கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, December 11, 2010

கொடிகளை மட்டுமல்ல; குடிகளையே இழக்கக்கூடிய கொடுமையான ஆட்சி அமைய இடம் தராதீர்கள் - கலந்துரையாடல் கூட்டத்தில் கருணாநிதி பேச்சு



சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, மாவட்ட வாரியாக திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் கருணாநிதி கலந்துரையாடல் நடத்தி வருகிறார். தர்மபுரி தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், சென்னையில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் 07.12.2010 அன்று காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடந்தது.
திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி தலைமை தாங்கினார். நிதி அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான அன்பழகன் முன்னிலை வகித்தார். துணை முதல்வரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின், துணை பொதுச் செயலாளர்கள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, அமைச்சர் பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன், அமைப்புச் செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட திமுக பொறுப்பாளர் முல்லைவேந்தன், தாமரைச்செல்வன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோகரன், வேடம்மாள், கீரை விசுவநாதன், எம்.ஜி.சேகர் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தேர்தல் மற்றும் கட்சிப் பணி குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
கலந்துரையாடல் அல்லது கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தி, எதிர்வரும் காலங்களில் நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் எவ்வாறு அமைய வேண்டும், கட்சிக்குள் எந்த அளவிற்கான கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் பேசியிருக்கிறோம். அந்தந்த மாவட்டங்களிலும் இருக்கிற குறைபாடுகளை மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள் எடுத்துச் சொல்லி ஒவ்வொரு மாவட்டத்தின் கலந்தாய்வுக் கூட்டமும் நடைபெற்றிருக்கிறது.
சுமூகமான சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட விரோதங்கள் இருந்தாலும், அவைகளையெல்லாம் கட்சிக்காக மறந்து விட்டு, ஒதுக்கி வைத்துவிட்டு, உங்கள் கருத்துக்களை சொல்வதற்காகவும், அதைக் கேட்டு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை முடிவு செய்ய இருக்கிறோம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் கலந்துரையாடல் கூட்டத்திற்கு முன்பு எனக்குக் கிடைத்த சில தகவல்கள் என்ற அடிப்படையில், இந்த மாவட்டத்தில் தி.மு.க.விற்கு நல்ல செல்வாக்கு இருந்து வருகிறது. தர்மபுரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, செம்மையாக, விரைவாகப் பணிகளை மேற்கொண்டு வருவது நற்பெயரை ஈட்டியுள்ளதோடு, தி.மு.க.வின் செல்வாக்கையும் கணிசமாக உயர்த்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் தி.மு.க.விற்கு தற்போது உள்ள நிலையில் சுமார் 35 சதவீத வாக்கு வங்கி உள்ளது. கூட்டணிக் கட்சிகளோடு இணக்கமான உறவும் உள்ளது. ஆனால் தி.மு.க. நிர்வாகிகளிடம் சிறு கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் எனக்கு செய்தி வந்துள்ளது.
இங்கே பேசிய ஒருவர், மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் தி.மு.க. கொடிகளை பொறுப்பில் உள்ளவர்கள் ஏற்றாமல் இருக்கிறார்கள் என்று சொன்னார். புகைப்படமும் கொடுத்திருக்கிறார். அது பற்றி இங்கே குறிப்பிட்ட நண்பர், அவரே பொறுப்பேற்றுக் கொண்டு அந்தக் கொடியை அங்கே ஏற்றி வைத்திருக்க வேண்டும். அவர் அங்கே கொடியை ஏற்றி வைத்து விட்டு இங்கே வந்து சொல்லியிருந்தால், அதை நாம் பாராட்டியிருக்கலாம். சென்னையிலிருந்து வேலு£ர் செல்கிற வழியில், காஞ்சிபுரம் கூட்டுச் சாலையில் தி.மு.க. கொடி உயரமான கம்பத்தில், மதுராந்தகம் ஆறுமுகம் மாவட்ட செயலாளராக இருந்தபோது இருந்தது. நான் ஒரு முறை அந்த வழியாகச் சென்ற போது பார்த்தேன். அந்த கொடியை காணோம். நான் சென்னைக்குத் திரும்பியதும், மதுராந்தகம் ஆறுமுகத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்தக் கொடி என்னவாயிற்று என்று கேட் டேன்.
