கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 5, 2010

வரலாற்றுச்சுவடுகள் நூல் வெளியீட்டு விழாவில் முதல் அமைச்சர் கலைஞர்



தினத்தந்தியில் வெளிவந்த வரலாற்றுச் சுவடுகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்த நிலையில் அதன் வெளியீட்டு விழா 30.11.2010 அன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது. நூலைவெளியிட்டு முதல்வர் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

ஏதோ பத்திரிகை நடத்தியதால் அதிலே சம்பாதித்தார் என்று சொல்லி விட முடியாது. பத்திரிகை நடத்துபவர்கள் சிலர் சம்பாதிக் கின்றார்கள், இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. இருந்தாலும் நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் குறிப்பிட்டதைப் போல, பத்திரிகையிலே லாபம் வரலாம், பத்திரி கைகளினால் சம்பாதிக்கலாம், வருமானம் வரலாம், ஆனால் வருமானத்தை மாத்திரம் பார்த்து நாம் கட்டிக்காக்க வேண்டிய தமிழர் மானத்தை மறந்துவிடக் கூடாது. அதை மறக்காமல் தினத்தந்தி இருந்தது - இன்றைக்கும் அதை மறக்காமல்தான் தினத்தந்தி பத்திரிகை யினுடைய இந்த நூல் வெளியிடப்பட்டிருக் கின்றது.

இந்தப் பத்திரிகை நம்முடைய தமிழர் தலைவர் குறிப்பிட்டதைப்போல தலையங்கம் எழுத ஆரம்பித்திருக்கிறது. தினத்தந்திக்கு உள்ள ஒரு சிறப்பு அதிலே தலையங்கம் வராமல் இருக்கும். அது தான் ஒரு சிறப்பாக இருந்தது. இப்போது அந்தச் சிறப்புத் தேவையில்லை - நாம் சிறப்பாக இருந்தால் போதாது - மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் - அதற்கு நாம் நம்முடைய அறிவுரை களை அவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்து தலையங்கம் தீட்டத் தொடங்கி யிருக்கிறார்கள்.

முரசொலியிலே தலையங்கங்கள் எழுதி நிரம்ப நாள்களாகி விட்டன. யாரும் எழுதுவதில்லை. முரசொலியிலே எழுதுவதெல்லாம், மக்களுக்குத் தேவையான கருத்துகளைச் சொல்வதெல்லாம் உடன்பிறப்புக் கடிதம்தான். கடிதம் எழுதும்போது நேரடித் தொடர்பு - தலையங்கம் எழுதும்போது வேறுமாதிரியான தொடர்பு. அந்தத் தொடர்பை நான் சில நாள்களாக தினத்தந்தி பத்திரிகையிலே தேடிப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை யெனினும், எடுத்த எடுப்பிலேயே கண்ணுக்குத் தெரிகின்ற வகையிலே தலையங்கம் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவொரு ஆறுதல். அந்தத் தலையங்கமே எனக்கு ஆர்வத்தை எழுப்புகிறது என்று சொல்லமாட்டேன் - அந்தத் தலையங்கமே என்னை வாழ வைக்கிறது என்று சொல்ல மாட்டேன் - அந்தத் தலையங்கம் எனக்கு ஒரு ஆறுதல். வேறு பத்திரிகைகளின் தலையங்கங் களைப் படித்துவிட்டு, இந்தத் தலையங்கத்தைப் படிக்கும்போது எனக்கு ஒரு ஆறுதல். எப்படி வெளியிலே சென்று வீட்டுக்கு திரும்புகின்ற வரையில் - நமக்கு வேண்டாதவர்கள் நம்மை அடித்து, நொறுக்கி, ஏதேதோ செய்து காறித் துப்பி, காயப்படுத்தி நம்மை அனுப்பும்போது, வீட்டிற்கு வந்தால், வீட்டிலே இருக்கின்ற தாய் - ஏனப்பா! இவ்வளவு நேரம் கழித்து வந்தாய்? என்று கேட்டால் எவ்வளவு ஆறுதலாக இருக்கும்?

