கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, March 17, 2011

தி.மு.க கொங்குநாடு முன்னேற்ற கழக கூட்டணி ஒப்பந்தம் அல்ல பந்தம்: கலைஞர்



தி.மு.க கொங்குநாடு முன்னேற்றக்கழக கூட்டணி ஒப்பந்தம் அல்ல பந்தம் என்று முதல் அமைச்சர் கருணாநிதி கூறினார்.

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து கொங்குநாடு முன்னேற்றக் கழகம் போட்டியிடுகிறது. கொங்குநாடு முன்னேற்றக் கழகத்திற்கு தொகுதிகள் ஒதுக்கீடு சம்பந்தமாக அக்கட்சியின் நிர்வாகிகள் 16.03.2011 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல் அமைச்சர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அவர்கள் மத்தியில் பேசும்போது முதல் அமைச்சர் கருணாநிதி கூறியதாவது:


நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார், சி.சுப்ரமணியம், பொள்ளாச்சி மகாலிங்கம் இவர்கள் எல்லாம் கொங்கு மக்களுக்காக தி.மு.க. அரசு தக்கது செய்ய வேண்டும் என்று என்னை வலியுறுத்தியபோது அவர்களுக்கு துணையாக தி.மு.க. அரசின் சார்பில் பொறுப்பேற்றிருந்த கோவை செழியனும், தி.மு.க. அமைச்சரவையில் வீற்றிருந்த கண்ணப்பனும் இதர நண்பர்களும் என்னை சந்தித்து வன்னிய மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததுபோல கொங்கு மக்களையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.


அந்த கோரிக்கையை வலியுறுத்தியபோது நிச்சயம் நிறைவேற்றுவேன் என்ற உறுதிமொழியை அளித்தேன். அந்த உறுதிமொழியை நான் காப்பாற்றினேன் என்பது உங்களுக்கு எல்லாம் நன்கு தெரியும். எனக்கு கொங்கு நாட்டு மக்களின் விவேகத்திலும், வீரத்திலும் பாசத்திலும் என்றைக்குமே நிறைந்த நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை இருந்த காரணத்தினால்தான், இருக்கின்ற காரணத்தினால்தான் பல வீரர்களுடைய சரித்திரங்களை எல்லாம் தொடர் ஓவியமாகத் தீட்டிய நான், பொன்னரையும், சங்கரையும் தொடர் ஓவியமாக தீட்டத் தொடங்கினேன்.


அத்தகைய வீரவரலாறு, திரையிலும் வெளிவர வேண்டும் என்பதற்காக இப்போது தேர்தலுக்கு முன்பே வெளிவருகின்றன படமாக பொன்னர் சங்கர் இருக்கும் என்பதை நீங்கள் அறியலாம். இன்னும் சொல்லப்போனால், கோவை மண்ணிலே நான் பிறக்காவிட்டாலும் என்னுடைய தொழிலில் முக்கியமான கலைத்தொழிலை கோவை மண்ணிலேதான் தொடங்கினேன்.


இப்படி பழைய நினைவுகள் எல்லாம் இன்றைக்கு என்னை ஏதேதோ உணர்வுகளுக்கு ஆட்படுத்தினாலும்கூட எல்லாவற்றையும் மீறிய சக்தியாக நம்மிடையே உருவாகி இருக்கிற நட்பு சக்தி, இன்றைக்கு மலர்ந்திருக்கிறது என்பதை நான் மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

கொங்கு முன்னேற்றக்கழக நிர்வாகிகள் பேசும்போது இந்த ஒப்பந்தப்படி, தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று சொன்னார்கள் இது ஒப்பந்தம் அல்ல. பந்தம். இந்த பந்தம் அறுபடாமல் அரசியலிலே நாகரீகத்தையும் பண்பாட்டையும் கட்டிக்காப்பாற்றுகிற வகையில் நாம் ஈடுபட்டிருக்கிறோம். என்றால் அதைப்போன்ற பண்பாட்டை காப்பாற்றுகிற, கட்டிக்காக்கின்ற இயக்கமாக நீங்கள் உருவாக்கி இருக்கின்ற இந்த இயக்கமும் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.


எனவே, நாமிருவரும் அணியாக அல்ல, ஓரணியாக இந்த தேர்தலிலே வெற்றியைப் பெற்று ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம் என்று சூளுரைத்து நீங்கள் தருகின்ற ஒத்துழைப்புக்கு முன்கூட்டியே என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல் அமைச்சர் கருணாநிதி கூறினார்.

No comments:

Post a Comment