கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, June 22, 2011

காஞ்சிபுரம் நகர திமுக சார்பில், திமுக உயர்நிலைக்குழுவின் செயல்திட்ட விளக்க பொதுக்கூட்டம்


காஞ்சிபுரம் நகர திமுக சார்பில், திமுக உயர்நிலைக்குழுவின் செயல்திட்ட விளக்க பொதுக்கூட்டம் வணிகர் வீதியில் 21.06.2011 அன்று இரவு நடந்தது.
கூட்டத்துக்கு, நகர செயலாளர் சேகர் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் ஆனந்தன் வரவேற்றார். அவைத் தலைவர் கந்தசாமி, துணை செயலாளர்கள் சந்துரு, பாலவிநாயகம், தவமணி, புகழேந்தி, பொருளாளர் பொன்.காமராசன், இளைஞர் அணியை சேர்ந்த அபுசாலி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் பேசும்போது, ‘‘தோல்வி என்பது நிலையானது கிடையாது. இங்கு இருக்கும் கூட்டத்தை பார்க்கும்போது இது தோற்கின்ற கட்சியா என்று கேட்டால் இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஏழை, பணக்காரன் என அனைவரும் ஒன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. ஆனால், அதிமுக அரசு அந்த புத்தகத்தில் உள்ள பக்கங்களை கிழிக்கிறது. இதையெல்லாம் தவிர்த்துவிட்டு, உடனே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும்’’ என்றார்.
கூட்டத்தில், கம்பம் செல்வேந்திரன், மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், துணைச் செயலாளர் பொன்மொழி, மாவட்ட அவைத் தலைவர் கே.சுந்தர், பொருளாளர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமரை லோக்பால் வரையறைக்குள் கொண்டுவர வேண்டும் : திமுக


டெல்லியில் 21.06.2011 அன்று நடைபெற்ற ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்றார்.


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 1ல் தொடங்கவுள்ள நிலையில், இருஅவைகளிலும் எதிர்க்கட்சிகளை எதிர்கொள்வது குறித்து ஆளும் கூட்டணி சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.


பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


திமுக தலைவர் கலைஞர் அன்றைய தினம் டெல்லியில் இருந்தபோதிலும் அவர் கூட்டத்துக்கு வரவில்லை. திமுக சார்பில், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கலந்து கொண்டார்.


இந்தக் கூட்டத்தில், கூட்டணி கட்சித் தலைவர்களிடையே பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, லோக்பால் மசோதா தொடர்பாக அண்ணா ஹசாரே குழுவினருடன் நடத்திய பேச்சு குறித்து விவரித்தார்.


அதைத் தொடர்ந்து கறுப்புப் பணம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

பிரதமரை லோக்பால் வரையறைக்குள் கொண்டுவர வேண்டும் - திமுக :

ஐக்கிய முற்போக்கு கூட்டணியினர் கூட்டம் நேற்று பிரதமர் இல்லத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். ஆனால் டெல்லியில் இருந்த தி.மு.க. தலைவர் கலைஞர் கலந்து கொள்ளவில்லை.

இதனையடுத்து ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆலோசனையின் போது, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கூறுகையில், பிரதமர் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளிடம் லோக்பால் மசோதா குறித்து விவாதித்தார்.

அப்பொழுது தி.மு.க. சார்பில் பங்கேற்ற டி.ஆர்.பாலு பிரதமரை லோக்பால் வரையறைக்குள் சேர்க்கக்கூடாது என்ற அரசின் நிலைமையை தி.மு.க. எதிர்க்கிறது.

பிரதமர் பதவியையும் லோக்பால் வரையறைக்குள் கொண்டு வரவேண்டும் எனவும், லோக்பால் மசோதா குறித்த கருத்துக்களை நாடாளுமன்றத்தில் அரசு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக பரூக் அப்துல்லா தெரிவித்தார்.