அதைப்போல, தினத்தந்தியின் தலையங் கத்தைப் படிக்கும்போது, எனக்கு ஒரு ஆறுதல். சொந்தங்கள் நம்மை சீராட்டும் போது, பாராட்டும்போது நமக்கு ஆறுதல்தான். விடுதலை பத்திரிகையின் தலையங்கத்தைப் படித்தால், எனக்கு ஆறுதல் மாத்திரமல்ல- ஒரு ஆக்ரோஷமே வரும் - விடுதலை பத்திரிகையின் மீது அல்ல- விடுதலையால் இன்று நேற்றல்ல-நான் பயிற்றுவிக்கப்பட்டு பல ஆண்டுக் காலம் ஆகிறது. குடிஅரசு- விடுதலை போன்ற இந்த ஏடுகள் எந்த அளவிற்கு தமிழனை தலைநிமிரச் செய்திருக் கின்றன என்பதை நான் அறிந்தவன். அறிந்ததை மற்றவர்களுக்குச் சொன்னவன்- இப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பவன். எனவே, நம்முடைய சிவந்தி ஆதித்தன் அவர்கள் ஒரு அரிய முயற்சியாக இந்த நூலை - நூல் என்றுதான் சொல்வேன். ஏனென்றால் இதுவொரு பத்திரிகையினுடைய தொகுப்பு அல்ல - இதுவொரு வரலாற்று ஏடு. இன்னும் ஒரு நூறாண்டுகளுக்குப் பிறகு படித்தாலும்கூட, ஒரு வரலாற்றுப் புத்தகத்தை படித்தது போன்ற ஒரு உணர்வு நிச்சயமாக எதிர்காலத் தமிழர்களுக்கு ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு அருமையான பொக்கிஷத்தை, கருவூலத்தை இன்றைக்கு சிவந்தி ஆதித்தன் வழங்கியிருக்கிறார். இதைப்போன்ற கருத்து நிறைந்த பெட்டகங்கள் நிரம்ப தமிழகத்திலே உலவிட வேண்டும். அப்படி உலவினால்தான், யார், யார் எப்படி வாழ்ந்தார்கள்? எந்தெந்த அரசு எப்படி நடந்தது? என்னென்ன செய்திகள் நம்முடைய நாட்டின் சரித்திரத்தில் அடங்கியிருக்கின்றன என்ற உண்மைகளை யெல்லாம் நாம் புரிந்து கொள்ள முடியும். உள்ளே ஏராளமான படங்கள் - நான் இவற்றையெல்லாம் சொல்வதற்குக் காரணம் - உள்ளே இவ்வளவு படங்கள் இருக்கின்றன என்று சொல்வதற்குக் காரணம், 300 ரூபாய் பெறுமானம் உள்ளதுதான் இந்தப் புத்தகம் என்பதை உங்களுக்கு வலியுறுத்து வதற்காகத்தான்.

இட்லர் பிறந்த இடம் - இட்லர் பிறந்த வீடு என்று இந்த மலரிலே இருக்கிறது. ஒரு மாடிக் கட்டடம் - அங்கேதான் இட்லர் பிறந்தார் என்று இருக்கிறது. அதைப்போல, முசோலினியும், அவரது நண்பர் களும், அவருடைய காதலியும் மக்களால் துரத்தப் பட்டு, அடிக்கப்பட்டு, தூக்கிலே தொங்க விடப்பட்டு, அப்படித் தொங்குகின்ற அந்தப் பிணங்களை ஊரார் பார்த்து கேலி செய்து விட்டு போகின்ற அளவிற்கு அவருடைய கொடுமை களையெல்லாம் சித்தரிக்கின்ற அந்தச் சரித்திரச் சான்றை படமாக - இருந்த படத்தை வெளியிட்டி ருக்கிறார்கள். இப்படி பல தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிலே இருக்கின்றன. காந்தியடிகளுடைய வரலாறு - வரலாற்று நிகழ்வுகள் - பண்டித நேரு அவர்களுடைய ஆற்றல் - பகவத் சிங்கினுடைய வீரம்- நம்முடைய தமிழ்த் தேச தியாகிகளுடைய தியாகம் -அத்தனையும் இந்தப் புத்தகத்திலே இருக்கிறது. ஒருமுறை இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்தால், பல புத்தகங்களைப் படித்த பயன் நிச்சயமாக உண்டாகும் என்ற அந்த உறுதியை உங்களுக்கு சொல்லி - இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். படித்துப் பயன்பெறுங்கள் - நாட்டு மக்கள் விழிப்புணர்வோடு உலவிட பயன்படுங்கள் - அதற்கு உறுதுணையாக உங்களுக்கு ஒரு ஊன்றுகோலாக நம்முடைய சிவந்தி ஆதித்தன் வெளியிட்டிருக்கின்ற இந்த அருமையான நூலினை 300 ரூபாய் விலைக்குத் தருகிறார்கள். (கைதட்டல்) (சிவந்தி ஆதித்தன் அவர்களும் கைதட்டி அதனை ஏற்றுக் கொள்கிறார்) இதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத்தான் மீண்டும் அதைச் சொன்னேன். (சிரிப்பு).

-இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் உரையாற்றினார்.

No comments:

Post a Comment