![](http://3.bp.blogspot.com/_d1iGc9LBTmw/S9gzNcR370I/AAAAAAAAAIY/jDnriovWxow/s400/photo01.jpg)
சென்னை, ஏப். 27_ நேற்றிரவு (26.4.2010) 8 மணியளவில் சென்னையில் தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களை அவர்தம் இல்லத்தில், பக்கவாத நோயால் அவதிப்படும் 81 வயது மூதாட்டியான அன்னை பார்வதி அம்மாள் அவர்களை மீண்டும் மலேசியாவிலிருந்து இங்கே வந்து உரிய சிகிச்சை பெற, அவர்களிடமிருந்து கடிதம் வரும் நிலையில், மத்திய அரசுக்கு எழுதி அனுமதித்து ஆவன செய்யவேண்டும் என்பதை ஒரு மனுமூலம், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., திராவிடர் இயக்க தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் சந்தித்து வேண்டுகோள் மனு ஒன்றை அளித்து, சட்டமன்றத்தில் முதல்வர் கூறிய கருத்துகள் அடிப்படையில் ஆவன செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்! முதல்வர் அவர்கள் மனுவைப் பெற்றுக்கொண்டு, பார்வதி அம்மா அவர்களிடமிருந்து கடிதம் வந்தால், அதற்குரிய அனுமதி ஏற்பாடுகளை மத்திய அரசுடன் பேசி செய்வதாக இணக்கமாகக் கூறினார்கள். மூவரும் நன்றி தெரிவித்து, சிறிது நேரம் உரையாடி விடை பெற்றனர்! அம்மனுவின் வாசகங்கள் வருமாறு: பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு, கனிவான அன்பு வணக்கம். சென்னையில் சிகிச்சை பெறுவதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் திருமதி பார்வதி அம்மையார் 16.4.2010 அன்று இரவு விமானம் மூலம் சென்னை வந்தபோது, சென்னையில் இறங்குவதற்கு குடியுரிமை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டார். இதுகுறித்து தாங்கள் 19.4.2010 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் முக்கிய அறிவிப்பினைக் கொடுத்தீர்கள். நான் மீண்டும் தமிழகத்தில் வைத்தியம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று பார்வதி அம்மையார் விரும்புவார்களேயானால், கடிதம் எழுதுவார்களேயானால், அதுபற்றி மத்திய அரசுக்கு எழுதி, அனுமதி பெற தயாராக இருக்கிறேன் என்று அறிவித்துள்ளதற்கு எங்களின் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ் கூறும் நல்லுலகம் இதனை நன்றி உணர்வோடு வரவேற்றுப் பாராட்டும் என்பது உறுதி. இந்தப் பிரச்சினையின் பின்னணியில் உள்ள உண்மையான காரணத்தை_ - மூல ஆணை பிறப்பிப்பதற்குக் காரணமாக இருந்தவர்களை மறைத்துத் திசை திருப்பும் வேலையில் சிலர் இறங்கியுள்ளனர். இந்த உண்மையும் அம்பலமாகிவிட்ட நிலையில், தாங்கள் கருணை கூர்ந்து, இதுபற்றி திருமதி பார்வதி அம்மாவிடமிருந்து வேண்டுகோள் வருமானால், அதுபற்றி தாங்கள் பெரு உள்ளத்துடன், உடனடியாக மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு, சட்டப் பேரவையில் அறிவித்தபடி ஆவன செய்யுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சந்திப்பின்போது, துணை முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் உடனிருந்தார்கள். |
No comments:
Post a Comment