கனிமொழியுடன் கலைஞர் சந்திப்பு


ஸ்பெக்ட்ரம் வழக்கில், தி.மு.க. எம்.பி. கனிமொழியின் ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட் 20.06.2011 அன்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து சிறையில் உள்ள கனிமொழி எம்.பி.யை திமுக தலைவர் கருணாநிதி 21.06.2011 அன்று சந்தித்து பேசினார்.
திமுக தலைவர் கருணாநிதி 21.06.2011 அன்று காலையில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் டெல்லி வந்தார். கலைஞருடன் மூத்த திமுக தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களுமான துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோரும் உடன் வந்துள்ளனர். மாலை 5.50 மணிக்கு திகார் சிறைக்கு கருணாநிதி சென்றார். சிறையில் உள்ள கனிமொழி எம்.பி.யை அவர் சந்தித்து பேசினார். சிறை உதவி கண்காணிப்பாளர் அறையில் இந்த சந்திப்பு நடந்தது. இருவரும் 20 நிமிடங்கள் தனியாக பேசிக் கொண்டிருந்தனர்.
பின்னர், அந்த அறைக்குள் மத்திய அமைச்சர் அழகிரி, ராஜாத்தி அம்மாள் ஆகியோர் சென்றனர். சிறிது நேரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரை சிறை காவலர்கள் அழைத்து வந்தனர். அவர்களுடன் கருணாநிதி பேசினார். இந்த சந்திப்பின்போது டி.ஆர்.பாலு எம்.பி., தமிழக முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோரும் உடன் இருந்தனர். அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது, கனிமொழியிடம் உடல் நலம் விசாரித்த கருணாநிதி, அவருக்கு தைரியம் மூட்டினார். அதற்கு, "நான் தைரியமாக இருக்கிறேன் அப்பா, நீங்கள் உங்களுடைய உடல் நிலையை கவனித்துக்கொள்ளுங்கள்," என்று கனிமொழி கூறினாராம்.

இதற்கிடையே, திகார் சிறையில் கனிமொழிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பற்றி திகார் சிறை டி.ஜி.பி தீரஜ் குமார் கூறுகையில், ‘பாதுகாப்பு காரணங்களுக்காக கனிமொழி இருக்கும் அறையே தனி செல் ஆக மாற்றப்பட்டுள்ளது. சிறையில் அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

1, 6 புத்தகங்களில் பக்கங்கள் கிழிப்பு : தமிழக அரசு மீது சுப்ரீம் கோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு


சமச்சீர் கல்வி பாடத்திட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வித் திட்டத்தை கடந்த திமுக அரசு கொண்டு வந்தது. 1 மற்றும் 6ம் வகுப்புகளில் கடந்த ஆண்டு சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத் தப்பட்டது. இந்த ஆண்டு முதல் 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டது.
இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட கல்வியாளர்களைக் கொண்டு பாடத்திட்டத்தை தயாரித்து புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டன. புதிதாக பதவி ஏற்ற அதிமுக அரசு, சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்து கடந்த வாரம் சட்ட திருத்த கொண்டு வந்தது.
இதற்கிடையே, அரசின் சட்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. �சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும். சமச்சீர் கல்வியை நிறுத்தியதால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்� என்று கூறி, சமச்சீர் கல்வி திருத்த சட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ‘சமச்சீர் கல்வி திட்டத்தின் படி, அதன் பாடத்திட்டங்களை கொண்டு கடந்த 2010&2011ம் ஆண்டில் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டதை போல் 2011&2012ம் கல்வி ஆண்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். இரு வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி பாடத்திட்டம்தான் இந்த ஆண்டும் தொடர வேண்டும். மற்ற வகுப்பு பாட புத்தகங்கள் குறித்து ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். இந்த குழு பாடத்திட்டத்தை 2 வாரங்களுக்குள் ஆய்வு செய்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையின் மீது, நாள்தோறும் விசாரணை நடத்தி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை 3 வாரகாலத்துக்கு 1 மற்றும் 6ம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கு எந்த பாடத்திட்டமும் இருக்காது’ என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில், பெற்றோர் சார்பில் மனோன்மணியம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை 20.06.2011 அன்று தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாடத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த பாடப்புத்தகங்களில் பல பாடங்களில் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. புத்தகங்களின் சில பக்கங்களையும் கிழிக்கும் நடவடிக்கை நடந்து வருகிறது.
மேலும், கடந்த ஆண்டு இருந்த பாடத்திட்டத்திற்கான புத்தகங்களையும் அரசு அச்சடித்து வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கின் இறுதித் தீர்ப்பு வருவதற்கு முன்பு சென்ற வருட பாடத்திட்டத்திற்கான புத்தகங்களை அச்சடிப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக, கல்வியாளர்கள் குழுவில் பள்ளி நிர்வாகத்தினர் இடம்பெற்றுள்ளனர்.
எனவே, பழைய பாடத்திட்டத்தின்படி புத்தகங்களை அச்சிடுவதை தடுக்க வேண்டும். 1 மற்றும் 6ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் திருத்தம் செய்வதையும், பக்கங்களை கிழிப்பதையும் தடை செய்ய வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி தமிழக அரசு செயல்படுவதால் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