அது கிழிந்து போய் விட்டது, வேறு கொடி ஏற்றி விடலாம் என்றார். ஆனால் இரண்டாவது முறை நான் அந்த வழியாகச் சென்ற போதும் அந்தக் கொடி ஏற்றப்படவில்லை. மூன்றாவது முறை அந்த வழியாக நான் சென்றபோது, சென்னையிலிருந்தே நானே ஒரு கொடியை எடுத்துக் கொண்டு, அந்த வழியாகச் சென்ற போது அங்கே இறங்கி அந்தக் கம்பத்திலே அந்தக் கொடியை நான் கட்டச் சொல்லி விட்டுத்தான் சென்றேன். இங்கே பேசிய நண்பருக்கு ஏன் அந்த உணர்வு வரவில்லை? பேசியவருக்கு கொடியின் மீது அக்கறையைவிட, பொறுப்பிலே உள்ளவர் மீது குற்றஞ்சாட்ட வேண்டும் என்பது தான் முக்கியமாக இருந்தது. அப்படியிருந்தால் கட்சியை வளர்க்க முடியாது.
நான் ஏன் இதை இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துச் சொல்கிறேன் என்றால், நம்முடைய கொடி தமிழகத்திலே பறக்கிறதா, இல்லையா என்பதே ஒரு கேள்விக்குறியாக இருக்கக்கூடிய அளவிற்கு விரைவில் ஒரு தேர்தல் நடைபெறவிருக்கிறது. அந்தத் தேர்தலில் நாம் வீழ்ச்சி அடைந்தால், கொடிகள் மாத்திரமல்ல, பல இடங்களில் நம்முடைய குடிகளையே இழக்கக்கூடிய அளவிற்கு நிலைமை ஏற்படலாம்.
அந்த அளவிற்குக் கொடுமையான ஒரு ஆட்சி உருவாகும் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. ஏனென்றால், அவ்வளவு வெறியோடு நம் மீது எதிர்ப்புகளை எல்லாம் காட்டி நம்முடைய சாதனைகளை எல்லாம் தூளாக்கி விட்டு, இவைகளையெல்லாம் நம்முடைய கலாச்சாரத்தை, திராவிடக் கலாச்சாரத்தை வளர்க்கக் கூடியவைகள், பெரியாருடைய சமத்துவபுரம் ஆனாலும், அண்ணாவின் பெயரால் அமைக்கப்பட்டுள்ள நூலகங்களானாலும், இவைகளெல்லாம் திராவிடக் கலாச்சாரத்தின் சின்னங்கள். இவைகளையெல்லாம் இடிப்பதுதான் என்னுடைய வேலை என்று சூளுரைத்துக் கொண்டு ஒரு அம்மையார் திராவிட நாட்டில், அதுவும் நம்முடைய தமிழ்நாட்டில் செயல்படப் பார்க்கிறார்.
அதற்கு நாம் இடம் தரப் போகிறோமா அல்லது ஒருவருக்கொருவர் குற்றம் குறைகளைச் சொல்லி, நமக்குள்ளே பிளவை அதிகப்படுத்தி, அவர்களுக்கு இடம் தரப் போகிறோமா என்பதுதான் கேள்வி. எனவே தர்மபுரி தெற்கு பகுதியில் மட்டுமல்ல, தமிழகம் எங்கும் ஒரு வார காலத்திற்குள்ளாக இங்கே வந்திருக்கிற நண்பர்கள் மட்டுமல்ல, திமுக தோழர்கள் அனைவரும் சேர்ந்து அந்தக் கொடிகளைப் பறக்க விடவேண்டும். அதைச் செய்வதற்கு நீங்கள் தயாராக இருந்தால்தான் தி.மு.க.வில் பற்றும், பரிவும், பாசமும் உங்களுக்கெல்லாம் உண்டு என்பதை நான் ஏற்றுக்கொள்ள முடியும்.
திராவிடர் கழகமாக இருக்கும்போது, நான் சேலம் மாடர்ன் தியேட்டரில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், முதன்முதலாக என்னை அழைத்து வேங்கன் என்பவர் நடத்திய கூட்டம் வேங்கடசமுத்திரத்திலேதான். அந்த வேங்கடசமுத்திரம், தர்மபுரி மாவட்டத்திலே உள்ள இடம் என்பதும், அந்தக் கூட்டத்திற்கு வந்துவிட்டு, திரும்புவதற்கு எங்களுக்கு அப்போது வாகன வசதி இல்லை. அந்தக் கூட்டத்திலே ஒரு நாடகம் நடத்தினார்கள்.
அந்த நாடக நடிகர்கள் வந்த வண்டியிலே ஏறிக்கொண்டு, நானும், சேலம் வெங்கடசாமியும் வேங்கட சமுத்திரத்திலேயிருந்து சேலத்திற்கு வந்து சேர்ந்தோம். அப்படிப்பட்ட பட்டிக்காடாக பயணத்திற்கு ஏதுவாக இல்லாத, சாலை வசதிகளே இல்லாத ஒரு இடத்திலேயிருந்து கூட்டம் நடத்திய காலந்தொட்டு, எனக்கு தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகள் நன்றாகத் தெரியும். அந்தப் பகுதியிலே வேங்கடசமுத்திரம் போன்ற இடங்களில் இந்நேரம் எந்த அள விற்குக் கட்சி வளர்ந் திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்றால், கொடிகளைக் கட்டவில்லை என்று ஒருவரைப் பார்த்து இன்னொருவர் குறை சொல்கிற அளவிற்குத்தான் வளர்ந்திருக் கிறது.
கட்டாத கொடிகளை நாம் கட்டுவோம் என்று கடமையாற்றுகிற அளவிற்கு வளரவில்லை என்பதை இன்றையதினம் உணர முடிகிறது. அந்த நிலை மாறி, நம்முடைய கொடிகளை எல்லா இடங்களிலும், உடனடியாக ஏற்றிவிட்டு, அந்தப் படங்களைக் கொண்டுவந்து என்னிடத்திலே காட்டுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.

No comments:

Post a Comment