப் பேசுகின்றனர்.


பீகாரின் ராஜ்மகால் குன்றுகளில் வாழும் “குருக்கர்” என்போர் திராவிட
மக்களே என்பது அவர்கள் பயன்படுத்தும் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும்
பழங்கதைகளின் வாயிலாகத் தெரிய வருகிறது.

இந்திய நாகரிக அடையாளமான சேலையும்,வேட்டியும் திராவிட
நாட்டின்கொடையாகுமென்று பேராசிரியர் எஸ்.கே.சட்டர்ஜி;
“இந்தோ - ஆரியன் - இந்து” என்ற நூலில் எழுதியுள்ளார்.

ஆரப்பா, மொகஞ்சதாரோ ஆராய்ச்சியில் கண்டறிந்த தாய்த் தெய்வ
வழிபாடு திராவிட வழிபாடேயாகும்.

அமெரிக்காவில் கொலராடோ ஆற்றின் கரையில் கட்டப்பட்ட சிவன்
கோயில், திராவிடரின் கடவுளைக் காட்டுகிறது.

ஆதிச்சநல்லூரின் மண்டை ஓடுகள் சிந்துவெளியில் கிடைத்த மண்டை
ஓடுகளுடன் ஒத்துள்ளன.

சோவியத் நாட்டுப் பேராசிரியர் கோந்திரதோவ் என்பார், உலகின் பழமை
மிகு நாகரிகங்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கைப் பிற
இனத்தவர்க்கும், இரு பங்கினைத் திராவிடர்களுக்கும்
உரியதாக்குவதே உண்மையான பங்கீடு என்று கண்டறிந்து
உரைக்கின்றார்.

எழுத்து முறையை எகிப்தியருக்குத் திராவிடர் கொடையாகக்
கொடுத்தனர்.

மெசபடோமியா நாகரிகமும், எலாமியர் ஏற்றமும் குமரிக் கண்டத்
தமிழரிடமிருந்து சென்றவை.

பாபிலோனிய மதகுரு ஒருவர் எழுதிய பழங்கதை ஒன்றில்,
மெசபடோமியர்க்கு நாகரிகம் கற்பித்த “ஒனசு” என்பார், தமது
குழுவினருடன் வந்தார். நாகரிகம் கற்பித்தார். ஏர் உழவுக் கருவிகளைக்

கொடுத்தார். அறிவியல்கலை, கட்டடக்கலை, ஆண்டவன் வழிபாடு
ஆகியவற்றைக் கற்பித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

சங்ககாலம் கி.மு.4ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் எனக்
கொண்டால், சங்க இலக்கியங்களிலிருந்து திராவிட நாகரிகத்தை அறிய
முடிகிறது.

“மத்திய தரைக்கடல், குமரிக்கண்டம், சிந்துவெளி, எகிப்து, சுமேரியா
எங்கணும் பரவியது தமிழர் நாகரிகமே” என்று இராமச்சந்திர தீட்சிதர்
“தமிழர் தோற்றமும் பரவியதும்” என்ற நூலில் கூறியுள்ளார்.

தமிழ்மொழியின் தொன்மையைப் பொறுத்தவரை தொல்காப்பியம்
போன்றதோர் பழைமை இலக்கணம் எந்த மொழியிலும் இல்லை. அகம், புறம்
என்னும் பொருண்மைப் பகுப்பும்; திணை, துறை வகுப்பும்; சுட்டி ஒருவர் பெயர்
கொளப் பெறாதவாறும்; கூற்றுநிலையில் அமைந்திடுமாறும் உள்ள
அகப்பாடல்களும்; பொய்யும் வழுவும் விரவா மெய்யான தூய காதலைப்
போற்றும் மரபும்;

மகேசனை மையப்படுத்தாது மனிதனை மையப்படுத்தும்
பாடல்களும் கொண்ட சங்க இலக்கியம் போன்றதோர் தொல்லிலக்கியம் எந்த
மொழியிலும் இல்லை. திருக்குறள்போல உலகப் பொதுமையான அற
இலக்கியமும் எந்த மொழியிலும் இல்லை; கடவுளை விடுத்துக் குடிமக்களைத்
தலைமக்களாகக் கொண்ட சிலப்பதிகாரம் போல ஒரு தொன்மையான
காப்பியமும் எந்த மொழியிலும் இல்லை; ஆசியா முழுவதும் கோலோச்சிய
பௌத்த சமயத்திற்கு மணிமேகலை போல ஒரு காப்பியம் பாலிமொழியிலும்
இல்லை; எல்லாச் சமயங்களையும் - சைவ, வைணவ சமயங்களையும் - சமண,
பௌத்த சமயங்களையும் - கிறித்துவ, இசுலாமிய சமயங்களையும் இதயத்திலே
ஏந்திக்கொண்ட மொழி தமிழ். சமயந்தோறும் நின்ற தையல் எனப்
போற்றப்பெறும் தமிழ், சமயங்களையும் வளர்த்துத் தன்னையும் வளர்த்துக்
கொண்ட மொழி. அது மட்டுமல்ல, எல்லா மெய்ப்பொருள் தத்துவங்களையும்
விளக்கும் மொழி அது.