சென்னையில் 2ம் தேதி தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் கூட்டம்


திமுக இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் அடுத்த மாதம் 2ம் தேதி நடக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைமை அலுவலகம் 20.06.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் அடுத்த மாதம் 2ம் தேதி சென்னை அன்பகம் அண்ணா மன்றத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டம் மேயர் மா.சுப்பிரமணியன், ஈ.ஜி.சுகவனம் எம்பி, ஆர்.ராஜேந்திரன், சுப.த.சம்பத், சுபா.சந்திரசேகர், அசன் முகமது ஜின்னா ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.
எனவே, அனைத்து மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு திமுக பொருளாளரும், இளைஞரணி செயலாளருமான (கூடுதல் பொறுப்பு) மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Monday, June 20, 2011

கோவை மாவட்ட திமுக இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் தம்புராஜா இல்ல மணவிழாவில் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


கோவை மாவட்ட திமுக இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் தம்புராஜா& சாந்தா தம்புராஜா ஆகியோரது மகள் மாதுளா&கார்த்திக் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோவையில் 19.06.2011 அன்று நடைபெற்றது. விழாவில், கலந்து கொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார். அருகில் முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, மணமகளின் சகோதரர் சோமு.

ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைப்போம் - கோவை பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு


“ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைப்போம்,” என கோவை பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கோவை மாவட்ட, மாநகர திமுக சார்பில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம் சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் ரோட்டில் 19.06.2011 அன்று மாலை நடந்தது. மாவட்ட செயலாளர் பொங்கலூர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் வீரகோபால் வரவேற்றார். இதில், திமுக பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த 2006 சட்டமன்ற பொது தேர்தலில் திமுக தனிப்பட்ட முறையில் 132 தொகுதியில் போட்டியிட்டு, மொத்தம் 87 லட்சத்து 28 ஆயிரத்து 361 வாக்குகள் பெற்றது. 2011 சட்டமன்ற பொது தேர்தலில் 119 தொகுதியில் போட்டியிட்டு, 82 லட்சத்து 49 ஆயிரத்து 991 வாக்குகள் பெற்றது. 5 லட்சம் வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்றுள்ளோம். எனவே, இந்த தேர்தலில் வாக்களிக்காத வாக்காளர்களுக்கும் நன்றி.
ஏழைக்கு ஒரு கல்வி, பணக்காரனுக்கு ஒரு கல்வி என இருக்கக்கூடாது என்பதால் கடந்த திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. அறிஞர்கள், கல்வியாளர்கள், அதிகாரிகள் என எல்லோருடைய கருத்தையும் கேட்டு உருவாக்கப்பட்டுள்ளது. 2010&11ம் ஆண்டில் 1 மற்றும் 6ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டது. இதையும் சிலர் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை சென்று தோல்வி கண்டார்கள். மீதமுள்ள வகுப்புகளுக்கும் தேவையான புத்தகம் சுமார் 200 கோடி ரூபாய் செலவில் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் சட்டமன்றத்தில் கொண்டுவந்த முதல் தீர்மானம் சமச்சீர் கல்வி ரத்து.
சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும், தமிழக அரசு உச்சநீதிமன்றம் வரை செல்கிறது. அங்கும் தோல்வியை சந்தித்தார்கள். சமச்சீர் கல்வியை கட்டாயம் அமல்படுத்த வேண்டும், சில மாற்றங்கள் செய்ய விரும்பினால் தனி குழு அமைத்து மாற்றம் செய்துகொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று சமச்சீர் கல்வியை அமல்படுத்தாமல் தமிழ், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடப்புத்தகங்களில் சில பக்கங்களை கிழிக்கவும், ஸ்டிக்கர் ஒட்டவும், கறுப்பு மை தடவி அழிக்கவும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்து, கல்வித்துறை அதிகாரிகள் அந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்
எத்தனையோ உயிர்களை காப்பாற்றிய கலைஞர் காப்பீட்டு திட்டத்தை ஜெயலலிதா ரத்து செய்துள்ளார். கருணாநிதியை பிடிக்கவில்லையென்றால் அவரது பெயரை நீக்கிவிட்டு வெறும் காப்பீட்டு திட்டம் என்று அறிவிக்க வேண்டியதுதானே? குடும்ப ஆட்சி, குடும்ப ஆட்சி என ஜெயலலிதா பேசி வருகிறார். ஏனென்றால் அவருக்கு குடும்பம் இல்லை. அதனால், அப்படி பேசி வருகிறார்.
புதிய தலைமை செயலகம் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ளது. கருணாநிதியின் சொந்த பணத்தில் இருந்து கட்டவில்லை. ஆனால், அதை நான் பயன்படுத்த மாட்டேன் என ஜெயலலிதா பிடிவாதம் பிடிக்கிறார். கடந்த முறை முதல்வராக இருந்தபோது புதிய தலைமை செயலகம் கட்டப்படும் என அறிவித்ததே அவர்தான். ஆனால், அவர் தற்போது புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது பற்றி விசாரணை நடத்தப்படும் என்கிறார். நாங்கள் பார்க்காத விசாரணையா? மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம்.
ஜெயலலிதா கடந்த முறை முதல்வராக பொறுப்பேற்றதும் மேம்பாலம் கட்டியதில் ஊழல் எனக்கூறி கருணாநிதியை அடாவடித்தனமாக கைது செய்தார். 5 ஆண்டுகள் கடந்த பின்னரும் அந்த வழக்கில் குற்றப்பத்திரிகைகூட தாக்கல் செய்ய முடியவில்லை.
எனவே, எந்த விசாரணையையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். கருணாநிதி கட்டிய தலைமை செயலகத்தை பயன்படுத்த மாட்டேன் என்றால் அவர் கட்டிய பாலத்தில் மட்டும் ஜெயலலிதா செல்வது ஏன்?
தேர்தலில் வெற்றியையும், தோல்வியையும் ஒன்றாக கருதவேண்டும் என்பார் அண்ணா. திமுகவைப்போல் வெற்றி பெற்ற இயக்கமும் கிடையாது, தோல்வி அடைந்த இயக்கமும் கிடையாது. இரண்டையும் ஒன்றாக கருதி நாட்டு மக்களுக்காக உழைப்போம். தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக இருந்து பணியாற்றும் வாய்ப்புகூட நமக்கு கிடைக்கவில்லை. பரவாயில்லை. மக்கள் மன்றத்தில் என்றும் பணியாற்ற தயாராக உள்ளோம். ஆட்சிக்காக, பதவிக்காக இந்த இயக்கம் துவக்கப்படவில்லை. ஏழை, எளிய மக்களுக்கு பணியாற்ற இந்த இயக்கத்தை அண்ணா துவக்கினார். ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கு இந்த இயக்கம் பாடுபடும். ஆட்சியில் இருந்தால் அதை ஒரு கருவியாக பயன்படுத்தி மக்களுக்கு பணிசெய்வோம். மக்களுக்காக உழைக்கும் நமக்கு என்றுமே சோர்வு ஏற்படாது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன், சுகவனம் எம்.பி., முன்னாள் எம்.பி.க்கள் மு.ராமநாதன், இரா.மோகன், முன்னாள் எம்எல்ஏக்கள் பா.மு.முபாரக், அருண்குமார், மாவட்ட திமுக பொருளாளர் ஆ.நாச்சிமுத்து, மாநகர திமுக பொருளாளர் பி.நாச்சிமுத்து, மாவட்ட திமுக துணை செயலாளர் ஆனந்தன், மாநகர திமுக துணை செயலாளர்கள் பைந்தமிழ்பாரி, மகுடபதி, மாநகராட்சி துணை மேயர் கார்த்திக், மேற்கு மண்டல தலைவர் வி.பி.செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் கார்த்திக் செல்வராஜ், தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் வடவள்ளி துரை, மாநகர திமுக இளைஞர் அணி அமைப்பாளர் முருகவேல், அனந்தநாராயணன் உள்பட பலரும் பேசினர். முடிவில், 3வது பகுதி கழக செயலாளர் வெ.நா.உதயகுமார் நன்றி கூறினார்.