தமிழ்நாட்டு எல்லை கடந்து இந்தியாவின் வடபுலம் வரை மட்டும் அல்ல
- கடல் கடந்து அயல்நாடுகளுக்கும் சென்று - திரைகடலோடித் திரவியம்
தேடியது மட்டுமன்றித் திக்கெட்டும் பண்பாட்டுப் பங்களிப்பைச் செய்த இனம்
தமிழ் இனம்.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகில் கழுக்காணி
முட்டத்தில் அண்மையில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்
துறையினரால் முதலாம் இராசாதிராசன் காலத்தைச் சேர்ந்த கி.பி. 1053ஆம்
ஆண்டைச் சேர்ந்த 85 செப்பேடுகள் பூமிக்கு அடியிலிருந்து
கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வில், புலி, கயல் ஆகிய சேர, சோழ,
பாண்டியர்களின் முத்திரைகளோடு கிடைத்துள்ள அந்தச் செப்பேடுகள்
வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பெரும் கருவூலமாகும். தஞ்சையை
விசயாலயச் சோழன் பல்லவர்களிடமிருந்து கைப்பற்றியதற்கான
புதிய வரலாற்றுக் குறிப்பு இச்செப்பேட்டில் கிடைத்துள்ளது. இச்செப்பேடு இந்த
மாநாட்டை ஒட்டிய கண்காட்சியில் உங்கள் பார்வைக்காக
வைக்கப்பட்டுள்ளது.

மேலும் உள்ளாட்சி முறையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வரலாற்றுப்
பதிவாக விளங்குகிறது உத்திரமேரூர்க் கல்வெட்டு. இவையெல்லாம்
தமிழர்களின் தொடர்ச்சியான வரலாற்றுப் பதிவுகளுக்கு எடுத்துக்
காட்டுகளாகும்.

இப்படி காலந்தோறும் தமிழ், தமிழர்கள் கொண்டுள்ள எண்ணற்ற
சிறப்புக்களை அடுக்கிக் கொண்டே போகலாம்; அவற்றையெல்லாம் தமிழைத்
தாய்மொழியாகக் கொண்டுள்ள தமிழர்கள்தான் வெளிநாட்டவர்க்கு
எடுத்துரைத் திடவேண்டும்; ஆனால் தமிழைத் தாய்மொழியாகக்
கொள்ளாத கால்டுவெல், ஆல்பர்ட் சுவைட்சர் போன்ற வெளிநாட்டவர்
அவற்றைத் தமிழர்களுக்கு விளக்கிச் சொல்லும் நிலைதான் தொடர்ந்து
நிகழ்ந்து வருகிறது.


தமிழன் புகழ்மிக்க பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரன் என்பதை
முதலில் தமிழன் உணர வேண்டும்; பிறருக்கும் உணர்த்த வேண்டும்
என்பதற்காக மட்டும் அல்லாமல், தமிழ், தமிழ் இனம், தமிழ் இலக்கியம்,
பண்பாடு, நாகரிகம் என்று ஒவ்வொரு துறையிலும் பதித்துள்ள
முத்திரைகள், சாதித்துள்ள சாதனைகள், இவையெல்லாம் ஒவ்வொரு
தமிழனுக்கும் பூரிப்பையும், பெருமிதத்தையும் ஏற்படுத்தக்
கூடியவை என்றாலும், அந்தப் பூரிப்போடும் பெருமிதத்தோடும்
நிறைவு அடைந்துவிடக் கூடாது; தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும்
ஆற்றவேண்டியவை இன்னும் ஏராளமாக உள்ளன என்பதை உணர
வேண்டும்.

இந்திய மொழிகள், உலக மொழிகள் அனைத்திலும் தமிழ்
இலக்கியச் செல்வங்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டும். கிரேக்க
மொழியிலும், பிரெஞ்சு மொழியிலும், ஜெர்மன் மொழியிலும், பிற
மொழிகளிலும் தமிழியல் குறித்தும் தமிழினம் குறித்தும் எழுதப்
பெற்றுள்ளவை அனைத்தும் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட
வேண்டும்.

உலகெங்கும் உள்ள தமிழியல் நூல்கள், ஆவணங்கள்
மின்மயமாக்கப்பெற்று உலகில் எந்த ஒரு பகுதியில் உள்ளவர்களும்
அவற்றைப் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
துறைதோறும் தமிழ் பயன்பட வேண்டும்.

வகைவகையாய்அகராதிகளும், தொகைதொகையாய்க் கலைக் களஞ்சியங்களும்
வரவேண்டும். இன்னும் என்னென்ன வேண்டும் தமிழுக்கு என
ஆய்வரங்கத்திலும், இணைய மாநாட்டிலும் பங்கேற்கிற அறிஞர்
பெருமக்கள் எடுத்துச் சொல்லி இந்த அரசுக்கு ஆணையிட
வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற பாவேந்தர் கருத்துப்படி,
பாட்டையை அமைத்துக் கொண்டு, உயிர் உள்ளவரை தமிழுக்காகப்
பாடுபட - நம்மைத் தமிழுக்கு முழுமையாக ஒப்படைத்திட - நமது
தமிழ்த் தொண்டுப் பயணத்தை மேலும் வேகமாகத் தொடர்ந்திட -
உரிய ஊக்கத்தையும், உறுதியையும் இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி
மாநாடு நமக்கு அளித்துள்ளது.

இன்று முதல் நான்கு நாட்கள் நடைபெறும் ஆய்வரங்கின் பல்வேறு
அமர்வுகளில் வழங்கப்பெறும் கட்டுரைகளிலும், முகப்பரங்கம், கலந்தாய்வரங்கம்,
பொழிவரங்கம், கலந்துரையரங்கம் ஆகியவற்றிலும் முன் வைக்கப்படும்
கருத்துகளும், அவை மீதான ஆரோக்கியமான விவாதங்களும் தமிழ்
வளர்ச்சிக்கும், தமிழியல் ஆய்வு வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்படும் என்று
கூறி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கை மகிழ்ச்சியோடும்,
மனநிறைவோடும் தொடங்கி வைக்கிறேன்.
நன்றி; வணக்கம்!’’


No comments:

Post a Comment